Sunday, November 15, 2015

நம்மைப் போன்ற நாகரீகம்!

இஸ்லாமிய மாத வரிசைகள் நன்கு குரானை அறிந்து இஸ்லாமிய காலண்டரை முறையாகப் பயன்படுத்திவருபவர்களுக்குத்தான் தெரியக்கூடும். அது அறியாதவர்களிடம் மாதங்கள் பற்றிக் கேட்போமானால் அவர்கள் கொச்சையாக பேச்சு வழக்கில் உள்ள .. ஆஷரா, சபர் கழிவு, மவ்லூது, மைதீன் கந்தூரி. மீரான் கந்தூரி, விராத், தோவத்து, நோன்பு என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். இவை ஒத்துக்கொள்ளப்பட்ட இஸ்லாத்தின் மாதங்கள் அல்ல. ஆனால், ஒத்துக்கொள்ளப்பட்ட மாதங்களில் வரும் நிகழ்வுகள். 

முதலில் நிகழ்வுகளைச் சொல்லி மாதங்களை நினைவுகூறும் நடைமுறை வந்தது. பின்னர் அதுவே.. நிலைபெற்று விட்டது என்பதுதான் இத்தகைய தன்மைக்குக் காரணம்.

இஸ்லாமியர்களின் பன்னிரண்டு மாதங்களில் - துல்கஅதாஃ, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் மட்டும் புனிதமாதங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நான்கு மாதங்கள் தீமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் போர் செய்தல் தடுக்கப்பட்டு உள்ளது. போர்கள் கொலைக்கும், கொடும் குற்றங்களுக்கும் வழிவகுப்பதால் குறைந்த பட்சம் இந்த நான்கு மாதங்களிலாவது அமைதி நிலவட்டும் என்ற நோக்கில், இம்மாதங்களில் போரில் ஈடுபட இறைமார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 

மக்கத்துக்கு காஃபீர்கள் (முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்) பல்லாண்டுகளாக முஸ்லீம்களை மதீனாவிற்குள் நுழைய இடம் அளிக்க வில்லை. அவர்கள் அல்லாஹீவிற்கும் இறைத்தூதருக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று குவித்தனர். 

இவர்களிடம் தூது செல்வதற்காக நபிகள் ஒரு குழுவினரை போர் தடைசெய்யப்பட்ட புனித மாதத்தில் அனுப்பினார். ஆனால் காஃபீர்களைக் கண்டவுடன் தூதுக்குழுவினர் போர்ச்செயலில் ஈடுபட்டனர். இது முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவர்கள் தூதுக்குழுவினரைக் கண்டித்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து நபிகள் புனிதமாதத்தில் நடைபெற்ற போர்களை மிகவும் வெறுத்தார் என்பது தெரிகிறது.

ஆனால், இஸ்லாமியர்கள் போர் செய்யாத போது, எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் என்ன செய்வது எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது.. நீங்கள் அல்லாஹுவிடம் நம்பிக்கையாய் இருங்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புனித மாதங்களில் உங்களைத் தாக்குபவர்கள் மீது நீங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். என நபிகள் விலக்கு அளித்துள்ளார்.

போர் தவிர, விபச்சாரம், எளியோர்க்கு தீங்கு இளைத்தல் போன்றவையும் புனித மாதங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. புல் வெட்டுதல் மரம் வெட்டுதல் போன்றவை கூட ஹராத் (பாவச்செயல்) தான். இன்னும் சொல்லப் போனால் தாடி மீசை சிரைத்தல் கூட இந்த மாதங்களில் பாவக்கணக்கில்தான் வருகின்றன.

சிலர் (அறியாமையில்) ரமலான் மாதமும் புனிதமாதங்களில் ஒன்றாக கணக்கிடுவார். ஆனால் குரானில் நான்கு மாதங்கள் மட்டுமே புனிதமாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதங்களை தீமைகளில் இருந்து விலகி அல்லாஹ்வை அடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேற்கூரிய இந்த நான்கு மாதங்களைத் தவிர ஐந்தாவது மாதமாக ரமலானை சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனாலும், ரமலான் மாதம் இறைவனால் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட – நோன்புக்கான மாதம் தான்.

ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் இஸ்லாத்தின் காலண்டர், முஸல்மான்களின் வழிபாட்டு, மதம்சார் விழாக் கொண்டாட்ட நெறிமுறைகளை உலகெங்கும் அனைவருக்கும் ஒன்றாக பரிபாலிக்கிது. ஈது (விழா) நாளில் கருப்பர், சிவப்பர், பணக்காரன், ஏழை, மேற்கத்தியர், கிழக்கு நாட்டிலிருந்து வருபவர் போன்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் ஒன்றினைக்கிறது. அனைவரையும் “ஜம் ஜம்“ புனித நீரைப்பருகியவாரே மக்காவின் சதுக்கத்தில் அல்லாஹ்வைத் தொழ வைக்கிறது.

இம்மாதிரியான மதம்சார் ஒற்றுமையை விளைவிக்கும் காலண்டர் ஒன்று இருக்குமானல் அது இஸ்லாமிய காலண்டர் ஒன்றுமட்டும்தான். 

ஆக, இஸ்லாமிய காலண்டர்கள் ஆண்டுத்துவக்கமானது அதன் சுற்றான பன்னிரண்டு நிலவின் மாதங்களைத் தொடர்ந்து வருகிறது. வாரங்கள் சனியில் துவங்கி வெள்ளியில் முடியும் ஏழு நாட்களைக் கொண்டவை. நாட்கள் இரவு நிலவோடு ஆரம்பித்துத் தொடரும் இருபத்தி நான்கு மணிநேரத்தை உடைய ஒரு இரவும்-பகலும் சேர்ந்தது என்பனவற்றையெல்லாம் கண்டோம்.

இம்மாதிரியான உலகெங்கும் பயன்படுத்தப்படும் காலண்டர் போன்றது நம் தமிழ்க்காலண்டர் இல்லை. இது நமது இனக்குழுவின் பண்பாட்டின், பாரம்பரியத்தின் விழுமியங்களைக் கொண்டு நெய்யப்பட்டதாகும்.



நம்மைபோலவே, மாயன்களைப் போலவே, சீனர்களைப் போலவே - உலகின் வேறுஒரு பகுதியில் வாழ்ந்த ஆதிகுடிகளான, மற்றொரு நாகரீகத்தின் தோற்றுவிப்பாளர்களான சுமேரியர்களும் – துவக்க கால காலண்டரின் வடிவமைப்பாளர்கள் தான்.