Sunday, November 15, 2015

நம்மைப் போன்ற நாகரீகம்!

இஸ்லாமிய மாத வரிசைகள் நன்கு குரானை அறிந்து இஸ்லாமிய காலண்டரை முறையாகப் பயன்படுத்திவருபவர்களுக்குத்தான் தெரியக்கூடும். அது அறியாதவர்களிடம் மாதங்கள் பற்றிக் கேட்போமானால் அவர்கள் கொச்சையாக பேச்சு வழக்கில் உள்ள .. ஆஷரா, சபர் கழிவு, மவ்லூது, மைதீன் கந்தூரி. மீரான் கந்தூரி, விராத், தோவத்து, நோன்பு என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். இவை ஒத்துக்கொள்ளப்பட்ட இஸ்லாத்தின் மாதங்கள் அல்ல. ஆனால், ஒத்துக்கொள்ளப்பட்ட மாதங்களில் வரும் நிகழ்வுகள். 

முதலில் நிகழ்வுகளைச் சொல்லி மாதங்களை நினைவுகூறும் நடைமுறை வந்தது. பின்னர் அதுவே.. நிலைபெற்று விட்டது என்பதுதான் இத்தகைய தன்மைக்குக் காரணம்.

இஸ்லாமியர்களின் பன்னிரண்டு மாதங்களில் - துல்கஅதாஃ, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் மட்டும் புனிதமாதங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நான்கு மாதங்கள் தீமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் போர் செய்தல் தடுக்கப்பட்டு உள்ளது. போர்கள் கொலைக்கும், கொடும் குற்றங்களுக்கும் வழிவகுப்பதால் குறைந்த பட்சம் இந்த நான்கு மாதங்களிலாவது அமைதி நிலவட்டும் என்ற நோக்கில், இம்மாதங்களில் போரில் ஈடுபட இறைமார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 

மக்கத்துக்கு காஃபீர்கள் (முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்) பல்லாண்டுகளாக முஸ்லீம்களை மதீனாவிற்குள் நுழைய இடம் அளிக்க வில்லை. அவர்கள் அல்லாஹீவிற்கும் இறைத்தூதருக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று குவித்தனர். 

இவர்களிடம் தூது செல்வதற்காக நபிகள் ஒரு குழுவினரை போர் தடைசெய்யப்பட்ட புனித மாதத்தில் அனுப்பினார். ஆனால் காஃபீர்களைக் கண்டவுடன் தூதுக்குழுவினர் போர்ச்செயலில் ஈடுபட்டனர். இது முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவர்கள் தூதுக்குழுவினரைக் கண்டித்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து நபிகள் புனிதமாதத்தில் நடைபெற்ற போர்களை மிகவும் வெறுத்தார் என்பது தெரிகிறது.

ஆனால், இஸ்லாமியர்கள் போர் செய்யாத போது, எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் என்ன செய்வது எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது.. நீங்கள் அல்லாஹுவிடம் நம்பிக்கையாய் இருங்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புனித மாதங்களில் உங்களைத் தாக்குபவர்கள் மீது நீங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். என நபிகள் விலக்கு அளித்துள்ளார்.

போர் தவிர, விபச்சாரம், எளியோர்க்கு தீங்கு இளைத்தல் போன்றவையும் புனித மாதங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. புல் வெட்டுதல் மரம் வெட்டுதல் போன்றவை கூட ஹராத் (பாவச்செயல்) தான். இன்னும் சொல்லப் போனால் தாடி மீசை சிரைத்தல் கூட இந்த மாதங்களில் பாவக்கணக்கில்தான் வருகின்றன.

சிலர் (அறியாமையில்) ரமலான் மாதமும் புனிதமாதங்களில் ஒன்றாக கணக்கிடுவார். ஆனால் குரானில் நான்கு மாதங்கள் மட்டுமே புனிதமாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதங்களை தீமைகளில் இருந்து விலகி அல்லாஹ்வை அடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேற்கூரிய இந்த நான்கு மாதங்களைத் தவிர ஐந்தாவது மாதமாக ரமலானை சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனாலும், ரமலான் மாதம் இறைவனால் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட – நோன்புக்கான மாதம் தான்.

ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் இஸ்லாத்தின் காலண்டர், முஸல்மான்களின் வழிபாட்டு, மதம்சார் விழாக் கொண்டாட்ட நெறிமுறைகளை உலகெங்கும் அனைவருக்கும் ஒன்றாக பரிபாலிக்கிது. ஈது (விழா) நாளில் கருப்பர், சிவப்பர், பணக்காரன், ஏழை, மேற்கத்தியர், கிழக்கு நாட்டிலிருந்து வருபவர் போன்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் ஒன்றினைக்கிறது. அனைவரையும் “ஜம் ஜம்“ புனித நீரைப்பருகியவாரே மக்காவின் சதுக்கத்தில் அல்லாஹ்வைத் தொழ வைக்கிறது.

இம்மாதிரியான மதம்சார் ஒற்றுமையை விளைவிக்கும் காலண்டர் ஒன்று இருக்குமானல் அது இஸ்லாமிய காலண்டர் ஒன்றுமட்டும்தான். 

ஆக, இஸ்லாமிய காலண்டர்கள் ஆண்டுத்துவக்கமானது அதன் சுற்றான பன்னிரண்டு நிலவின் மாதங்களைத் தொடர்ந்து வருகிறது. வாரங்கள் சனியில் துவங்கி வெள்ளியில் முடியும் ஏழு நாட்களைக் கொண்டவை. நாட்கள் இரவு நிலவோடு ஆரம்பித்துத் தொடரும் இருபத்தி நான்கு மணிநேரத்தை உடைய ஒரு இரவும்-பகலும் சேர்ந்தது என்பனவற்றையெல்லாம் கண்டோம்.

இம்மாதிரியான உலகெங்கும் பயன்படுத்தப்படும் காலண்டர் போன்றது நம் தமிழ்க்காலண்டர் இல்லை. இது நமது இனக்குழுவின் பண்பாட்டின், பாரம்பரியத்தின் விழுமியங்களைக் கொண்டு நெய்யப்பட்டதாகும்.



நம்மைபோலவே, மாயன்களைப் போலவே, சீனர்களைப் போலவே - உலகின் வேறுஒரு பகுதியில் வாழ்ந்த ஆதிகுடிகளான, மற்றொரு நாகரீகத்தின் தோற்றுவிப்பாளர்களான சுமேரியர்களும் – துவக்க கால காலண்டரின் வடிவமைப்பாளர்கள் தான்.

Thursday, November 5, 2015

நல்லவை நான்கு

மாதங்கள் சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்தலை ஒட்டி ஆரம்பிக்கவும் முடியவும் செய்கின்றன. இப்படிச் சரியாக 29 அல்லது 30 நாட்கள் ஒரு மாதத்திற்கு. ஆண்டுக்கு 354 அல்லது 355 நாட்கள்.

அப்படியானால் கிரிகோரியன் காலண்டருக்கும் இஸ்லாமிய காலண்டருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் வருமே என்று கேட்கிறீர்களா? ஆமாம் வரும்தான். ஆனாலும் இப்படித்தான் இஸ்லாமிய காலண்டர் இயங்குகிறது. 

இந்த முன்னூற்றி அறுபத்து ஐந்தேகால் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவரும் காலம். மாறிமாறி வரும் பருவநிலை மாற்றங்கள் – இதைப்பற்றி யெல்லாம் இஸ்லாத்காலண்டர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், ஹிஜ்ரத் எனப்படும் ஆண்டுக் கணக்கானது முழுக்க முழுக்க தனித்துவமானது, நிலவைப் பின்பற்றியே செல்லக்கூடியது. நிலவு எல்லாப்பருவத்திலும் எந்நாளும் போல் தன் வளர்ந்து தேயும் பணியைச் செவ்வனே செய்வது போல், ஹிஜ்ரத்தும் தன்வழி செல்கிறது.

ஒரு காலண்டர் என்பது பண்பாட்டின் வெளிப்பாடு. பயன்பாட்டின் காலக்கோடு. அப்படித்தான் உலகின் எல்லாப்பாகங்களிலும் காலண்டர்கள் குறிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நைல்நதியின் வெள்ளப்பெருக்கை கணக்கில் கொள்வதற்காகத்தான் எகிப்தியர்கள் பருவநிலை மாற்றங்களை குறித்துக்கொண்டார்கள் எனப்பார்த்தோம். இதில் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்தும், அவர்கள் வாழ்வாதாரம் குறித்தும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.


அதே போல்தான் விவசாயம் சார்ந்த நாடுகளில், சூரியனின் அடிப்படையிலான காலண்டர்களும் தோன்றின. ஏனெனில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயமானது முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களுக்கு உட்பட்டது. பருவநிலை மாற்றமோ பூமி சூரியனைச் சுற்றிவரும் செய்கையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவேதான், விவசாய நாடுகளில் – நிலவின் சுற்றுக்களை மாதமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் – நிலவின் மாதத்திற்கும், சூரிய தொடர்புடைய ஆண்டிற்கும் சமன் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வாரக்கணக்கை ஆண்டுக்கணக்குடன் நம்மைப்போன்ற விவசாய நாடுகள் சமன் செய்ய முயற்சிக்கவில்லை. வாரங்கள் தன்போக்கிற்கு வந்துகொண்டேயிருக்கிறது.


அத்தகைய நிர்ப்பந்தங்கள் ஏதும் இஸ்லாமிய காலண்டர்களுக்கு இல்லை. இஸ்லாமிய காலண்டர்களின் உற்பத்தி ஸ்தானமான அரபுநாடுகள் பெரும்பாலும் பாலை வனத்தால் ஆனவை. அவற்றில் விவசாயம் நடத்துவது எளிதல்ல. (தற்போதைய துபாய் உட்பட்ட அரபுநாடுகளில் நவீன முறைகளைப்பின்பற்றி பெரும் தோட்டங்களை உருவாக்கி பாலை நிலத்தில் சோலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வேறு விசயம்). 

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு பாலைவனங்களில் விவசாயம் இல்லை. வணிகமே பிரதான தொழில். ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்ப்பதும் தொழிலாக இருந்திருக்கிறது. பெட்ரோல் கண்டுபிடிப்பெல்லாம் பிற்காலத்தியவை.

அரபுமார்கள் பெரும் பணம் மிகுந்த பிரபுமார்களாக இருந்திருக்கின்றனர். உலகின் பல தேசங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து பெரும் பொருள் குவித்திருக்கின்றன். அவ்வாறு வியாபாரம் செய்ய இயலாதவர்கள் – பெரும் தனவந்தர்களின் அடிமையாக இருந்திருக்கின்றனர். .இந்நிலையால்தான் ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு அரபுநாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. இந்நிலை அகற்றி ஏழைகளுக்கு அருள்பாலிக்கத்தான் தன் பெரும் போதனைகளை நபிகள்(ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்.

இத்தகைய வாழ்க்கை முறைக்கு சூரிய காலண்டர்கள் அவசியப்பட்டிருக்கவில்லை போலும். அதனால்தான் நிலவினை அடிப்படையான காலண்டர்களை அல்லாஹ் அருளினார் போலும். எனவேதான் சில சமயங்களில் தீபாவளியை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் பொங்கலை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் ஒரே கிரிகோரியன் ஆண்டில் இரண்டு ரம்ஸானும் வர நேர்கிறது.

ஆக, இஸ்லாத் மாதங்கள் ஆண்டிற்கு பன்னிரண்டு. 

1. முஃகர்ரம்

2. சஃபர்

3. ரபி உல் அவ்வல்

4. ரபி உல் ஆகிர்

5. ஜமா அத்துல் அவ்வல்

6. ஜமா அத்துல் ஆகிர்

7. ரஜப்

8. ஷஃபான்

9. ரமலான்

10. ஷவ்வால்

11. துல் கஃதா

12. துல் ஹிஜ்ஜா

என்பவைதான் அவைகள்.

இஸ்லாமிய மதம் தியாகத்தைப் போற்றுகிறது. தியாகமே இஸ்லாம் சொல்லும் அடிப்படை கருத்து. எனவேதான், இஸ்லாமிய காலண்டர்களும் தியாகத்தைக் குறிக்கும் மாதத்தினில் ஆரம்பித்து தியாகத்தைக் குறிக்கும் மாதத்தில் முடிவடைகிறது.


முதல் மாதமான முஃகர்ரமானது, முகமது நபிகள் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி அவர்கள் நாட்டில் பிரபுக்களின் (காஃபிர்கள்) கொடுமை வீழ்ந்து ஏழை எளியோரின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, கர்பலாக் என்னும் போர்களத்தில் தனது இன்னுயிரை இழந்ததைக் குறிப்பிடும் தியாக மாதமாகும்.


பன்னிரண்டாவது மாதமான துல்ஹிஜ்ஜாவோ – இறை நம்பிக்கையில் தலைசிறந்தவரான இப்ராஹிம் அலை அவர்கள் தனது அருந்தவப்புதல்வனான இஸ்மாயிலை இறைவனுக்கு பலியிடத்துணிந்த தியாகத்தைக் குறிக்கிறது. 


இவ்வாறான தியாகத்தைப்போற்றும் இஸ்லாமியக்காலண்டர்களில் நான்கு மாதங்கள் மிகப்புனிதம் வாய்ந்தவையாக அல்லாஹ் அறிவுறுத்துகிறார். இம்மாதங்களில் பாவங்கள் செய்யாத படிக்கு இஸ்லாமியர்களை ஆணையிடுகிறார்.

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்'' (ஸஹீஹுல் புஹாரி- -3197)

என்று ஸல் அவர்கள் விளக்குகிறார்.