Wednesday, April 29, 2015

நாள் - வாரம் - மாதம் - ஆண்டு!

காலண்டர் கணக்கீட்டினைத் பல்வேறு வகையாகவும் தொகுத்தலென்பது, தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இக்கட்டின் அடிப்படைக் கண்ணி ‘நாள்’ என்பதாகும். ஒரு பகலும், ஒரு இரவும் ஒரு நாள். ஒரு நாளுக்குள்ளும் மணிநேரமென்றும், நிமிடமென்றும், நொடிகளென்றும் உட்பிரவுகள் உள்ளன. இந்திய, தமிழமுறையில் நாளென்பது நாழிகையால் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்கத்திலிருக்கும் ஆங்கில கணக்கீட்டின் படி நாளென்பது நள்ளிரவில் துவங்கி நள்ளிரவில் முடிகிறது. ஆனால், தமிழ்சார் காலக்கணக்கில் ஆதவன் உதிக்கும் நேரத்தில் துவங்கும் முழுப்பகலும், தொடரும் முழு இரவும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஆங்கிலத்தைப் போல், ஒரு அரையிரவும் பின் வரும் பகலும் மறு அரையிரவும் அல்ல.

மீண்டும் கவனிக்கவும், சூரியனின் துவக்கத்திலேயே தமிழரின் நாள் துவங்குகிறது. இரவின் நடுவில் அல்ல. ஏன் இதை கவனத்தில் கொள்ளச்சொல்கிறேன் என்றால், ஆண்டுத்துவக்கத்தைப் பற்றிய உறுதிப்படுத்தலிலும் தமிழனின் ஆரம்பத்தில், ஆரம்பிக்கும் இக்குணத்தைக் கொண்டே, இறுதியில் நாம் ஒரு முடிவுக்கு வர இருக்கிறோம். (பின்னே, இறுதியில் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்!)

- மாதங்களை மாதர்கள் பயன்படுத்தத் துவங்கியதை அறிந்தோம். இந்த மாதங்கள் பன்னிருமுறை சுழல ஒரு முழு ஆண்டு நிறைவடைகிறது. இம்மாதங்கள் சூரிய அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது. உண்மையில், சந்திர அடிப்படையான மாதங்கள், சூரியனைச் சுற்றும் பூமியின் பாதையின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சந்திரமாதங்கள், சூரிய மாதங்களாக பொருத்திச் சொல்லப்படுகிறது. இந்தப் பொருத்துதலின் அடிப்படையில்தான் ஆண்டுதுவங்கும் மாதத்திற்கான கணக்கீடும் உள்ளது.

அதாகப்பட்டது சந்திர மாதங்கள், சூரியச்சுற்றில் பன்னிரு முறை வருகிறது. எனவே, பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப்பாதையை பன்னிரு பிரிவுகளாகப் பிரித்து, பெயரிட்டு அவை சூரிய மாதங்களாக்கப்படுகிறது. இதில் ஆரம்பகால (மூட) நம்பிக்கையான பூமியை சூரியனும், சந்திரனும் சுற்றிவருகின்றது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். பூமியில் இருந்த மனிதன் தானிருக்கும் புள்ளியை (அதாவது பூமியை) மையமாகக் கருதி, தன்னிலிருந்து பிற கோள்களின் பெயர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதால் இந்த தோற்றப்பிழை.

இதன்படியும், பூமியை சூரியன் சுற்ற எடுத்துக்கொளும் கால அளவும் ஓராண்டு. இந்த ஓராண்டுச்சுற்றுத்தளம் 30 டிகிரி பாகையாக (30 x 12 =360 டிகிரி) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் இராசியாக குறிக்கப்படுகிறது. எனவே, ஒரு ஆண்டு முழுமைக்காக சூரியன் இந்த பன்னிரு இராசிகள் வழியாகவும் நுழைந்து பயணிக்கிறது. இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசியையும் கடக்கும் காலமே ‘சூரிய மாதம்’ என்றழைக்கப்படுகிறது.

இந்;த சூரியமாதத்தையும் (இராசிகளையும்), சந்திரமாதத்தையும் நட்சத்திரங்கள் இணைக்கிறது. பொதுவாக நட்சத்திரங்கள் எண்ணிறைந்து உள்ளது. எனினும்;, ஆதிமனிதன் அவதானிப்பின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் முக்கியமானதாக குறிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத் தொகுப்பிற்கும் புவியில் உலவும் ஜீவராசிகளின் உருவ அமைப்பிற்கும் உள்ள பொருத்தத்தின் அடிப்படையில் இராசிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மேசம், ரிசபம் முதல் மீனம் வரை. (என்னா.. கிரியேட்டிவிட்டி!)

சந்திர மாதங்களுக்கான பெயர்கள், ஒரு சூரிய மாதத்தில் அதாவது ஒரு இராசியின் காலத்தில் சந்திர (முழுநிலவின் போது) பௌர்ணமி அன்று உதிக்கும் நட்சத்திரத்தைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக சூரிய மாதமான மேச இராசியில், பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரமான ‘சித்திரை’ என்பது குறிப்பிட்ட சந்திர மாதத்திற்கான பெயராகும். இதற்கான பட்டியில் பின்வருமாறு.
thanks : wikipedia.

இவையெல்லாம் மாதங்களைப் பற்றிய மேலெருந்த வாரியான குறிப்புகள். தவிரவும், காலண்டர் கணக்கீட்டில் மாதம் எனும் கட்டினைவிட சிறுபிரிவான வாரங்கள் எனப்படும் கிழமையும் உண்டு. கிழமை என்பது ஒளிரும் கோள் வரிசையான் அமைந்த முழுமை எனப் பொருள்பெறும். கிழமைகள் பெரும்பாலும் மதச்சடங்குகளும், அதற்கொப்ப வானியல் அறிவும் தொடங்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது. மாதத்திற்கான தேவையும், அதன் வானியல் தொடர்பும் வெளிப்படையானது. ஆனால், கிழமை எனப்படும் வாரத்திற்கான தேவையென்பது சற்று நுட்பமானது.

கோள்களைக் கண்டது மட்டுமல்லாது அவற்றின் குணங்களையும், அவை மனிதன் மீதான தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துகின்றன எனும் அறிவையும் ஆரம்ப கால மனிதன் பெற்றிருந்தான் என்பதும், அவற்றையே வழிபடு பொருளாக அமைவு செய்து, தன் உணர்விற்கும், உணர்ந்தவற்றிற்குமான தூரத்தை அறிவினால் தைத்தான் என்பதையும் உணர்ந்து, உணர்ந்து மெச்சலாம். அதுமட்டுமில்லாமல் இவையெல்லாம் உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும், இந்திய தேசத்தின் அறிவுசார் கொடையென்பது உள்ளபடியே, நம் பெருமை!

- ஆதிமனிதன் கிரகங்களையும் அதன் சுழற்சிப் போக்கையும் யுகித்து அறிந்திருந்தான். அவன் கண்ட ஒளிரும் கிரகங்கள் ஐந்தும் யாதெனின், செவ்வாய், அறிவன்(புதன்), குரு(வியாழன்) சுக்கிரன்(வெள்ளி), அடுத்தது காரி அல்லது மந்தன்(சனி). இவற்றோடினைந்த பகற்கோள் சூரியன். இராக்கோள் சந்திரன். ஆக ஏழும் சேர்ந்தது ஒரு வாரம். இவ்வாரக்கட்டுக்கள் மாதங்களை ஒட்டாமல் மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக சுழன்று கொண்டிருக்கிறது.

 இச்சுழற்ச்சியின் அடிப்படையில் ஐம்பத்தியிரண்டு வாரங்கள் அல்லது கிழமைகள் கொண்டது, ஒரு ஆண்டு.

ஆக, - சூரியனின் ஒரு முழுச்சுற்று ஓரு ஆண்டு.
-    சந்திரனின் ஒரு முழுச்சுற்று ஒரு மாதம்.
-    கோள்களின் வரிசைக்கிரமம் ஒரு வாரம்.
-    பூமி தன்னைத்தானே சுற்றும் ஒரு சுற்று நாள்.

Thursday, April 23, 2015

மாதா மாதங்கள்!

ஏப்ரல் முதலிலிருந்து முட்டாள்கள் தினம், சித்திரை தமிழ்புத்தாண்டா.. என்பதனைப் பற்றிய விளக்கங்களினால்.. நாம் ஆரம்பத்திலிருந்து விளக்கிவந்தில் சற்று விலகிப் போய்விட்டோம். எந்த ஒரு பெருங்கதைக்கும் கிளைக்கதைகளும் உண்டல்லவா? அது போக நாம் பயணித்துக் கொண்டிருப்பது காலண்டர் கதைகளுடன்.. வாழ்ந்து கொண்டிருப்பது காலண்டரில் குறிக்கப்பட்ட கதைகளுடன். எனவே அப்பப்போ குறிக்கப்பட்ட கதைகளையும் பற்றி கவனித்துக் கொள்ளுதல் இயல்பானதுதானே?

நேற்றுக்கூட அட்சயதிருதியை.. அதைப்பற்றியும் கூட பல்வேறுகருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் நாம் பார்க்கப்போவதில்லை. ஏனெனில், நாம் பார்த்துக்கொண்டிருப்பது வரலாற்றுக்குறிப்புகளே! நம்பிக்கையின்பாற் பட்டவைகளைப் பற்றியல்ல. நாம் தஞ்சைப் பெரியகோவிலை வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கலாம், ஆன்மீக தளமாவும் பார்க்கலாமென்றால்.. இங்கு நாம் காண்பது முதற்கண் கொண்டே! 

- கிரேக்கத்தில் தான், தற்போதைய காலண்டர்களின் ஆரம்பம் என்று பார்த்தோம். கிரேக்க காலண்டர்களின் மாதங்கள் இருந்ததையும் கவனித்தோம். இதில் ஆண்டு என்பது பூமி, சூரியனைச் சுற்றும் ஒரு முழுச்சுற்றிற்கான காலம். மாதம் என்பது பூமியை நிலா ஒரு சுற்றுசுற்ற எடுத்துக்கொள்ளும் காலம். இதில் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட வாரக்கணக்கு, இந்தியாவின் கருத்தியல் கொடை. அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கிரகங்களும் கோள்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்மோர் உணர்ந்திருந்தது ஆச்சர்யமல்லவா? வாரங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் குணநலன்களையும் அரிதியிட்டு வைத்திருப்பதும் சிறப்பேதான். 

வாரங்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக பல்வேறுவகையிலும் நாட்களைக் தொகுத்துக் கட்டிவைத்ததின் துவக்கம் மாதங்களில்தான் துவங்குகிறது. காலண்டரின் துவக்கமான கதை இதுவாகத்தான் இருக்கும் என ‘ஹெராடட்டஸ்’ உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் ஒப்புக்கொள்ளும் கதை இதுவே.
Photo : Tecfa education & technologies.

வரலாற்றின் மகத்தெளிவான பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நாட்களுக்கான பதிவுகள் தொடங்கிவிட்டன. நீண்ட தலையும் சப்பை மூக்கும் கொண்ட ‘நியாண்டர்தால்’ மனித இலம் கலாச்சார மேம்பாடுகளில் காலெடுத்து வைத்த காலம். வேட்டையாடி மனிதனாக இருந்த அவனுக்கு பெண்ணே சகலமுமாக இருந்தான். பெண்ணின் ‘படைக்கும் திறன்’ மீதான பிரமிப்பு அவனை வெகுவாக ஆட்டுவித்திருந்தது. ஆண்கள் பெரும்பாலும் திசையற்ற வேகத்தில் அலைந்து திரிபவர்களாக இருந்த காலத்தில் பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகமாக இருந்தது.

பெண், குழந்தையைப் ஈனுபவளாதலால் அவைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், ஆண்களால் வேட்டை உணவு கொண்டு வர இயலாத காலத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய அத்யாவசியமும் பெண்ணையே சார்ந்திருந்தது. எனவே, பெண்கள் தங்கள் வற்றாத உணவுத்தேவையின் பொருட்டு தாவர உணவை சேகரிப்பவர்களாகவும், மறு பயிரிடுதலின் தேவையை உணர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பெண்ணால் கண்டடையப்பட்ட பயன்படுத்திய தாவர வித்தின் மறுபயிரிடுதலை, ஆண் பயின்று செயல்படுத்தியபிறகு முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான விவசாயமாகவும், ஆத்தோர நாகரீகத்தின் துவக்கமாகவும் மாறியது.

தேவையே கண்டுபிடுப்பின் தாய் ஆதலால், தாயின் தேவைகள் அவளைக் கண்டுபிடிப்பாளியாக் செய்தது. கூரிய கவனிப்பும், நுட்பமான பிரதிப்படுத்தலும், பிறரையும் கற்றுணரச்செய்தலும் வல்லவளான தாய், சமுதாய பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமானதான சுயகுறிப்பெடுத்தலையும் செய்தாள்.

தனது தேவைகளை, உணர்வுகளை, உணர்ந்தவைகளை பெண் குறித்துவைக்கத் தவறினாளில்லை. ‘விவேகமான காயம்’ என அறிஞர்களால் விவாதிக்கப்படுவதும், ‘மனித சமுதாய உற்பத்தி வங்கி’யும், தனது சுய அடையாளங்களில் தலையாயதுமான தனது மாதவிடாய்ச் சுழற்சியை அவள் பதிவு செய்தாள். ஆரம்பகால குகைளில் பல்வேறுபட்ட நில அமைப்புகளிலும் காணப்பட்ட தொகுப்பு தொகுப்பான கீறல்களும், குறியீடுகளும் மாதர்கள் கண்ட மாதங்களை உணர்த்துகின்றன. மேலும் சந்திரனின் தேய்பிறை, வளர்பிறைகளுக்கும் தனது உடல் மாற்றங்களுக்குமான தொடர்பையும் பெண்ணே கண்டறிந்தாள்.

மனிதனின் உயர்வு என்கிற தொடரில் பனிப்பிரதேச மான் கொம்பு ஒன்றில் முப்பது நாட்களைக் கொண்ட மாதச்சுற்று காணப்படுவதாக பதியப்பட்டது. இரு பல்வேறு ஆராய்ச்சியாளர்களிடையே உலகலாவிய தர்க்கங்களுக்கு அடிகோலியது. இதனைப் பற்றிய கருத்தாய்வுகளின் முடிவில், இதில் காணப்படும் குறியீடுகளின் அடிப்படையில் இது சந்திரனின் சுற்றாக இருக்கலாம் என்றும், பெண் உதிரப்போக்கின் குறியீடாக இருக்கலாம் என்றும், இரண்டுமாகவும் இருக்கலாம் என்றும் ஐயமின்றி! அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக, இந்த மாதங்களை ஆரம்பித்தது மாதர்கள் என்பதால், மாதா மாதம் சம்பளம் வாங்கும் எல்லோரும் மாதாவிடம் கொடுத்துவிடுங்கள்!

Tuesday, April 14, 2015

வியப்பின் சரித்திரக் குறியீடு!

வடிவேலுவின் காமடியை மேற்கோள் காட்டாமல் எதையும் தாண்டிச் செல்வதென்பது அவ்வளவு சுலபமில்லை போலும். அன்றாட வாழ்க்கையில் நாளுக்கு ஒருமுறையாவது அப்படி நேர்ந்து விடுகிறது. 



அரசுப்பேருந்தை வடிவேலு விற்பது போன்ற ஒரு காமெடியில் “ஆமாங்க, நீங்க வாசிச்சா என் சொத்து, நான் வாசிச்சா உங்கள் சொத்து” என்று முடிப்பார். கிட்டத்தட்ட அதுபோல்தான் வரலாறும் சில சமயங்களில் அவரவர் இஷ்டத்திற்கு குறிப்பிடப்பட்டு விடுகிறது. வரலாற்று பதிவுகளில் மிகத் தெளிவான குறியீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்றாலோ, சில தரவுகளுக்கு பல அர்த்தம் கற்பிக்க ஏதுவாக இருந்தாலோ அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒரு முடிவை சொல்லிவிடுகிறார்கள். 

உதாரணமாக, இன்றைய மத்தியப்பிரதேசத்திற்கும் வடக்கே, ஏதோ ஒரு சிறுகோயில் மதிற்சுவரில் மீன் போன்ற உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.. அதைக் கண்டுணர்ந்த வரலாற்று ஆசிரியர், நம்மவராக இருந்தால், இந்தியாவின் இந்தப்பகுதிவரை இரண்டாம் வரகுணப்பாண்டியனின் ஆட்சிப்பரப்பு இருந்தது என்பதற்கான அடையாளம் இது என்று எழுதிவைப்பார். அதே, வேறுபுறத்தவராயின்.. இது பாண்டிய மன்னனை வென்றதைக் கொண்டாட, இங்கே அமைக்கப்பட்ட கோவில். நீண்டகாலமாக.. இப்புற மன்னனின் காலடியில் - செழியன், குப்புற விழுந்து கிடந்தான் எனப் பதிவார்.

இம்மாதிரிப் பிரச்சனைகளில், வரலாறு பல்வெறு இடங்களில் சிக்குண்டு கிடந்தாலும்.. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ.. தமிழ், தமிழரின் பண்பாட்டுத் தொண்மைதான் என்று தோன்றுகிறது. ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்வதும், அதை அடுத்த ஆள் வந்து மறுப்பதும், ஆதாரங்கள் விளக்கப்படுவதும், அவை ஆதாரங்களே அல்ல என விலக்கப்படுவதும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிலர் மறுப்பதும், சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தினால் பொதுக்கருத்து புறம் கிடப்பதும், பொதுவில் இருக்கும் சில தவறான கருத்துக்கள் ஏற்றம் பெறுவதும், சிலரால் முன்வைக்கப்பட்ட சரியான கருத்துக்கள், இது இன்னாரால் வைக்கப்பட்டது என்பதினாலேயே மறுக்கப்படுவதும் தமிழுக்கு நடப்பதுபோல், வேறெங்கும் காணோம். 

தமிழ்ப்பரப்பில் ஒரு கருத்தை எதிர்ப்பதனால் வரும் வெகுஜன கவனயீர்ப்பிற்காக சிலர், எதைச்சொன்னாலும் எதிர்ப்பது, ஆதாரங்களைக்களைக் கூறாமல் எதிராளியை மட்டம்தட்டுவதில் கவனம் செலுத்துவது போன்றவையும் மலிந்து கிடக்கின்றன. அதெல்லாம் நாம் மாற்ற முடியாது. எனவே, வேறு ஏதேனும் முடிந்ததைச் செய்வோம். 

- இக்கட்டுரைத்தொடரின் ஆரம்பம்.. தைய்யா? சித்திரையா? என நண்பர்களுடன் தர்க்கித்துக் கொண்டது என எற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் பள்ளி மேல்நிலை பயிலும்போது தமிழும், வரலாறும் படித்ததோடு சரி. இப்பாடங்களில் பட்டம் பெற்றவனல்லன், மலையளவு படித்தவனு மல்லன். ஆயினும் மனதளவு பிடித்தத்தின் காரணமாக சில தேடல்களுடனும் அவற்றில் கிடைத்த விடைகளுடனும் பயனித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில், இன்று சித்திரை ஒன்று.

இன்றைக்கு ஆண்டுப்பிறப்பா? இல்லையா? என்று சொல்லிவிட்டால் நாம் எதை நோக்கிப் போகிறோம் என்பது தெரிந்துவிடும். இக்கட்டுரையின் நோக்கம் முடிந்துவிடும். முடிவை உடைத்துச் சொல்லிவிட்டு, அந்த முடிவை ஏன் தெளிந்தேன் என்பதை விளக்கிச்சொல்வதும் ஒரு முறைதான். எனினும், இதைத் தொடராக எழுதிவருகிறேன் என்பதாலும்.. முடிவைச் சொல்லிவிட்டால் தொடரில் தொடர்ந்து விளக்கிவருவதின் சுவை(!) குறையும் என்பதாலும், இன்று புத்தாண்டா இல்லையா என்பதை கட்டுரை முடிவிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். 

- எந்த ஒரு உண்மையும் நிரூபிக்கப்படும் வரை வெறும் கருதுகோள்தான். உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். அந்த ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் நிறைய இருக்கின்றன. நீருபிக்கப்பட்ட உண்மைகள் குறைவுதான். எனினும் உண்மைகளை நிரூபிக்க முயலும் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு வாதத்தை முன்வைக்கையில், தன் சுயவிருப்பத்தை முன்வைக்காமல், தனது தர்க்கத்தை நிகழ்த்த வேண்டும். சுயவிருப்பத்திற்காக உண்மையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. 

தமிழ்க் காலண்டரின் ‘நதிமூலம், ரிஷிமூலம்’ தேடிய பலரும் கட்டுரையும் கருத்துரையும் அளித்துள்ளனர். தமிழர்கள் எப்போது ஆண்டுப்பிறப்பினை கொண்டாடினர் என்பதற்கு துணையாக இலக்கியத்தில், வானவியலில், கல்வெட்டுக்களில் தங்கள் தங்கள் தரப்பிற்கு ஆதரவாக ஆதாரங்கள் அளித்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் கூட்டி இரண்டால் வகுத்து அளிப்பது மட்டுமல்லாமல்.. உலகில் பல்வேறு காலண்டர்களின் தண்மை, அவற்றின் துவக்கம், அவற்றை அவ்வாறு துவங்கியதற்கான காரணங்கள், அவற்றைக் கொண்டாடிய மக்கள், அவர்களுக்கும் தமிழர்களுக்குமான பண்பாட்டு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள், அதனால் எழும் கருதுகோள்கள் போன்றவற்றைப் பற்றிய எனது இயன்றவரையிலான தேடல்களையும் தெரிவுகளையும், இவண் தெரிவிக்கிறேன்.

- தமிழ்க்காலண்டரின் ஆரம்பம் பற்றி ஆராய்கையில், தமிழனின் ஆரம்பமும் ஆராய வேண்டி உள்ளது. தமிழனின் தொண்மை பற்றி ஆராய்கையில் வரும் கருத்துக் குவியல்களின் தீர்க்கமின்மைதான் மேலே நான் விளக்கியவற்றின் அடிப்படை. 

“தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவானர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுனராத இயல்பினாளாம் எங்கள்தாய்" 
என பாரதி பாடியதைப் போல.. வரலாற்றைத் தேடுவோர், “தமிழினம் எப்ப பிறந்துச்சுன்னு யாருக்குமே தெரியலையாமப்பா..” என்று சொல்லி தப்பிவிட முடியாது. ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும். ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் ஒரு முடிவுக்கு வரலாற்று ஆசிரியர்கள் வந்து சேர்ந்ததாய் தெரியவில்லை. இதிலும், கொடுமையாக ஆய்வுகளுக்கு பல தரப்பட்ட தடையம்சங்கள் வேறு. பூம்புகாருக்கு அருகில் ஒரு பண்டைய தமிழர் பண்பாட்டுப் பெரு நகரம் இருந்ததாம். ஆதனைப்பற்றிய ஆய்வு நிதிப்பற்றாக்குறை எனச்சொல்லி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாம். அதைத்தாண்டியும் ‘திருவாளர். கிரஹாம் ஹான்காக்’ என்பவரின் கண்டுபிடிப்புகளும் நம்பகத்தன்மையற்றiவை என நகையாடப்படுகிறதாம்.

தமிழன் தொண்மை மிகுந்தவன் எனச் சொல்வதில் பலருக்கும், பலகருத்து. 

ஒருமித்த கருத்தென்பது தமிழனுக்கு ஒவ்வாத ஒன்றோ? ஏன சந்தேகிக்கும்படியாக.. இன்றைய தினத்தை ஒரு தொலைக்காட்சி புத்தாண்டாகவும், அடுத்த தொலைக்காட்சி தனது பிறந்த தினமாகவும், மற்றொரு தொலைக்காட்சி திங்கள் பிறந்ததென்றும், இன்னுமொரு தொலைக்காட்சி ஏதுமில்லா நாளாகவும் கொண்டாடுகிறது. 

ஹூம்… இவைதானோ ‘வியப்பின் சரித்திரக் குறியீடு!?’

Tuesday, April 7, 2015

....தொடரும் முட்டாள்கள் தினம்!

எதற்கும் காரண காரியம் உண்டு. காரணம் இல்லாமல் எதைச் சொன்னாலும் சும்மா கதை விடாதே என்று சொல்லவார்களல்லவா? இருந்தாலும் சும்மா கதைவிடுதல் என்பது சாத்தியமே இல்லை. அதிலும் காலண்டர் கதைகள் என்று வந்துவிட்டால் சும்மா கதைவிடுதல் கதைக்கு ஆகாது எனக் கூறிக்கொண்டு, நாம தொடங்குன கதைக்கு வருவோம்.
கிரிகோரிஸ் காலண்டரை ஏற்றுக்கொள்ளாதாரை ‘ஏப்ரல் முட்;டாள்கள்’ என்றனர் என்பதைத் தவிரவும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட காரணம் ‘அறிவாளிகள்’தானாம். அது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன் ‘முட்டாள்கள்’ யார் என்பதை பார்க்கலாம்.
- ‘முட்டாள்கள்’ எனும் வார்த்தை தமிழின் இடைக்கால பயன்பாட்டுச் சேர்க்கை. ‘முட்டாள்தனம்’ எனும் வார்த்தைக்கு, இன்று நாம் பயன்படுத்தும் அர்த்தத்திற்கு உண்டான முதன்மையான தமிழ்ச்சொல் ‘பேதைமை’ என்பது. பேதைமை கொண்டோர் ‘பேதைகள்’ ஆவர். 
உண்மையில், ‘முட்டாள்’ என்போர் ‘பல்லக்கு பயணங்கள்’ நிறைந்திருந்த காலத்தில் பல்லக்கு தூக்கிகளாக இருந்தோராவர். பல்லக்கை தூக்குவது ‘முட்டுக் கொடுப்பது’ என்றழைக்கப் பட்டதால் முட்டுக் கொடுப்போர் முட்டு+ஆட்கள் ஆயினர். பின்னர் சுயசிந்தனையின்றி ஏவலுக்கு வேலை பார்ப்போர் முட்டாள்கள் ஆயினர். கொஞ்சம் கொஞ்சமாக சுயசிந்தனையின்றி செய்யும் காரியம் முட்டாத்தனமாயிற்று. செய்பவர்கள் முட்டாள்கள்.
- நமது இயக்குனர் பாக்கியராஜ் சிறந்த அறிவாளி. அவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்பதுடன் சிறந்த குட்டிக்கதை சொல்லி எனும் புகழும் அவருக்கு உண்டு. அவர் நடத்தும் பாக்யா இதழின் கேள்வி-பதில் பகுதியில் அவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு கேள்விக்கும் சிறு சிறு கதைகள் சொல்லி விடையளிப்பது சுவாரசியமாக இருப்பதோடு அறிவுக்கும் விருந்தளிக்கும். 
ஒரு முறை முட்டாள்கள் யார்? அறிவாளி யார்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவாளி என்றெல்லாம் யாரும் கிடையாது. உலகில் மூன்று வகை முட்டாள்கள் தான் இருக்கிறார்கள். முதல்வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என அவர்களுக்கு தெரியாது, ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் தெரியும். இவர்கள் முட்டாள்கள். இரண்டாம் வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று அவர்களுக்கும் தெரியும், அடுத்தவர்களுக்கும் தெரியும் இவர்கள் பொதுவானவர்கள். இறுதிவகையானவர்கள் முட்டாள்கள் என தங்களுக்கு தாங்களே தெரிந்த வைத்திருப்பர். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்திருப்பர். இவர்கள் அறிவாளிகள் என்றழைக்கப்படுகின்றனர் என்று பதிலளித்திருந்தார்.
- பகுத்தறிவு மட்டுமின்றி சாதாஅறிவும் கூட பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனால்தான். கேள்வி-பதில் வடிவில்;தான் ‘கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்’ அவர்களின் தத்துவங்களை அவர்தம் சீடர் ‘பிளாட்டோ’ பரப்பினார். பிளாட்டோ எழுதிய ‘அரசியல்’ எனும் ‘அறிவு இயல் புத்தகம்’ நண்பர்களிடையே நெஞ்சு பொறுக்காமல் நேர்படப்பேசிய தத்துவ அரட்டைகளினூடே எழுந்த கேள்வி பதில்களின் தொகுப்பே. 
தத்துவ அரட்டைகள் என்று வந்துவிட்டால் நண்பர்களிடையே கூட ‘அதுவா? இதுவா?’ என்பது போய் ‘நீயா? நானா?’ என்றாகிவிடும். இதுவே எதிரிகள் என்று வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? 
- ஆரம்பகால ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டே இருந்தன என்பதைக் கண்டோம். இத்தகு ஆயுதப்போர்கள் மெல்ல... மெல்ல.. தத்துவமும், கண்டுபிடிப்புகளும் வளர வளர.. அறிவுப் போர்களாவும் மாறின. ஒருவர் கண்டுபிடித்த ‘அறிவியல் உண்மைகளை’ பிறர் தவறு என்று நிரூபித்தனர். மற்றவர் கண்டுபிடித்த ‘விஞ்ஞான மெய்யை’ இவர்கள் சுத்த டூபாக்கூர் என்று சொல்லினர். இப்போட்டிகள் ஒருவருக்கொருவர் அறிவாளி ஆவதின் வேகத்தைக் கூட்டவும், பிறரை முட்டாள்கள் ஆக்கியதின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வைத்தன. அப்படி கொண்டாடிய தினத்தை ‘முட்டாள்கள் தினம்’ என்றனர்; என்ற கதையும் உண்டு.

கி.பி.1562 ஆண்டளவில் கிரிகோரியன் காலண்டர் வந்தது. அதற்கு முன்னரே 1500 வாக்கிலேயே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கு சான்றுகள் உண்டு எனவும், இதே காலகட்ட ‘டச்சு மொழி’ இலக்கியங்களில் கூட முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகளும் உண்டு எனவும், 1466ல் மன்னர் பிலிப்பை அவரது அரசவை அமைச்சர் ஒருவர் சொற்போரில் வென்று முட்டாளாக்கிய தினமும் ஏப்ரல் ஒன்று எனவும்,இவை யெல்லாம் முட்டாள் தினத்திற்கான காரணங்கள் எனவும் கதைகள் சொல்லப்படுகிறது. 
கதைகள் என்னவாயிருந்தாலும்... எதையும் கொண்டாடவும் ஒரு குடுப்பினை வேண்டும். ஜனநாயகத்தின் மன்னர்களை, அமைச்சர்கள் நாள்தோறும் முட்டாளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் கொண்டாடிக் கொண்டா இருக்கிறோம்?!!

Wednesday, April 1, 2015

காலண்டர் கதைகள் - முட்டாள்கள் தினம்

ஆரம்ப கால இலண்டனில் ஒரு முக்கிய நாளினை மையமாகக் கொண்டு மற்ற நாட்களைக் குறிப்பிட்டனர் எனக் கண்டோம். நம் கிராமங்களிலும் அதே பழக்கம் இன்றும் ஒரு இயல்பாக இருப்பது ஒரு ஆச்சர்ய ஒற்றுமை.
இரவின் இருட்டில் முழுக்க கதவடைத்த படுக்கையறையின்; மேற்கூறையில் ரேடியம் ஓவியங்களாய் ஒளிரும் நட்சத்திரங்களையும், வளர்ந்து தேயாத நிலவின் அழகையும் ரசித்துக் கொண்டு உறங்கச் செல்லாமல், நிஜமாகவே வான் நிலவிற்கு நெருக்கமாக வாழும் நம் மக்களுக்கு அம்மாவாசையும், பௌர்ணமியும் மாதத்தின் முக்கிய நாட்கள். அதற்கும் மேலாக உள்ளூர் விழா நாட்கள், வீட்டு விசேச நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் ரம்ஜான், கிரிஸ்மஸ் போன்ற பொதுப் பண்டிகைகளும் முக்கிய நாளாகின்றன.
இம்முக்கிய நாட்களைக் கொண்டு, “போன பௌர்ணமிக்கு ரெண்டு நாள் இருக்க மாடு கன்று போட்டுச்சு” என்றோ.. “ அம்மாவாசக்கு மறுநா பெரியாத்தா செத்துப்போச்சு” என்றோ.. “ரெண்டு வருசத்துக்கு முன்ன தீபாவளிக்கு பெஞ்ச மழ.. அதுக்கப்பறம்.. அந்த மாதிரி மழ இல்லியேப்பா” என்றோ.. “வர்ற பொங்கலுக்கு மறுவாராம் என் பொன்னுக்கு கல்யாணம் வச்சிரலாம்னு இருக்கேன்”; என்றோ.. வெகு இயல்பாக சொல்வதை கவனித்திருக்கலாம்.
இத்தகு சொல்லாடலில், தேதி, கிழமை பற்றிய பிரக்ஞை பெரும்பாலும் இருப்பதில்லை. பேசுவோர்க்கு.. ஒரு நினைவிற் கொள்ளத்தக்க முக்கிய தினமும், அதனை ஒட்டிய தங்கள் வாழ்வின் நிகழ்வும் உணர்வோடு ஒன்றி அவர்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத நினைவுகளாகின்றன. இவர் போல் அல்லாமல், தேதியைக் குறித்துக் கொள்ளுவோர் சம்பவங்களை நினைக்க தாங்கள் எழுதிவைத்த குறிப்பேடுகளை தேட வேண்டியிருக்கிறது.
எந்த ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவே தன்முன்னிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவிற்கொள்ள ஏதுவாய் இருக்கிறது என்பது  மட்டுமின்றி, அவர்கள் வாழ்வை, உணர்வை இத்தகைய சொல்லாடல்கள் தாங்கி நிற்கின்றன. மேலும் இன்றும் கிராமத்து மக்களின் புழங்கும் ஒரு வழக்கத்திற்கும் அன்றைய ஆங்கில சம்பிரதாயத்திற்குமான தொடர்பு சிலவற்றை உணர்த்துகிறது. வரலாற்றினை ஆய்ந்து உரைக்கையில், பதிவுபெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தான் அனைத்து தெரிவுகளும் தெரிவிக்கப்படுகிறது என்பதில்லை. சிலவை உணர்வுகளைச் சார்ந்தும் யூக அடிப்படையில் நிறுவப்படுகிறது. இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், நமது கட்டுரையிலும் இவையெல்லாம் பின்னர் தேவைப்படுகிறது என்பதால்தான்.
இப்போதைக்கு, கொண்டாட்டதினங்கள் மறப்பதிற்கில்லை என்பதையும், அதை ஒட்டிச் சொல்லப்படும் நிகழ்வுகளும் மறப்பதற்கில்லை என்பதையும் எடுத்துக் கொள்வோம். இன்றைக்குக் கூட ஒரு கொண்டாட்ட தினம்தான் “ஏப்ரல் முட்டாள்கள் தினம்”. திட்டமிட்ட எவ்வித அரசு அல்லது மதம் சார்ந்த கொண்டாட்ட தினமாக இது இல்லாவிட்டாலும் பள்ளிப்பருவத்தில் நமக்கு அறிமுகமான இந்த தினத்தில் நண்பனின் சட்டையில் இங்க் அடித்து நமது சட்டையில் இங்க் வாங்கி கொண்டாடப்பட்டது எப்படி மறக்கும்.
எனக்கு ஒரு பழைய ஜெமினி கணேசன் படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அப்படத்தில் ஜெமினிக்கு இரு தாரங்கள். ஒருவர் வீட்டிற்குச் ஜெமினி செல்வது மற்றொருவருக்குத் தெரியாது. இருதாரங்களுக்கும் ஆளுக்கொரு பிள்ளைகள். இருவரும் நண்பர்கள். ஒருவன் வீட்டிற்கு மற்றவன் செல்லும் நாளன்று ‘ஏப்ரல் ஒன்று’ எனும் முத்திரையை மற்றொரு நண்பன் குத்திவிடுவான். பின்னர் வரும் ஜெமினியின் முதுகிலும் குத்திவிடுவான். இரண்டு சட்டையிலும் விழுந்த முத்திரையின் ஒற்றுமையையும் துவைக்கையில் மனைவி பார்த்துவிட்டு ஜெமினியையும் கேள்விகேட்டு துவைப்பது போல் காட்சி வரும்.
நமது தமிழ்ச் சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் இருக்கும் வரை ஏப்ரல் ஒன்று கலகலத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதெல்லாம் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னொரு நகைச்சுவையான முரண் என்னவென்றால், ஏப்ரல் ஒன்று அன்றுதான் அனைத்துக் வியாபார ஸ்தாபனங்களிலும் தங்கள் ஆண்டு வரவு செலவிற்கான கணக்குப்பதிவினைத் தொடங்குகிறார்கள் என்பதுதான். யாரை முட்டாளாக்கப் பாக்குறாங்களோ?
- நாம முட்டாள் தினத்தின் ஆரம்ப வரலாற்றைப் பார்த்தோமானல், அது கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. ஸ்காட்லாந்து கி.பி. 1660லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700 வாக்கிலும், இங்கிலாந்து 1752லும் ‘போதகர் கிரிகோரிஸின்’ காலண்டரை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னரே இறுதியில் பிரான்ஸ் 1852ல் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் அதுவரை புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த ‘ஏப்ரல் 1’ கைவிடப்பட்டு ‘ஜனவரி 1’ புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கங்கள் இதை ஏற்றுக் கொண்ட சூழ்நிலையிலும் இதனை எற்காத சிலர் தொடர்ந்து ‘ஏப்ரல் 1’ஐ யே புத்தாண்டு தினமாக கொண்டாடினர், அந்த ஜீவிகளை “ஏப்ரல் முட்டாள்கள்” என்றும் அத்தினத்தை “முட்டாள்கள் தினமா”கவும் கொண்டாடுகின்றனர்.
‘தீபாவளி’க்கு காரணமாக, அன்று நரகாசுரனைக் வதம் செய்த தினம் என்ற கதை இருப்பது மட்டுமல்லாமல், வேறு சில கதைகளும் உலவுவது போல் முட்டாள்கள் தினத்திற்கும் மேற்சொன்னதை தவிர இன்னும் சில கதைகளும் உலவுகின்றன. அது...