Friday, July 31, 2015

சீனக்காலண்டர் 2

உலகில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிகோரிஸ் காலண்டரைத் தவிர்த்து, நீண்ட பாரம்பரியம் உடைய, அதிக அளவு மக்களால் கொண்டாப்படும் காலண்டரான, சீனக்காலண்டரைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் சீனர் என்பதால் உலகின் பிரம்மாண்டமாக கொண்டாப்படும் காலண்டர்களில் சீனக்காலண்டர் முக்கியமானதாகும். நம் தேசத்திலும் அவ்வளவிற்கு மக்கள் தொகை இருந்தாலும், பல்வேறு பட்ட பண்பாட்டுக்கலவையினால், சீனக்காலண்டர் அளவிற்கு கணக்கற்ற பேர்களால் கொண்டாடப்படும் ஒரே காலண்டர் நம்மிடம் இல்லை. நம்மிடமே இல்லையென்றால்.. பிற நாடுகளுக்கு வாய்ப்பேது?

சீனக்காலண்டர்கள் ஒவ்வொரு மன்னன் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதும் புதிவண்ணம் பெறுகிறது என்று கண்டோம். ஆனால், தொன்று தொட்டே சீனர்கள் வானசாஸ்திரத்தையும், ஜோதிடத்தையும் கொண்டாடினர். ஆரம்ப காலம் தொட்டே சீன அரசு வான சாஸ்த்திர ஆய்வுக்கென உயர்தர ஆராய்ச்சிக்கூடம் அமைத்து அதில் பல்வேறு அறிஞர்களை ஆராதிக்கும் வழக்கமும் கொண்டிருந்தது.

தற்போதைய பாரம்பரிய காலண்டராக சீனத்தில் கொண்டாடப்படும் காலண்டர் ஐந்நூறு வருடங்களுக்கு முன் இறுதிவடிவம் பெற்றது. இதனை வடிவமைத்தவர் சீனதேசத்தின் ஜோதிட மஹாமேதை திரு. டாங் ரோவாங். இவர் கி.பி. 1591 முதல் 1666 வரை வாழ்ந்ததாக குறிப்புக்கள் உள்ளன. இவர் வடிவமைத்த காலண்டரின் அடிப்படையிலேயே ஆண்டுகள் பன்னிரெண்டு தொகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் இடப்பட்டுள்ளது. 



கிளி ஜோசியமோ, நாடி ஜோதிடமோ, ஜாதக ஜோதிடமோ.. நம்மூர் விசயங்கள் எல்லாம் நன்கு கற்றுக்கொண்டோருக்கு மட்டுமே கைவரும். சீன ஜோதிடத்திலும் கடினமான கணக்குகள் இருந்தாலும், எளிமையான விளக்கங்கள் கொண்ட ஜோதிடமும், ரசனைக்குரியதாய் உள்ளது. எளிய முறையில் நாமே நமக்கு ஜோதிடம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளல் அவசியம். ஒரு 60 ஆண்டிற்கான பட்டியல் கொடுத்திருக்கிறேன்.

எலி ஆண்டு (2008, 1996, 1984, 1972, 1960)
இந்த ஆண்டில் பிறந்தவர்கள் திறமைமிக்கவர்களாகவும், விடா முயற்சி உடையவர்களாகவும் இருப்பர். மைனஸ் என்னவென்றால், இவர்கள் திறமைiயும் உழைப்பும் அனேகமாக அற்ப விசயங்களில் செலுத்திவிடுவதுதான்.

எருது ஆண்டு (2009, 1997, 1985, 1973, 1961)
இவர்கள் கடின உழைப்பாளர்கள். உண்மையானவர்கள். புத்திசாலி வாழ்க்கைத்துணை அடைந்துவிட்டால், நல்ல மேலாளர் கிடைத்தால் இவர்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. சொந்த முடிவுகளை இவர்கள் எடுக்க வேண்டாமே!

புலி  (2010, 1998, 1986, 1974, 1962)
நினைத்ததை முடிக்கும் வல்லவர்கள். பொசுக்கொன்று கோபம் வரும். எடுத்தெறிந்து விட்டு, அப்புறம் வருந்தி என்ன பிரயோஜனம்?

முயல் ( 2011, 1999, 1987, 1975, 1963 )
எக்கச்சக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். இந்த உணர்வே, இவர்கள் பெரிய காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைத்து விடும்.

டிராகன் ( 2012, 2000, 1988, 1976, 1964 )
இந்த வலிமைமிக்க புத்திசாலிகள், அடுத்தவர்களின் நிறை குறைகளை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

பாம்பு ( 2013, 2001, 1989, 1977, 1965 )
இவுங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனால், அட்ஜஸ்ட் பண்றதே வேலையாகப் போய் சுயம் என்பது சுருண்டு கிடக்க நேரிடலாம்.

குதிரை (2014, 2002, 1990, 1978, 1966)
தனித்துவம் மிக்கவர்கள். கலகவென கூட்டத்தில் இருக்க வேண்டும் என நினைத்தாலும், பழகும் தன்மையின்மையால் தனிமை இவர்களை வாட்டும்.

ஆடு (2015, 2003, 1991, 1979, 1967)
ஊரோடு ஒத்து வாழ்வதில் வல்லவர்கள். எதைச் செய்தாலும் யாரையாவது எதிர்பார்தே செய்ய வேண்டியிருப்பதுதான் சிரமம்.

குரங்கு (2016, 2004, 1992, 1980, 1968)
எந்த சூழ்நிலையிலும் வாழும்படி தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள். சமயங்களில் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பிவிடுவார்கள்.

சேவல் (2017, 2005, 1993, 1981, 1969 )
திட்டமிட்டு வாழ்வார்கள். கடமை தவறாதவர்கள். ரூல்ஸ் ராமானுஜங்கள்.

நாய் (2018, 2006, 1994, 1982, 1970)
கடும் உழைப்பாளிகள். ஆனால், எப்பொழும் கடுகடு வென்று தோற்றமளித்து சுற்றியிருப்பவர்களை பீதியிலேயே ஆழ்த்துவார்கள்.

பன்றி  (2019, 2007, 1995, 1983, 1971)
அன்பானவர்கள். அன்பாக நம்பிக்கை வார்தைகளைச் சொல்வார்கள். அதில் முக்கால் வாசி புருடாவாக இருக்கும்.

நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் என்று தெரிந்த பின், நமது குணங்கள், வாழ்வின் நிகழ்வுகள் பற்றி சீன ஜோதிடம் என்ன சொல்கிறது எனத் தெரிந்து கொள்வது சுலபம். எல்லா விசயங்களையும் இங்கே சொல்ல முடியாது என்பதால் அடிப்படையான சில குணங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒத்து வருதான்னு பாத்துக்கோங்க. தப்பாயிருந்தா என்னைத் திட்டாதீங்க சார்.. வேணும்னா, திரு.டாங் ரோவாங் சொர்கத்துலதான் இருப்பாரு. அவரைத் திட்டிக்கோங்க.

Tuesday, July 21, 2015

சீனக்காலண்டர் 1

நம்மூர் கோவில் பிரகாரங்களின் அழகிய தூண்களை காவற்காத்துக் கொண்டிருக்கும் சிங்க உடலும், யானை துதிக்கையுமாய், உருட்டும் விழிகளுடன், மிரட்டும் தோரணையில் நிற்கும் யாழிகளை உங்களுக்கு நன்றாகத் தெரியுமல்லவா.. இந்த யாழியின் சீன வடிவம்தான் டிராகன். 

டிராகன் என்றென்றம் சீனக் கொண்டாட்டங்களின் அடையாளம். எந்தச் சீன விழாவிலும் டிராகன் தன் வண்ணங்களைக் காட்டிச் சிலிர்க்க வைக்கிறது அனைவரையும். திருவிழா ஊர்வலங்களில் வளைந்தாடிச் செல்லும் டிராகன், ஒரு நீண்ட கலாச்சாரத்தை, தொன்றுதொட்டு வரும் பண்பாட்டை உலகெங்குமிருந்து அதனைக் காண்போர் மனங்களில் விசிறடித்துச் செல்கிறது.



சீனா ஒரு கலர்புல் தேசம். அதன் காலண்டரிலும் வண்ணங்கள் ஆயிரம். நம்மைப் போலவே சூரியச்சுற்றின் அடிப்படையில் ஆண்டுக்கணக்கையும், சந்திர சுற்றின் அடிப்படையில் மாதக்கணக்கினையும் கொண்டுள்ளனர். பாரம்பரிய சீனக்காலண்டருக்கு ‘ஷியா’ (Xia) என்று பெயர். ‘ஷியா’ என்பதற்கு பருவங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயத்தின் முறையில் எழுந்த காலண்டர் என்று பொருள். 

பூவுலகின் ஆதிகால காலண்டரில் சீனக்காலண்டரும் ஒன்றானாலும், தற்போதைய சீனக்காலண்டர்.. கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் வரைதான் வரிசை எண்களிடப்பட்டு உள்ளது. காரணம், சீனர்கள் தங்கள் மன்னர்கள் மாறும் தோறும் ஆண்டுக் கணக்கை ஆரம்பத்திலிருந்து துவங்குவதுதான். ஒரு சீன மன்னர் பதிவியேற்றார் என்றால், அது சீனர்களின் புது அரசாங்கத் துவக்கத்தின் முதல் வருடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். அன்று முதல் அவர் அரசராக இருக்கும் காலம் வரை தொடந்து வரிசையாக ஆண்டுகள் கணக்கிடப்படும். அந்த அரசர் மாறி வேறு ஒரு மன்னர் பட்டத்திற்கு வந்து விட்டால், அடுத்து வரும் ஆண்டு புதிதாக வந்த அரசருக்கான முதலாண்டு ஆகிவிடும். இவ்வாறான கணக்கெடுப்பினால் சீனத்தின் தற்பொதைய காலண்டர் எத்தனை ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது என்ற கணக்கெடுப்பு சிரமமாக உள்ளது. 

சீனத்தை ஆண்ட மன்னர்கள் மொத்தம் எத்தனை, ஒவ்வொருவரும் எவ்வளவு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர் என்ற கணக்கை அந்த சீனப்பெருஞ்சுவரில் எழுதிவைத்து இருந்தால் தேவலை. ஆனால், வருடாந்திரக் கணக்குகளோ, சரித்திரச் சுவடுகளோ இல்லாமல் இல்லை.. அதை தேடும் பணியில் அறிஞர்கள் தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கமான வரலாற்றுச் சண்டைகளுடன். 

சீனப்பெருஞ்சுவரைப் பற்றியும் நிறையப் பேசலாம்தான். சீனர்கள் தங்களை மங்கோலியர்களின் படையெடுப்பிலிருந்து காத்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக கட்டிக்கொண்ட பாதுகாப்பு கோட்டைதான் ‘சீனப்பெருஞ்சுவர்’. சீனத்தலைநகர் பீஜிங்கில் நடந்த பதினொன்றாவது ஒலிம்பிக்ஸ் போட்டியின் இலச்சினையாக இந்த சீனப் பெருஞ்சுவரே இருந்தது. சுவரில் சித்திரம் வரையலாம் என்பார்கள். சீனர்களோ ஒரு நீண்ட நெடிய பெருஞ்சுவரையே சித்திரமாக வரைந்து இருக்கிறார்கள்;. நிலவிலிருந்து பூமியைப் பாத்தால் பூமியில் தெரியும் ஒரே கட்டிடம் சீனப் பெருஞ்சுவர் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கட்டிடத்தை ‘சுவர்’ என்றா சொல்வார்கள். 

காலண்டருக்கு வருவோம். வருடங்களும், மாதங்களும் தான் ஆரம்ப கால சீனக்காலண்டரில் உள்ளது. வாரங்கள் சீனக்காலண்டரில் இணைந்தது ‘கிரிகோரிஸ் காலண்டரின்’ புழக்கத்திற்கு வந்ததற்கு அப்பால்தான். இன்றைய காலங்களில் நம்மைப் போலவே, சீனத்திலும் கிரகோரிஸ் காலண்டர்தான் நடைமுறைப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும் பண்பாட்டுக் காலண்டர்தான் அவர்களின் வாழ்வின் அடையாளம்.

சீனக்காலண்டரில், அதன் வருடங்கள் பன்னிரண்டு பன்னிரண்டாய் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திற்க்கும் ஒரு விலங்கின் பெயர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரைக் கொண்டு பிறக்கிறது. பெயரிடப்பட்ட விலங்கின் குணங்களால் அந்த ஆண்டும் நிறைந்து இருக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. அந்த ஆண்டு விவசாய விளைச்சல், வேலை, உற்பத்தி மற்றும் பிறக்கும் மனிதர்களின் குணாதிசியம் கூட அந்தந்த விலங்குகளின் அடிப்படையில் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.


ஆண்டின் விலங்குகள் பெயரைத் தெரிஞ்சுக்கலாம் : 1.எலி, 2.எருது, 3.புலி, 4.முயல்,  5.டிராகான்,  6.பாம்பு,  7.குதிரை, 8.ஆடு, 9.குரங்கு, 10.சேவல், 11.நாய், மற்றும் 12. பன்றி. ஆகியன.


இதன் அடிப்டையில் அமைந்த ஜோதிடமும் சீனத்தில் புழக்கத்தில் உள்ளது. அது நமது ஜோதிடத்தில் உள்ளது போல கடினக் கணக்குகளைக் கொண்டதல்ல.. நம்மைப் போன்ற எளியவர்களும் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

Friday, July 17, 2015

ஆடி ஆஃபர்

நமது காலண்டர் கட்டுரைத்தொடர்.. தொடர்ந்து இப்போது சீனத்தில் ஆய்ந்து கொண்டிருக்கிறது.

இன்று ஆடி முதல் நாள். ஆடி என்றாலே தமிழகத்தில் பல விசேசங்கள் களைகட்டும்…
  • ஆடி தள்ளுபடி விற்பனை
  • ஆடி கூழ் ஊத்துதல்
  • ஆடிக்கு புதுப்பெண்னை தாய்வீட்டுக்கு அழைத்தல்
  • ஆடி பதினெட்டு
  • ஆடி அம்மாவாசை

  ஆடிக்காத்தில் அம்மியும் பறத்தல் - போன்ற பல விசயங்கள் உங்கள் கவனத்தில் ஆடி.. ஆடி.. உங்களை அசர வைத்திருக்கும். இதற்கான காரணத்தை, ஆடி மாதத்தில் அப்படி என்ன கூடுதல் விசேசம் என்பதை.. ‘காலண்டர்கள் கதைகள்’ உங்களுக்கு எடுத்தியம்பக் கடமைப்பட்டுள்ளதால் அடுத்தவாரம் வரை உங்களைக் காக்கச்செய்யாமல் வழக்கமான கட்டுரைக்கு கூடுதலாக ஒரு ‘ஆடி ஆஃபர்’ கட்டுரை.

முதலில் இந்த ஆடி முதல் நாளைப்பற்றிக் காண்போம்.

நாம் ஏற்கெனவே மகரசங்கராந்தி என்றால் என்ன என்பதையும், மகர சங்கராந்தி அன்றுதான் அதாவது தை முதல் நாள் அன்றுதான் உத்திராயனத் துவக்கநாள் என்றும் பார்த்துள்ளோம். அவற்றைப் பார்க்கும் பொழுதே ஆடி முதல் நாள் கடகசங்கராந்தி அல்ல.. ‘தட்சினாயண புனித கால துவக்க நாள்’ என்று கண்டோம். அதுவரை வடக்கு நோக்கி பயணித்த சூரிய ஒளி இன்றுமுதல் அதாவது ஆடி ஒன்று முதல் தெற்கு நோக்கி பயணிக்க துவங்கும் நாள் என்பது நமக்குத் தெரியும்.

இதுவே இந்த நாளின் சிறப்பு. இது தவிர என்னவென்று பார்த்தால்… பொதுவாக ஆண்டிற்கு நான்கு பருவங்கள். வசந்தகாலம், வெய்யில்காலம், குளிர்காலம், இலையுதிர்காலம் என்பதுதான் அது. இவற்றில் உத்திராயனத்தில் வசந்தமும் வெய்யில்காலமும் முடிந்துவிடும். எஞ்சிய காலங்கள் தட்சினாயனத்தில்.

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தட்சிணாயன காலம் விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற காலம். கர்நாடகமே தடுத்தாலும் காவிரியில் வெள்ளம் வரும் மழைக்காலம். தூர்வாரப்படாத எரிகளிலும் நீர்தங்கும் கார்காலம். எனவே காற்றடிக்காலம் ஆரம்பிக்கையில் நடவு செய்தால் மழைக்காலத்தில் வளர்ந்தோங்கி, மழைமுடிந்து.. குளிர் துவங்க அறுவடைக்கு வந்துவிடும். எனவே மாமழை போற்றி வாழ்ந்த தமிழ்ச்சமுதாயம் ‘ஆடிப்பட்டம் தேடி விதைத்தது’. உழுதுண்டு வாழ்வாரும் அவரைத் தொழுதுண்டு வாழ்வாரும் ஆடிப்பட்டத்தை அடிபணிந்து மதித்தனர்.



அதன் விளைவே.. ஆடிக்கு அம்மனுக்கு ‘கூழ் ஊற்றும்’ நோன்பும்.  அதெப்படி என்றால், ஆடி துவங்கினால் விவசாயத்தில் கடும் உழைப்பைச் சிந்தத் துவங்கிவிடுவான் தமிழன். அவனது உழைப்பிற்கு ஈடுகட்ட எக்ஸ்ரா ஊட்டச்சத்து மிக்க பாணம் தேவைப்பட்டது. அதை வீடு வீட்டிற்கு காய்ச்சிக்குடிப்பது ஏற்கெனவே இருக்கும் வேலைப்பளுவில் இன்னும் கொஞ்சம் சேர்ப்பது போலாகிவிடும். எல்லோருக்கும்; தேவைப்படுமென்றால் ஏதேனும் ஒரு கம்பெனி ஆரம்பித்து பாட்டிலில் ‘கூழை’ அடைத்து விற்பனை செய்யலாம் என்ற ‘வணிகஅறிவு!’ தமிழனுக்கு இல்லை. 

அவனின் உழைப்பையும், உயர்வையும், கொண்டாட்த்தையும், திண்டாடட்டத்தையும் சாமியின் பெயரால் செய்வது தமிழனுக்கு கைவந்த கலை. எச்செயல் செய்யினும் அதை காரண காரியத்தோடு செய்யும் தமிழனின் சாலச்சிறந்த ஏற்ப்பாடு. எனவே, உழைக்கும் மக்களின் ஊட்டச்சத்து பானமான கூழையும் கடவுளின் பெயரால் குடுக்கலானான். ஆதனால், தவறாது தரமிக்க கூழும் தடையின்றிக் கிடைத்தது. தெய்வ சிந்தனையுடன் கிடைத்ததால் விவசாயியின் மனமும் உழைப்பில் ஒருமிக்கவும் ஏதுவாக இருந்தது. 

ஆடிக்கு ஏன் அழைக்கிறார்கள் என்பதும் இந்த விவசாய நடைமுறையின் பாற்பட்டே. விவசாயமே தலையாய தொழில். புதுமாப்பிள்ளையின் மனசு கூட அகசுகங்களில் சிக்கி, அடிப்படை வேலையிலிருந்து பிசகக்கூடும் என்பதால்.. ஆடியில் பெண்களைப் பிரித்து, மாப்பிள்ளையை மாட்டோடு அனுப்பி, வயக்காட்டோடு உழைக்க வைத்துப் பின்னர் வீட்டோடு சேர்த்தனர். ( ஆடியில் பெண்ணை வீட்டிற்கு அழைக்க, ஆடியில் பிள்ளைக் கருவானால் சித்திரையில் பிறந்து சிரமப்படும் என்பதும் ஒரு காரணம்தான் )

ஆடி பதினெட்டும் அப்படித்தான். ஆடி துவக்கத்திலிருந்து இருக்கும் நிலம் ஓழுங்கு செய்து விவசாய வேலைகளைப் பார்க்கத்துவங்கும் விவசாயி.. ஆரம்பக் கட்ட வேலைகளை முடித்து அடுத்துவரும் வேலைக்கு நீர் எதிர்பாக்க.. பதினெட்டாம் நாள் வருகிறது. அந்த பதினெட்டாம் நாளில் புதுப்புனல் வயல்புக மகிழ்வுறும் உழவன் அன்று கொண்டாடி.. அடுத்தும் உழைக்க ஓடுகிறான். இந்த ஆடிப்புனல் தேடிவரும் நாளே ஆடிபதினெட்டு.

நிலவோடு சேர்ந்து தன் காலண்டரை உருவாக்கிய மனிதன்.. நிலத்தோடு அதிகம் சேர்ந்து வாழும் மாதம் ஆடி. இந்த ஆடியில் வரும் அம்மாவாசையை அவன் அதிகம் கவனித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லையல்லவா?

அதெல்லாம் சரி.. ஆடித்தள்ளுபடி விற்பனைக்கும்.. இந்த விவசாயப் பாரம்பரியத்துக்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? 

அதாவது, ஆடியில் விவசாயம், விவசாயம் என்பதே கண்ணும் கருத்துமாக இருந்த தமிழன் ஆடியில் விவசாயம் தவிர பிற எல்லாக்காரியத்தையும் நிறுத்தி வைத்தான். சொத்துக்கள் வாங்குவதில்லை. விற்பதில்லை. கல்யாணம் காய்ச்சிகள் செய்வதில்லை. சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை. நகை நட்டுக்கள் வாங்குவதில்லை. கைப்பொருளை உழவுக்குத்தவிர வேறு எதற்றும் செலவழிப்பதில்லை. ஆடி ஆகாத மாதமில்லை. ஆடியில் விவசாயம் தவிர வேறு காரியங்கள் செய்வதில்லை அவ்வளவுதான்.

இதைச் சொல்லி வரும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சேய் ஒட்டகம், தன் தாயிடம் சில கேள்விகள் கேட்டது.

“அம்மா.. நமக்கு ஏன் முதுகில் இவ்வளவு பெரிய மலைபோன்று அசிங்கமாக இருக்கிறது?”

“நாம் பாலைவனத்தில் பயணிக்கும் போது.. நீண்ட நாட்கள் இடைவெளியில் கூட குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். அதற்காக கிடைக்கும் போது தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக்கொள்ள அத்தகைய அமைப்பு இருக்கிறது குழந்தாய்”; தாய் பதிலிறுத்தது.

“சரியம்மா.. நமக்கு ஏன் கால்கள் குதிரைபோல் வனப்பில்லாமலும், பாதங்கள் சப்பென்று அகன்றும் உள்ளது?”

“பாலைவனத்தில் புதைமணலில் நடக்க ஏதுவாகவே அப்படி அமைந்துள்ளது”

“ஏன் நமக்கு காளைகளைப் போல் கவின் மிகுந்ததாய் இல்லாமல் மூக்கின் சவ்வு மூக்குத்துவாரத்தையே மூடும் அளவு வளர்ந்து கவலை தரும்படி இருக்கிறது?”

“பாலைவனத்தின் புழுதிப்புயல் மூக்கில் நுழைந்து நமக்கு இன்னல் தரா வண்ணம் அவ்வாறு அமைந்துள்ளது. பிள்ளாய்”; என தாய் இதற்கும் பதிலளித்தது.

கடைசியாக குழந்தை ஒட்டகம் “அதெல்லாம் சரி அம்மா! நாம் ஏன் பாலைவனத்தில் இல்லாமல் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறோம்?” என்று கேட்டது..

தாய் பதில் சொல்லத்தெரியாமல் முழித்தது..

இந்த நிலைதான் தமிழனுக்கும் ஆடிக்கும் இப்பொழுது. எல்லாமே விவசாயம் சார்ந்து பழக்கத்திற்கு கொண்டு வந்த மனிதன் கொஞ்ச காலமாய் விவசாயத்தையே பழக்கத்திற்கு கொண்டு வராமல் போனான்.

ஆடியில் விவசாயம் தவிர பிற காரியங்களில் கவனம் செலுத்தாதே என்பது காலப்போக்கில்.. ஆடியில் எந்தக் காரியத்திலும் கவனம் செலுத்தாதே என்பதாகிவிட்டது. ஆடியில் பிற செலவுகள் செய்யாதே என்பது.. ஆடியில் செலவு செய்யாதே என்பதாகிவிட்டது.

இப்படிச் செலவு செய்யாமல் இருந்தால் சும்மாவிடுமா வியாபார உலகம்? ஆடியில் ஆஃபரைக் கொண்டுவந்தது. அதிகமாய் கூட்டிய விலையை சற்றுக் கூட்டிக் குறைத்து சரக்குகளை விற்று ஆடியின் அதிர்ஷ்டக்காற்றை அனுபவத்துக் கொண்டிருக்கிறது.

Thursday, July 16, 2015

பள்ளிக்காலத்தில்.. விட்டுப்பாடம் செய்யாவிட்டால் நாம் அன்றைக்கு வகுப்பறையில் ஆசிரியர் விட்டுப்பாடம் கேட்டுவிடக்கூடாது என வேண்டிக்கொள்வோம்.

ஆனால் அன்றைக்குப் பார்த்துத்தான்.. எப்பொழுதும் பீரியட் முடிந்து போகும் போது ‘வீட்டுப்பாடம் செய்தாச்சா?’ என்று கேட்கும் ஆசிரியர்.. வந்தவுடனயே பிரம்பை எடுத்து.. ஒரு வில்லன் முறை முறைத்து.. ‘இன்னைக்கு வீட்டுப்பாடம் செய்யாதவங்கள்ளாம் எந்திரி!’ என்பார். 

நமக்கு அல்லு இருக்காது. வகுப்பறையைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுவோம். நம்மைப் போலவே அடுத்தடுத்த வரிசையில் இருக்கிற நண்பனும் முழிப்பான். ‘அவனும் வீட்டுப்பாடம் செய்யல போல’ என நமக்குத் தெரியவரும். நமக்கு அடிவாங்க ஒரு துணையிருக்கிறான் என்று ஒரு நிம்மதிப் பெரு மூச்சு. அவனைப் பார்த்து தலையாட்டுவோம். அவனும் தலையாட்டுவான் இருவரும் எழுந்து நிற்போம். நம்மைப்பார்த்து இன்னும் ஓரிருவர் எழுந்து நிற்பார்கள். சேர்ந்து அடிவாங்குவோம். 

நம் வீட்டில் கரண்ட் கட்டாகும்.. உடனே என்ன செய்வோம்.. அடுத்த வீட்டில் கரண்ட் இருக்கிறதா? என்று பார்ப்போம். அங்கும் கரண்ட் இல்லாவிட்டால் ஒரு நிம்மதி.

இது மாதிரிதான் நாம் பக்கத்துவீட்டில் நடப்பது போல் நமக்கும் நடந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறோம். நமக்கு பிரச்சனைகளை பக்கத்திலும் பார்த்து திருப்தியடைகிறோம். அதே போல் காலண்டர் கதைகளிலும் நம்மையொத்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை உணரும் போது.. நம் முன்னோர்களும் என்ன செய்திருப்பார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இப்போது சீனாவில் இருக்கிறோம்.

சீனர்களுக்கும் நம்மவர்களுக்கும் வியாபாரத் தொடர்பு மட்டுமன்று கலை கலாச்சாரத் தொடர்பு நிரம்ப இருந்திருக்கிறது. அந்தக்காலத்திலேயே சீனக் கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்கள் இருந்திருப்பதைக் காண விந்தையாக இருக்கிறது. இங்கோ கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு 'காண்டன்' Canton எனப்படும் சீன நகருக்கு வடக்கே 500 மைல் தொலைவில் 'சௌன் சௌ' Chuan Chou'  என்ற பழமைவாய்ந்த துறைமுகப்பட்டினத்தில் கிடைக்கப்பெற்றது. வெறும் கட்வெட்டுக்கள் மட்டுமல்ல பண்டைத்தமிழர் குடியிருந்ததற்கான அடையாளமும் இத்துறைமுகப்பட்டினத்தில் கண்டெக்கப்பட்டுள்ளது. 



ஒரு சிவன் கோயிலும் இங்கு இருந்திருக்கிறது. கோயில் கொண்டுள்ள சிவானார் 'திருக்கதலீச்வரர்' ஆவார். கோயில் 'திருக்கதலீச்வரம்'. என்றழைக்கப்பட்டது. சிகாசாய்கான் 'Sesai Khan' எனும் தளபதியால் இக்கோயில் நிர்மாணிக்கப் பட்டிருந்திருக்கிறது. கோயில் திருப்பணிக்கு ஆணையிட்ட மன்னன் 'தவசக்கரவர்த்திப்பெருமான்' என்பவராவார். இக்கோயில் கி.பி 1200 வாக்கில் கட்டப்பட்ருக்கிறது.

கோயிலே கட்டப்பட்டிருக்குமானால் அதற்கு முன்பே இரு இனக்குழுவிற்கும் நல்ல தொடர்பிருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. பண்பாட்டு, கலை, வாழ்வியலில் மட்டுமல்ல.. மொழித்துவத்திலும் இந்திய, தமிழர்களுக்கும் - சீனர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 

சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் சித்திர எழுத்து வடிவம் கொண்டவை. அதே போல் சீன எழுத்துக்களும் சித்திர எழுத்துக்களே! சிந்து சமவெளியின் எழுத்துக்கள் தமிழ் மொழியின் மூல எழுத்துக்கள் என 'ஈராசுப்பாதிரியார்' பல கட்டுரைகளில் நிறுவியுள்ளார். 

இதற்கெல்லாம் மேலாக.. ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால்.. தமிழின் சிறப்பான எழுத்தாக நாம் கருதும் ‘ழகரம்’, அதன் உச்சரிப்பு மாறாமல் இப்போதும் சீனத்திலும் இருப்பதுதான். 



இவ்வாறெல்லாம் நமக்கும் சீனர்களுக்கும் ஒற்றுமையிருக்க காலண்டர் விசயத்திலும் தொடர்பில்லாமல் போய்விடுமா என்ன?

Thursday, July 9, 2015

நூடுல்ஸின் தாயகம்

பூமியில் மனிதன் தோன்றி பன்னெடுங்காலமானாலும், நாகரீகமடைந்த, அதிகாரப்பூர்வமான வரலாற்றினைத் துவங்கி வைத்த மனிதன் ஆற்றங்கரைகளில்தான் தன் முதற் குடியிருப்புகளை அமைத்தான். ஆறுகள் தான் அவன் கண்டு செய்த விவசாயத்திற்கு நீராகவும், அவன் வாழ்விற்கு வேராகவும் இருந்தது. ஆக, ஓடும் நதிகள்தான் நாடோடியாகத் திரிந்த மனிதனை ஓரிடத்தில் உறைந்து வாழ வைத்தவை.

நாடோடியாக என்ற பதம் கூட தவறுதான். காடோடி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், ஓரிடத்தில் உறைய ஆரம்பித்த மனிதன்தான் இது என்னுடைய இடம் என உரிமை கொண்டான். தன்னாடு, தன்மக்கள் என சொந்தம் கொண்டாடினான். அத்தகு இடத்தில் தன் வாழ்வாதார வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமைத்துக்கொண்டான். 

அலைந்து திரிந்த மனிதனுக்கு அனுதினமும் தனக்கு ஏற்படும் இடர்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதே வேலையாய் இருந்தது. ஓரிடத்தில் உறைந்து வாழத்துவங்கிய மனிதனுக்கு ஓய்வு நேரம் அதிகமிருந்தது. ஆனால் அவன் ஓய்ந்திருக்க வில்லை. கட்டிடம் கண்டான். கலைகள் கண்டான். மொழியும் மரபும் கண்டான். மனிதனுக்கான எல்லாமும் கண்டான். காலண்டரையும் கண்டுபிடித்தான்.

அத்தகு பண்டைய நாகரீகங்களில் குறிப்பிடத்தகுந்தது சில. நமது நாட்டில் இருந்து சிறந்த சிந்து சமவெளி நாகரீகம், எகிப்தின் நைல் நதி நாகரீகம், யூப்ரடிஸ் மற்றும் டைகரீஸ் நதிகளுக்கு இடையேயான சுமேரிய நாகரீகம் அல்லது மெசபடோமிய நாகரீகம், சீனத்தின் மஞ்சளாற்று நாகரீகம், ஆகியவை.



தற்போது இந்த வரலாற்று நாகரீகங்களின் சுவடுகள் நினைவாகக் கிடைத்த பழம் கட்டிடங்கள், அவற்றின் சிதைவுகள் மற்றும் சில பயன்படுத்தப்பட்ட ஓடுகளாகத்தான் இருக்கின்றன். அவர்கள் வாழ்ந்த நடைமுறைப் பண்பாடுகள் சடங்குகள் ஏடுகளின் வாயிலாக அறியக்கிடைக்குமேயன்றி.. எள்ளவும் நடைமுறையில் இல்லை. இதில் ஓரளவேனும் விதிவலக்கு என்றால் அது சீன நாகரீகமே! சீனத்தின் மஞ்சளாற்று நாகரீகத்தின் சுவடுகள் வெறும், நினைவாகக் கிடைத்த பழம் பொருட்களாக மட்டுமல்லால்.. தற்போதைய பழக்க வழக்கங்களிலும், சடங்குகளிலும் அவர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது அவர்களின் தனிச் சிறப்பு! அது மட்டுமல்லாமன் சீனாவிற்கு என்று பல சிறப்புக்கள் உண்டு.

பட்டென்றால் பட்டென்று நினைவுக்கு வருவது, வரவேண்டியது போத்தீஸோ.. ஆர்.எம்.கே.வியோ அல்ல. சீனதேசம்தான். சீனர்கள் தான் பட்டுப்புழுவிலிருந்து இழையெடுத்து பட்டாடை செய்வதெப்படி என்பதை கண்டடைந்தவர்கள். பட்டு மட்டுமா? பட்.. பட.. பட்டென்று.. பண்டிகைக்கு நாம் வெடித்துக் கொண்டாடும் பட்டாசையும் அவர்கள் தான் கண்டுபிடித்தனர். காகிதமும் அவர்கள் கண்டுபிடிப்புத்தான். தினம் பருகும் தேனீரும் அவர்கள்; தேடலின் விளைவுதான்.

இன்னபிற அன்றாடத் தேவைகளில் நாம் பயன்படுத்தும் ஏகப்பட்ட சாதனங்கள் சீனர்களின் சாதனைகள்தான். நாம்காணும் எல்லாக் கண்டுபிடிப்புகளிலும் ஓரு முக்கிய அத்தியாயம் சீனாவிலிருந்துதான் துவங்கும். இவ்வளவு ஏன்? இன்றைக்கு நம்பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்த உணவாகி.. தற்போது தவறான உற்பத்தி நிறுவனத்தின் போக்கினால் தடைசெய்யப்பட்டிருக்கும் நூடுல்ஸின் தாயகமும் சீனம்தான். சீனர்கள் தங்கள் மூக்கை சற்று சப்பையாக இருந்தாலும் எல்லாத்துறைகளிலும் நுழைத்துவிடுவார்கள். ஒலிம்பிக்ஸில் குவிக்கும் மெடல்கள் முதல்.. ஒரிஜினல் போலவே செய்யப்படும் மாடல்கள் வரை சீனர்கள் முத்திரை பதித்துவருவதே இதற்கு சாட்சி.

சீனர்கள் மக்கள் தொகையில் நமக்கு முன்னதாக இருக்கும் நாடு மட்டுமல்ல, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உட்பட்ட பல்வேறு சாமாச்சாரங்களில் முக்கியம் வகிக்கும் நாடும் கூட. இவ்வாண்டு குடியரசு தினத்திற்கு அமெரிக்க அதிபரே இந்தியா வருகிறார். நம் பிரதமரோ, பன்முறை சீனா சென்று, இருநாட்டு உறவுகளில் ஒரு நன்முறை உருவாக்க பிரயத்தனப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், சீனாவின் முக்கியத்துவத்தை.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் ஆரம்பக்காலம் தொட்டே நெருங்கிய தொடர்பு உண்டு. தென்கடலில் சேர, சோழ, பாண்டியர்கள் கோலோச்சிய காலத்தில் சீனத்தின் வியாபாரம் தமிழர்களோடுதான். சீனத்துப்பட்டும், யவனத்து கலைகளும் தமிழகத்தின் கரையொதுங்கிக் கிடந்தன. புத்த மத தொப்புள்கொடி பற்றி வந்த சீனப்பயணிகள் ‘யுவான்சுவாங்கும், பாஹியானும்’ நமது காஞ்சியின் சிறப்பையும், தமிழக வனப்பையும் மெச்சிச் செல்கின்றனர். கல்விக்கும் கலைக்கும் சொர்க்கபுரியாக அப்போதைய நமது நாகரீகம் சிறந்தோங்கியிருந்தாக அவர்கள் சொல்கின்றனர். (நம்மைப் பற்றி அடுத்தவர்கள் புகழமாறு ஆவண செய்ய வேண்டும் என போன வாரம் சொல்லியிருந்தேன். அதையும் அப்போதே நம்மவர்கள் செய்திருக்கிறார்கள் போல)

சீனத்துப்பயணிகள் தமிழர்களின் நாவாய்கள் மூலமாகத்தான் இந்தியாவிற்கு வந்து புத்த மதம் பயின்றிருக்கின்றனர். புத்தமதத்தையும் தமிழர்கள்தான் சீனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். மதம் மட்டுமா.. மருத்துவமும், இன்றளவும் சீனாவில் மரித்துவிடாதிருக்கும் மார்சியல் ஆர்ட்ஸ்களும் அதாவது தற்காப்புக்கலைகளும் தமிழர்கள் சொல்லிக்கொடுத்ததுதான். ஆதாரம் -  போதிதர்மர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ். (நமக்கு இதுபற்றியெல்லாம் எட்டாம் அறிவுதான்!)

இப்படியெல்லாம் தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு. பண்பாட்டுத் தொடர்பு. காலகாலமாக நம்முடன் நெருங்கிய தொடர்புள்ள சீனர்களின் காலண்டர்கள் சொல்லும் கதைதான் என்ன?

Friday, July 3, 2015

பூமியைச் சுற்றலாம்!

‘மகரசங்கராந்தி’ அன்றே பொங்கல். ‘பொங்கல்’தான் தமிழர் திருநாள். அன்றுதான் தன் உழைப்பிற்கு கைகொடுத்த பலன் கொடுத்த, அனைத்து இயற்கைத் தெய்வங்களுக்கும் தமிழன் நன்றி செலுத்துகிறான். முக்கியமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றான். 

அன்றுதான் தை மகளும் பிறக்கிறாள். தைமாதப் பிறப்பினை கண்ட தமிழன் அன்று ஆதவனுக்கு ‘உத்திராயனத் துவக்கம்’ என்பதை அறியாமலா.. தன் மாதத்தை துவங்கியிருப்பான்? அதுபோக, உத்திராயணம் முடிந்து தட்சிணாயணம் சரியாக ஆரம்பிக்கும் நாள் அன்றுதான் சரியாக ‘ஆடி மாதம்’ துவங்குகிறது. வேறு காலண்டர்களில் மிகச்சரியாக இந்த சூரிய ஓட்டத்தின் திருப்பங்களும், மாதத் துவங்கங்களும் ஓரே நாளில் இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழ் தவிர்த்த இதர காலண்டர்களில் மாதங்கள் தன்பாட்டிற்கு சுற்றிக் கொண்டிருக்க  கிரங்களும், பூமியும், சூரியனும் அதனதன் பாட்டிற்குச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மக்களும்தான்.

தட்சினாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பிக்கும் முதல் நாளினை ‘மகரசங்கராந்தி’ என அழைப்பதாகக் கண்டோம். உத்திராயணம் முடிந்து தட்சினாயணம் ஆரம்பிக்கும் நாளினை சூரியன் அன்றைய தினத்தில் இருக்கும் இடமான கடக ரேகையைக் கருத்தில் கொண்டு ‘கடகசங்கராந்தி’ என்று அழைப்பதில்லை. மாறாக ‘தட்சினாயண புண்ணியகால துவக்கநாள்’ என்று அழைக்கிறோம். புண்ணியம் இருக்கும் இடம், தமிழர்கள் இருக்கும் தென் திசை என்பதால் கூட இருக்கலாம்!

வேர்ச்சொற்களின் ஆய்வு கண்ட மூத்தோர் ‘எழு’ என்பது ‘மொழி’க்கான வார்த்தையாகக் கண்டனர். எனவேதான் ‘எழுது, எழுத்து’ என்பன போன்ற சொற்கள் புழக்கத்திலிருக்கின்றன. ‘தென் மொழி’ என்பதற்கான பொருளில் தான் ‘தென்+எழு’ என இருந்து ‘தெம்மெழு’ என திரிந்து.. ‘தமிழு’ என்றாகி இறுதியில் ‘தமிழ்’ என்றாயிற்று என்பார். தமிழ் உடன்  உகரம் சற்று அதிகமாக சேர்த்து உச்சரிக்கப்படும் ‘தென்+எழுகு’என்பதே ‘தெலுங்கு’ ஆயிற்று என்றும் மலையகத்து எழுவான ‘மலை+எழு’, ‘மலையாளம்’ ஆயிற்று என்றும் பகர்வர். இவ்வாறே, மொழி தோற்றிய முதல் இடம் ‘எழு+அகம்’ என்று இருந்து ‘ஈழகம்’ என்றாகி மருவி.. மருவி.. ‘ஈழம்’ என்றாயிற்று என்றும் சொல்வாருண்டு. எது எப்படியிருந்தாலும்.. தென்னகமாம் நம் தமிழகம், பல திண்ணிய விழுமியங்கள் சூழ்ந்த புண்ணியலோகம். 

இதைதெல்லாம் எழுதும் போது நாம் எவ்வளவும் பெருமைகொண்டவர்கள் என்பதில் சற்றுக் கர்வம் மிகுகிறது. நீங்களும் காலர்களைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள். நாம் பெருமைசாலிகள். இவ்வாறு என்னும் போதே இன்னொரு என்னமும் தலைதூக்குகிறது. நமது பெருமையை, நாம் மட்டுமே சொல்லிக் கொண்டிராமல் பிறரும் சொல்லும் வண்ணம் செய்யவேண்டும் என்பது. 

இல்லை என்றால், “பதினாறு வயதினிலே” படத்தில் ஸ்ரீதேவி, கமலிடம் ‘உங்கள எல்லாரும் கோபாலகிருஷ்ணன்னுதான கூப்புடுறாங்க?’ என்று கேட்பார். அதற்கு ‘எங்க கூப்புடுறாங்க.. நான்தான் சொல்லிக்கிட்டு திரியுறேன். எல்லாரும் “சப்பாணி.. சப்பாணி” ன்னுதான் கூப்புடுறாய்ங்க’ என்பார். அதுபோல் நாம் ஒன்று சொல்லிக் கொண்டிருக்க, அடுத்தவர்கள் நம்மை மட்டமாகவே நினைத்துக் கொண்டிருக்க என்று ஆகிவிடும். ஆகவே, ஆவண செய்யவேண்டும்.

‘எங்கெங்கோ போகும் மணம்.. சேர்த்ததனை சரியான பாதையில் செலுத்தனும் தினம்’ என்பதால் 'தினம்' பற்றிய கதைக்கே திரும்பவும் வருவோம்.

காலண்டரின் பெயர்க்காரணத்தில் இக்கட்டுரையை ‘காலண்ட்’ செய்த, அதவாது துவங்கிய நாம்.. காலண்டரின் ஆரம்பகால வரலாறு, மாதங்களை மாதர்கள் கண்டுபிடித்த வரலாறு போன்றவற்றை அறிந்தோம். 

நாட்களுக்கு சில சிறப்புக்களைக் கொண்டு கொண்டாடி வருவதை அறிந்த நாம், ஏப்ரல் முதல்நாள்.. ஏன்? ‘அறிவிலிகளின் நாள்’ என்பதையும் அறியத் தலைப்பட்டோம். நாள் மற்றும் வாரத்திற்கான பெயர்க்காரணங்கள். நாட்களின் பெயர்களைக் கொண்டு அவற்றை நல்லநாள் என்றும் கெட்டநாள் என்றும் சொல்வதற்கில்லை என்றும் தெரிந்து கொண்டோம். நாட்களைப் பற்றிய இன்ன பிறவும் அகத்தியர் வழிவந்த ஜோதிடத்தின் துவக்கத்தையும் கூட சற்று தொட்டுப் பார்த்தோம்.

பூமி சுற்றுவதின் அறிவியல், பூமிச்சுற்றின் கணக்கிடல், கிரகங்களின் சுற்று, வாரங்களுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பு போன்ற வற்றை அண்ட வெளிகளில் எல்லாம் சுற்றிச் சுற்றி பார்த்தும் வந்திருக்கிறோம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்... உங்களுக்கே தெரியும், கதை அல்லது கட்டுரைத் தொடர்களின் இடையிடையே முன்கதைச் சுருக்கமோ.. இதுவரையில் நாம் கடந்துவந்தவை பற்றியோ சொல்வது ஒரு தொன்றுதொட்ட வழக்கம் என்று. அந்த நடைமுறையைப் பின்பற்றியே நாமும் மேற்சொன்னவற்றை சற்று நினைவுகூர்ந்தோம்.

இப்போது, பொங்கல் வைக்கலாம்.. கட்டுரையை முக்கிய எல்லையை எட்டிப்பிடித்து விடலாம் என்றால்.. அதற்கு முன் தமிழன் ஏன் பொங்கல் வைத்தான்? அவன் கலையும் கலாச்சாரமும் என்ன? வாழ்வும் வழிபாடும் என்ன என்பதைப்பற்றியெல்லாம் பதிய வேண்டியிருக்கிறது. தமிழன் பண்பாட்டிலிருந்து பிறந்த காலண்டரை அடையாளப்படுத்த, ஆவணப்படுத்த சில சுற்றுக்கள் கொஞ்சம் சேர்த்து சுற்ற வேண்டியிருக்கிறது. அதற்காக.. நாம் தமிழனைப் போன்றே பன்னெடுங்கால பண்பாட்டுப் பின்னணி கொண்ட பல்வேறு இனக் குழுக்களையும் அவர்தம் காலண்டர்களையும் அறிந்து வரவேண்டியிருக்கிறது.



எனவே.. இதுவரை பூமி சுற்றுவதை பற்றி அறிந்து கொண்டிருந்த நாம், கொஞ்சம் பூமியைச் சுற்றி வருவோம்! முதலில் சீனா.