Tuesday, April 7, 2015

....தொடரும் முட்டாள்கள் தினம்!

எதற்கும் காரண காரியம் உண்டு. காரணம் இல்லாமல் எதைச் சொன்னாலும் சும்மா கதை விடாதே என்று சொல்லவார்களல்லவா? இருந்தாலும் சும்மா கதைவிடுதல் என்பது சாத்தியமே இல்லை. அதிலும் காலண்டர் கதைகள் என்று வந்துவிட்டால் சும்மா கதைவிடுதல் கதைக்கு ஆகாது எனக் கூறிக்கொண்டு, நாம தொடங்குன கதைக்கு வருவோம்.
கிரிகோரிஸ் காலண்டரை ஏற்றுக்கொள்ளாதாரை ‘ஏப்ரல் முட்;டாள்கள்’ என்றனர் என்பதைத் தவிரவும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட காரணம் ‘அறிவாளிகள்’தானாம். அது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன் ‘முட்டாள்கள்’ யார் என்பதை பார்க்கலாம்.
- ‘முட்டாள்கள்’ எனும் வார்த்தை தமிழின் இடைக்கால பயன்பாட்டுச் சேர்க்கை. ‘முட்டாள்தனம்’ எனும் வார்த்தைக்கு, இன்று நாம் பயன்படுத்தும் அர்த்தத்திற்கு உண்டான முதன்மையான தமிழ்ச்சொல் ‘பேதைமை’ என்பது. பேதைமை கொண்டோர் ‘பேதைகள்’ ஆவர். 
உண்மையில், ‘முட்டாள்’ என்போர் ‘பல்லக்கு பயணங்கள்’ நிறைந்திருந்த காலத்தில் பல்லக்கு தூக்கிகளாக இருந்தோராவர். பல்லக்கை தூக்குவது ‘முட்டுக் கொடுப்பது’ என்றழைக்கப் பட்டதால் முட்டுக் கொடுப்போர் முட்டு+ஆட்கள் ஆயினர். பின்னர் சுயசிந்தனையின்றி ஏவலுக்கு வேலை பார்ப்போர் முட்டாள்கள் ஆயினர். கொஞ்சம் கொஞ்சமாக சுயசிந்தனையின்றி செய்யும் காரியம் முட்டாத்தனமாயிற்று. செய்பவர்கள் முட்டாள்கள்.
- நமது இயக்குனர் பாக்கியராஜ் சிறந்த அறிவாளி. அவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்பதுடன் சிறந்த குட்டிக்கதை சொல்லி எனும் புகழும் அவருக்கு உண்டு. அவர் நடத்தும் பாக்யா இதழின் கேள்வி-பதில் பகுதியில் அவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு கேள்விக்கும் சிறு சிறு கதைகள் சொல்லி விடையளிப்பது சுவாரசியமாக இருப்பதோடு அறிவுக்கும் விருந்தளிக்கும். 
ஒரு முறை முட்டாள்கள் யார்? அறிவாளி யார்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவாளி என்றெல்லாம் யாரும் கிடையாது. உலகில் மூன்று வகை முட்டாள்கள் தான் இருக்கிறார்கள். முதல்வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என அவர்களுக்கு தெரியாது, ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் தெரியும். இவர்கள் முட்டாள்கள். இரண்டாம் வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று அவர்களுக்கும் தெரியும், அடுத்தவர்களுக்கும் தெரியும் இவர்கள் பொதுவானவர்கள். இறுதிவகையானவர்கள் முட்டாள்கள் என தங்களுக்கு தாங்களே தெரிந்த வைத்திருப்பர். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்திருப்பர். இவர்கள் அறிவாளிகள் என்றழைக்கப்படுகின்றனர் என்று பதிலளித்திருந்தார்.
- பகுத்தறிவு மட்டுமின்றி சாதாஅறிவும் கூட பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனால்தான். கேள்வி-பதில் வடிவில்;தான் ‘கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்’ அவர்களின் தத்துவங்களை அவர்தம் சீடர் ‘பிளாட்டோ’ பரப்பினார். பிளாட்டோ எழுதிய ‘அரசியல்’ எனும் ‘அறிவு இயல் புத்தகம்’ நண்பர்களிடையே நெஞ்சு பொறுக்காமல் நேர்படப்பேசிய தத்துவ அரட்டைகளினூடே எழுந்த கேள்வி பதில்களின் தொகுப்பே. 
தத்துவ அரட்டைகள் என்று வந்துவிட்டால் நண்பர்களிடையே கூட ‘அதுவா? இதுவா?’ என்பது போய் ‘நீயா? நானா?’ என்றாகிவிடும். இதுவே எதிரிகள் என்று வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? 
- ஆரம்பகால ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டே இருந்தன என்பதைக் கண்டோம். இத்தகு ஆயுதப்போர்கள் மெல்ல... மெல்ல.. தத்துவமும், கண்டுபிடிப்புகளும் வளர வளர.. அறிவுப் போர்களாவும் மாறின. ஒருவர் கண்டுபிடித்த ‘அறிவியல் உண்மைகளை’ பிறர் தவறு என்று நிரூபித்தனர். மற்றவர் கண்டுபிடித்த ‘விஞ்ஞான மெய்யை’ இவர்கள் சுத்த டூபாக்கூர் என்று சொல்லினர். இப்போட்டிகள் ஒருவருக்கொருவர் அறிவாளி ஆவதின் வேகத்தைக் கூட்டவும், பிறரை முட்டாள்கள் ஆக்கியதின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வைத்தன. அப்படி கொண்டாடிய தினத்தை ‘முட்டாள்கள் தினம்’ என்றனர்; என்ற கதையும் உண்டு.

கி.பி.1562 ஆண்டளவில் கிரிகோரியன் காலண்டர் வந்தது. அதற்கு முன்னரே 1500 வாக்கிலேயே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கு சான்றுகள் உண்டு எனவும், இதே காலகட்ட ‘டச்சு மொழி’ இலக்கியங்களில் கூட முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகளும் உண்டு எனவும், 1466ல் மன்னர் பிலிப்பை அவரது அரசவை அமைச்சர் ஒருவர் சொற்போரில் வென்று முட்டாளாக்கிய தினமும் ஏப்ரல் ஒன்று எனவும்,இவை யெல்லாம் முட்டாள் தினத்திற்கான காரணங்கள் எனவும் கதைகள் சொல்லப்படுகிறது. 
கதைகள் என்னவாயிருந்தாலும்... எதையும் கொண்டாடவும் ஒரு குடுப்பினை வேண்டும். ஜனநாயகத்தின் மன்னர்களை, அமைச்சர்கள் நாள்தோறும் முட்டாளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் கொண்டாடிக் கொண்டா இருக்கிறோம்?!!