Thursday, May 28, 2015

வாளாயிருக்குமா… நாள்?

இன்று ‘ரூம் பிரஸ்னர்’ பெரும் புழக்கத்தில் உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன் சகல இல்லங்களிலும் நறுமணம் கமழ வைத்தவை ஊதுபத்திகள். தற்போது அவை பூஜைப் பொருட்களாக உருமாறி, இறையருள் பெறுதற்கு தூதுப்பொருள் ஆகிவிட்டது. அதன் சராசரி நறுமண அங்கீகாரம் மாறி, தெய்வீக அங்கீகாரம் பெற்று விட்டது.  சராசரி நறுமண தேவைக்கு ரூம் பிரஸ்னர். 

அகில், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களை புகையவிட்டு வசிக்கும் அறையில் நறுமணத்தைப் பரப்புவது பண்டைய அரசவை வழக்கம். அஃதொத்து முக்கிய ஸ்தலங்களிலும், மக்கள் கூடும் கோவில் போன்ற பொது இடங்களிலும் நறுமணம் பரவி மெல்ல மக்கள் வாழ்விடங்கள் தோறும் நாசியை நிறைத்தது.

நறுமணங்களை நேரடியாகப் புகைய விடுவதில் நடைமுறைச் சிரமங்கள் அதிகம் இருந்ததாலும், சந்தனமும் அகிலும் கிடைத்தல் குறைய ஆரம்பித்த காலத்திலும், அசராத அகிலம் சிலவகைக் இயற்கலவைகளுடன் எளிய ஊதுபத்தியைக் கண்டுபிடித்து, மேற்சொன்ன பழக்க வழக்கங்களை மேற்கொண்டது. 

நவீனங்கள் பெருக ஊதிபத்தியிலும் உயர்தர நறுமணங்கள் கொண்ட பாரம்பரிய தயாரிப்பு முறையில் உற்பத்தியின் அளவு குறைந்தது. அதனை முறைப்படி தாயாரிக்கத் தெரிந்தவர்களும் அருகினர். தன் ஒற்றைக்கால் தவத்தால் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருந்த ஊதுபத்தியின் அன்றாடப் பயன்பாடு குறைந்து தெய்வப்பொருளாக மாறியது. 

தெய்வப் பொருளானாலும் தேய்வில்லாத தேவையை உடைய ஊதுபத்தி தயாரிப்பில் செயற்கைப் பொருட்களை நுழைத்து இயந்திரங்களால் தயாரித்து அழகிய உறையில் அசுர விளம்பரங்களுடன் விற்க ஆரம்பித்து விட்டது பன்னாட்டு வியாபார மூளை. ஆனால் விற்கப்படும் ஊதுபத்திகளில் ஊதுபத்தி என்ற பெயரைத்தவிர பண்டைய இயற்கை உள்ளீடுகள் எதுவும் தற்போது இல்லை. இன்றைய ஊதுபத்தியும், ரூம் பிரஸ்னரும் முழுக்க முழுக்க வேதிப் பொருட்கள்.

 எல்லாத்துறைக்கும் மேற்சொன்ன வரலாறுதான். ஜோதிடம் மட்டும் தப்பிக்குமா என்ன? மக்களிடையே ஜோதிடத்திற்கும் அபரிவிதமான தேவை இருக்கிறது. தேவையிருக்கும் துறையை மீடியா ஆதரவுடன் பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பசியுடன் சகல பித்தலாட்டங்களும் கலந்து கபளீகரம் செய்யும் என்பது மக்களுக்கும் தெரியும். அதையும் மீறிய நம்பிக்கையை இன்னமும் ஜோதிடத்தின் மீது வைத்திருக்கின்றனர். ஏனெனில், ‘நம்பிக்கை அதானே எல்லாம்!’

இந்த நம்பிக்கைகளைக் காசாக்கும் நவீன ஜோதிடத்தில் குருட்டுத் தனமாகச் சொல்லப்படும் அ~;டமியும், நவமியும் தீட்டு நாட்கள் எனும் பொய்யை நாம் திடமாக எதிர்க்கிறோம். ஆனால், நாள் எனும் காலத்துண்டிற்கு குணங்களே இல்லை. எல்லா நாளும் ஒன்றுபோல் தான் என்றும் கண்மூடித்தனமாகச் சொல்லிவிட கூடாது. 

ஒவ்வொரு நாளிற்கும் குணங்கள் உண்டு. ஒவ்வொரு பொழுதிற்கும் குணங்கள் உண்டு. இந்த குணங்கள் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இயற்கையால் விளைபவை. இந்த இயற்கையால் விளைந்த குணங்களைத்தான் முன்னர் குறித்து வைக்கத்துவங்கி நாளக்கி, வாரமாக்கி, மாதமாக்கி, வருடமாக்கி, காலண்டராக்கினர். ஜோதிடமாக்கினர். அத்தகைய ஜோதிடத்தில் குறிக்கப்பட்ட தினங்களிலும் குணங்களிலும்; அர்த்தம் உண்டு. உண்மை உண்டு. 

காலங்களின் போக்கில் மென்மையும் உண்டு. வன்மையும் உண்டு. மென் காலங்கள் எளிமையானவை. சுலபமாக செயல்பட வழிவிடுபவை. வன்காலங்கள் அத்தகயவை அல்ல. அதற்காக அவையெல்லாம் தீண்டத்தகாதவை அல்ல. கவனமாகக் கையாளப்பட வேண்டியவை. தீயை தீதென்று ஒதுக்காமல் பயன்படுத்தி வாழ்வது போல வாழத்தக்கவை. வாழ்வதற்காகவே உருவானவை. 

நெருப்பை மனிதன் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பயன்படுத்தும் விதத்தைக் கண்டுபிடித்து தன் வாழ்வை எளிதாக்கிக் கொண்டான். தன்னால் நேரிடையாகப் போரிட முடியாதவற்றை நெருப்பை கையாளத்தெரிந்த தன்மை கொண்டு உணவு முதல் உலோகங்கள் வரை தன் தேவைக்கேற்ப வனைத்துக் கொண்டான்.

அதுபோல்தான் வன்குணங்களும் மென்குணங்களும் மிக்க காலப்பொழுதை பயன்படுத்தி அதனை தன்வயமாக்கவே மனிதன், காலத்தை கண்காணித்து ஜோதிடத்தை கணித்து, காலண்டரைக் குறித்துக் கொண்டான். நாள் எனவும் தேதி எனவும் பெயரிட்டான். காலப்போக்கில் அந்தக் கணிப்புகளின் தன்மைகளைப் புரிந்து கொள்வோர் இல்லாமல்.. குணமறு கணக்குகளாகப் போய் எல்லாம் தவறுதலாகிவிட்டது. அதற்காக, நாளொன்றும் வாளாயிருப்பதில்லை. தன் குணங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது.

Friday, May 22, 2015

அஷ்டமி, நவமி… கஷ்டமி?

சிவபெருமானின் கல்யாணத்திற்கு உலகமே திரண்டு வடதிசை சென்ற வேளையில் சமநிலை காக்கும் பொருட்டு தென்திசை ஏகிய பெருமான் 'குறுமுனி அகத்தியர்'. இவர் சிவபெருமானிடமே தமிழ் கற்றதாகவும், தான் கற்ற தமிழை, தமிழகத்தில் ஸ்தாபித்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்று கர்நாடகா தரமறுக்கும் காவிரியை தன் கமண்டலத்தில் அடக்கிவைத்திருந்து, திறந்து விட்டவர் எனவும் அவருக்கு புகழுண்டு. 

அகத்தியரே இன்றுள ஜோதிட சாஸ்திரங்களுக்கு ஆரம்ப வித்து. எனவே, ஜோதிட பழக்க வழக்கங்களின் ஆரம்பக் காலம், அகத்தியர் வாழ்ந்த காலமே. அகத்தியர் வாழ்ந்த காலத்தைப்பற்றிய பல்வேறு யூகங்களும் தகவல்களும் இருந்தாலும், இவர் எழுதிய நூட்கள், அவர் பயன்படுத்திய எழுத்துக்களின் வகைகள், மற்றும் எழுதிய பாணியின் அடிப்படையில் கி.பி பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக உறுதி செய்யப்படுகிறது. இவர் எழுதிய நாடி சாஸ்திரம், சித்த மருத்துவம் உள்ளிட்ட நூட்கள் உறுதியாகக்; கிடைத்ததால், ஜோதிட கால ஆரம்பமும் பதினோராம் நூற்றாண்டாகக் கொள்வோம்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டென்பது இன்றிலிருந்து 900 வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால், தமிழர்கள் அதனினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள் என நிரூபிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. 

‘அகத்தியம்’ எனும் இலக்கண நூலையும் அகத்தியர் இயற்றி உள்ளார். பொதுவாக யாவரும் சொல்வது போல், இலக்கணத்திற்கு முன்பே இலக்கியம் இருந்திருக்க வேண்டும். இலக்கியத்திற்கு முன்பே பல்லாண்டுகள் பண்பட்டமொழி இருந்திருக்க வேண்டும். பண்பட்ட மொழி தோன்றுவதற்று முன்பே முறையான பழக்க வழக்கங்களுக்கு உட்பட்ட மனிதன் இருந்திருக்க வேண்டும். முறையான பழக்கவழக்கங்களுக்கும் உட்பட்ட மனிதன் மொழியறிவைக் கைக்கொள்ளும் போதே, நாட்களைப் பற்றிய குறிப்பையும் கண்டிப்பாக வைத்திருப்பான். ஏனெனில், சுற்றிலும் நடப்பவற்றை உற்றுக்கவனித்து பெயரிடவே மொழி பிறக்கிறது. கவனிக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது இரவும் பகலுமாகத்தானே இருக்கும்?

900 ஆண்டுகளுக்கு முந்தைய ஜோதிடம் சொல்வதுதான் அஷ்டமியும், நவமியும் ஆகாத நாட்கள் என்பதும். இந்த நாட்களில் செய்யும் காரியங்கள் நன் முடிவை தராது என்பதும்.

இந்த ஜோதிட வாதத்தை முன்வைப்பவர்கள், அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணனையும், நவமியில் பிறந்த ராமனையும் துணைக்கிழுகிறார்கள். பார்! அஷ்டமியிலும் நவமியிலும் பிறந்ததனால் கடவுளேயானாலும் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டார்கள். எனவே, அஷ்டமியிலும் நவமியிலும் எதையும் செய்யாதே என்கிறார்கள். 

சரி, அஷ்டமி, நவமியில் எதுமே செய்யக்கூடாதா? என்றால்.. செய்யலாம். அழித்தல் சம்மந்தப்பட்ட காரியங்களைச் செய்யலாம் என்கிறார்கள். அதாவது, கட்டிடம் இடித்தல், வேண்டாதவன வற்றில் தீ வைத்தல் முதலானவை.
இந்த நம்பிக்கையெல்லாம் அறிவுடைமையாகாது என்பது இந்தப் பக்க வாதம். நாளின் வரிசை உள்ளது. இந்த நாள் வரிசைக்கு பெயரிடுகிறார்கள். இந்த வரிசைப் பெயர்களின் அடிப்படையில் இது நல்லது, இது கெட்டது என எப்படி சொல்ல முடியும். எல்லாம் சுத்தப் பொய். 

மனித வாழ்வின் சாரம் என்பது நகர்ந்து கொண்டிருத்தல். இந்த நகர்ந்து கொண்டிருத்தலை ‘நம்பிக்கையும், பயமுமே’ ஆக்ஸிலேட்டராகவும், பிரேக்காகவும் இருந்து செயல்படுத்துகிறது. இதை புரிந்து கொண்ட சிலரே.. ஜோதிடம் என்னும் பெயரில் நம்பிக்கையையும், பயத்தையும் விற்று தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்கிறார்கள். எனவே, இத்தகு பயமுறுத்தலை புறந்தள்ளுவோம். அஷ்டமி, நவமி எல்லாம் எங்களுக்கு இஷ்டமி தான் என்கிறார்கள். 

இதில் நாம் எதை  கொள்வது, எதைத் தள்ளுவது என்பது அவரவர் நம்பிக்கையும், பயத்தையும் பொறுத்தது என்று சொல்லிவிட முடியாதல்லவா? எது சரிஎன முடிவுக்கு வர முயல்வோம்.

கிருஷ்ணரும் ராமரும் அஷ்டமி நவமியில் பிறந்ததனால் கடவுளேயானாலும் கஷ்டப்பட்டனர் என்பதை, அவர்கள் அஷ்டமி, நவமியில் பிறந்து கஷ்டப்பட்டதனால்தான் ‘கடவுளேயானார்கள்’ எனக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக அஷ்டமி, நவமி கஷ்டப்படுத்தும் என்பதில்லை. அது அவரவர் வாழ் சூழ்நிலை. 

- ‘நல்லோர் செய்யாததை நாள் செய்யும்’ என்பார்கள். அதாவது ஒரு காரியத்தை துவங்கக்கூடிய நாள் அறிந்து செய்தால்தான் எடுத்தகாரியம் வெற்றியாகும். மாறாகத் துவங்கப்பட்ட காரியம் வேறாகத்தான் முடியும். வள்ளுவரும் “ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்கருதி இடத்தாற் செயின்” என்று மேற் சொன்னதையே அழுத்திச் சொல்கிறார். எனவே, காரியங்களைச் செய்வதிலும் துவங்குவதிலும் நாளிற்கு முக்கிய இடம் உண்டு. இதை யாராலும் மறுக்கவியலாது.

- இதில் ‘நாள்’ என்ற சொல்லின் மீதான புரிதலைத்தான் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவரும், பழமொழியும் சொல்லும் நாள் என்பது, தினத்தின் வரிசை பெயர் கொண்ட நாள் அல்ல. அந்த ‘நாள்’ எந்த தன்மை கொண்டது என்பதைக் குறிப்பதாகும். 

அதாவது, ‘மழைநாளில் உப்புவிற்கப் போககூடாது, காற்றடிக்கும் நாளில் மாவு விற்கக் கூடாது’  என்று சொல்வார்கள். இதில் ‘நாள்’ என்பது அன்று மழைநாள் அல்லது காற்றடிக்கும் நாள் என்பதாகும். அது இல்லாமல், அன்றைக்கு திங்கட்கிழமை என்றோ.. மாதத்தில் முதல்நாள் என்பதோ அடையாளம் இல்லை. அது எந்த நாளாகவும் இருக்கலாம் ஆனால் அது ‘மழை நாள்’ அல்லது ‘காற்றடிக்கும் நாள்’. 

இது மாதிரி நாள் என்பதற்கு பல்வேறு விதமான புரிதல்கள் உள்ளன. உதாரணமாக, நமக்கு ஞாயிற்றுக்கிழமை, ‘விடுமுறை நாள்’. அந்த நாளில் எந்த அலுவலகம் சாhர்ந்த வேலையோ, அரசு சார்ந்த வேலையோ நாம் செய்வதில்லை. செய்ய நினைத்தாலும் நடப்பதற்கில்லை. 

ஒரு பத்திரம் முடிக்க இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு மே-24ம் தேதி நல்ல நாளாக படுகிறது என்று சொன்னால், உடனே அருகில் இருப்பவர் ‘வேணாங்க அன்னைக்கு, ஞாயித்துக்கிழம. வேலைக்கு ஆகாது’ என்று சொல்வார். இதுவே பின்நாளில் புழக்கத்தில் ‘ஞாயித்துக்கிழம, வேலைக்கு ஆகாது’ என்று மட்டும் பழகிப்போகும். இந்த பழக்கம் மெல்ல வழக்கமாகி ஞாயிற்றுக்கிழமை மேல் ‘தீட்டை’ எற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையில் பிறந்த அவதாரம் பற்றிய கதை வரவும் வாய்ப்பிருக்கிறது. (விடுமுறை நாளை கொண்டாட்ட நாளாக்கி, தன் பிழைப்பைப் பெருக்கும் இம்மாதிரி அரசியல், பற்றி பேசினால்…. வேண்டாம்!) ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ம…….ர்களுக்கு, அப்போதைய காலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற வழக்கம் இல்லாமல் போய்விட்டாலும் கூட, அன்றிருக்கும் ‘ஃபார்ச்சூன் அட்வைசர்’ ஞாயிற்றுக்கிழமை நல்லநாள் இல்லை என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.

இதே மாதிரிதான், அஷ்டமியும் நவமியும் முன்னோர்களின் ஓய்வு தினங்களாக இருந்திருக்கலாம். அந்நாளில் எக்காரியமும் செய்ய முனையாமல் இருந்திருக்கலாம். நமது காலத்தில் தீட்டு தினங்கள் என கதைக்கப்படுகின்றன. 

Thursday, May 14, 2015

நீளும் நாட்கணக்கு!



காற்றிற்கும், புயலுக்கும் கூட பெயரிடுவது ‘தானே!’ இப்போது பேஷன். நாளிற்கும் பெயருண்டு நமது காலண்டரில். 

புவியின் சுழற்சியுடன் நாட்கள் நகர்கின்றன. நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன. சென்ற நாட்கள் ஒரு போதும் மீள்வதில்லை. இருந்த போதிலும் வரிசையாக நகரும் நாட்களை ஒரு சுற்றாகச் செய்வது காலண்டர்தான். நாம் நாட்களை அடையாளப்படுத்தி, அவற்றிற்கு இன்ன நாள், இன்ன தேதி என பெயரிட்டு மீண்டும் மீண்டும் வரச்செய்து பயன்படுத்துவதால்தான் மனித வாழ்விற்கு அர்த்தம் வருகிறது. பிறந்தநாள் முதல் இறந்தநாள் வரை குறிப்பிடப்பட்ட எல்லா முக்கிய நாட்களும் கொண்டாட்டங்களையும், சோகங்களையும் சுமந்து சுழன்று மனித வாழ்வைப் பொருளுடைய தாக்குகிறது. நாள் என்ற ஒன்றிற்கு மனிதன் தேதியென்ற அடையாளம் இடாவிட்டால்.. மனித வாழ்வென்பது மலராமல் போயிருக்கும். திசையற்றுப் போயிருக்கும். 

அட..ட..ட..டா தேதியின் எண்கள் சுற்றுப்பாதையில் வருவதுபோல், நாமும் எத்தனை தடவைதான் காலண்டரின் சிறப்புக்களை வியந்தாலும் வியந்து கொண்டே இருப்போம் போல.

- மாதத்திற்கு முப்பது நாட்கள் என கண்டோம். சில மாதங்களுக்கு முப்பத்தியோரு நாளும், பிப்ரவரி மாதத்திற்கு இருபத்தியெட்டு நாளும், அது ‘லீப் இயர்’ என்றால் இருபத்தியொன்பது நாளும் வரிசை எண்களிட்டு ஆங்கில காலண்டரில் வருகிறது. நமது நடைமுறையிலிருக்கும் தமிழ்க்காலண்டரின் நாட்களுக்கும் நம்பர்தான் பெயராக இடப்பட்டு அழைக்கப்படுகிறது. இவையும் சற்றேரக்குறைந்த சராசரியாக முப்பது நாட்களைக் கொண்டவை.

ஆனால், பழம் வழக்கத்திலிருந்த நிலவுசார்ந்த தமிழ்க்காலண்டரில் பதினைந்து நாட்கள் என்பது ஒரு வரிசைக் கணக்கு. பதினைந்து நாட்கள் வரைதான் பெயர். அம்மாவசையிலிருந்து பௌர்ணமிவரை ஒரு வரிசை. பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை வரை ஒரு வரிசை. இரண்டு வரிசைகளும் சேர்ந்தது ஒரு மாதம். இந்த இருவரிசைக் கணக்கெடுப்பு முறையென்பது நாம் ஆரிய வருகைக்கான காலம் என்று குறிப்பிடப்படும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட காலங்களுக்கு முன்னதாகவே இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும், இம்முறையில் நாட்களுக்கான பெயர்கள் வடமொழியில் தான் இருக்கிறது.

நமது உசிலம்பட்டியில் பிறந்த ஒரு குழந்தைக்கு ‘சந்தரபோஸ்’ எனப் பெயரிடப்படுமானால், அவன் வங்காளி ஆகிவிடமாட்டான் அல்லவா? தமிழனுக்கு எப்படி வங்காளப்பெயர் சாத்தியமோ, அதுபோல் தமிழ்நாட்களின் முறைகளுக்கும் வடமொழிப்பெயர் சாத்தியம். எனவே, ஒரு மொழியில் பெயரிடப் பட்டிருப்பதாலேயே முறையாக ஆய்விடாமல் எதையும் இது இவர்களின் சொத்து என அரிதியிட்டு கூறிவிட முடியாது.

பெயர் - அம்மாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கிச்செல்லும் நாள் வரிசைக்கு ‘சுக்ல பட்சம்’ என்று பெயர். பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை நோக்கிச் செல்வதற்கு ‘கிருஷ்ண பட்சம்’ என்று பெயர். இரண்டு பட்சத்திற்கும் குறைந்த பட்சம் பதினைந்து நாட்கள். அதிக பட்சமும் அதேதான்.

பட்சத்தின் முதல் நாள் - பிரதமை
இரண்டாம் நாள் - துவிதியை
மூன்றாம் நாள் - திரிதியை
நான்காம் நாள் - சதுர்த்தி
ஐந்தாம் நாள் - பஞ்சமி
ஆறாம் நாள் - சஷ்டி
ஏழாம் நாள் - சப்தமி
எட்டாம் நாள் - அஷ்டமி
ஒன்பதாம் நாள் - நவமி
பத்தாம் நாள் - தசமி
பதினொன்று - ஏகாதசி
பனிரெண்டு – துவாதசி
பதின்மூன்று - திரயோதசி
பதினான்கு – சதுர்த்தசி
பதினைன்நது – பௌர்ணமி (அ) அம்மாவாசை

இவை நாட்களின் பெயர்கள். வடமொழியில் வரிசை எண்கள். இவை அன்றாட வாழ்வின் செயல்பாட்டில் இன்ன காரியத்தை இன்ன நாட்களில் செய்யலாம் என தீர்மானிப்பதில் மட்டுமின்றி, சமய வழிபாடுகளிலும் சடங்குகளிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. நாள்களின் தண்மையைக் கணக்கிடாமல் இந்து சமய வழிபாடுகள் நடப்பதில்iலைதான். எனினும் ‘நாள் என் செய்யும், கோள் என் செய்யும்.. நாதன் துணையிருக்கையிலே’ என்பதும் சமயச்சான்றோன் நவின்றதுதான்!

சமயச்சடங்குகளில் நாளின் ஆதிக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். நம்புலத்தார் வாழ்வில் இந்த நாட்கள் குறிப்பிடப்பட்டால் பரவாயில்லை. குறுக்கிட்டால் என்ன செய்வது? அஷ்டமியும், நவமியும் அப்படியென்ன தவறிழைத்தவை?

Thursday, May 7, 2015

நாள் என்ற ஒன்று!

“நாள்என்று ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
- எனும் குறள், எப்போதும் என்னைப் பதறவைக்கும். ‘ஒவ்வொரு நாளும் ஓரு கூரிய வாளாய்;, வாழும் உயிரை அறுத்துக்கொண்டிருக்கிறது’ எனும் வள்ளுவரின் இந்த வாக்குதான் உண்மையிலும் உண்மை. ஆகையால் நாளெனும் நல்வாள், நம் வாழ்நாளை முற்றிலும் அறுத்தெரியும் முன்னர், நம்மை சுற்றித்தாங்கும் ஜீவ சுற்றத்திற்கு நன்மையே செய்திட முயல்வோம்.

- காலம் என்பது ஆண்டு, மாதம், வாரம் எனப்பல தொகுப்பாக இருப்பினும் அவையெல்லாம், நாள் என்னும் ‘கண்ணி’களைக் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைதான். இன்றைக்கு, நாள் என்ற ஒன்றினை நாம் ‘மணி’நேரங்களாகப் பிரித்துப் பயன்படுத்துகிறோம். இது நாம் காலக்கணக்கின் அடிப்படைத் தன்மையை, நமது அன்றாட வேலை ஒழுங்கினை மிக நேர்த்தியாகச் செய்த கொள்ள உதவுகிறது.

நவீன வாழ்வோட்டத்தின் அடிப்படையான செயல்வகை ஒப்பந்தங்கள் (கமிட்மெண்டுகள்), தீர்மானங்கள், நேரங்களைச் சுட்டி குறிக்கப்படுகின்றன. இன்றைக்கு நாம் மணிநேரங்கள் இல்லாத நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பிய காதலியின் கோபம் கூட, அவனது ‘லாஸ்ட் சீன்’ டைம் பார்த்துத்தானே எழுகிறது. எனவே, நேரத்தோடு இயங்குகிற வாழ்வே சீரான வாழ்வாகிறது. நேரம் கெடும்போது சகலமும் கெட்டுவிடுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக் கோள்ளும் நேரமான ஒரு நாளை  இருபத்திநான்கு(24) கூறுகள் இட்டுக் கொண்டுள்ளோம். இந்தக் கூறுகள் மணி நேரங்கள் ஆகும். அதாவது, ஒரு முழு நாள் பொழுதினை இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரித்தால், அவற்றின் ஒவ்வொரு தனிப்பிரிவும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த மணியும் அறுபது நிமிடங்களான கூறாகவும், ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடிகள் அடங்கலாக, மொத்தம் மணிக்கு 3600 வினாடிகள் என சிறுகூறாகவும் பிரித்துக்கொண்டுள்ளோம். இன்றும் நுண்ணிய கூறுகளாக ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தி வந்தாலும் மேற்கூறியவைகளே பொதுவாகப் புழக்கத்தில் இருக்கும் பிரிவுகளாகும்.

நேரத்தின் அடிப்படையில்தான் நாம் வாழும் பூமியையும் அளவிட்டு வைத்துள்ளோம். வரலாறு, காலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல, புவிஅமைப்பை பற்றிய அறிவியலும் (புவியியல்) காலத்தின் அடிப்படையில் தான் குறிப்பிடப்படுகிறது. 

பூமியின் நெட்டுவாக்கில் (Vertical) நாம் 23 கற்பனைக் கோடுகளைப் போட்டு வைத்துள்ளோம். இவை தீர்க்கரேகைகள். இந்த 23 தீர்க்க ரேகைகளுக்குமான இடைவெளிகளின் எண்ணிக்கை 24. இந்த இடைவெளியென்பது, பூமி தன்னைத்தானே சுற்றும் போது ஒரு மணிநேரத்தில் கடக்க அல்லது சுற்ற ஆகும் தூரம் ஆகும். இந்த தீர்க்க ரேகைகளின் அமைவில் நிலப்பரப்பும் கடல் பரப்பும் அளவிடப்படுகிறது, ஆராயப்படுகிறது.

இந்த தீர்க்க ரேகைகள், நாளால் தோன்றி கோளை அளக்கிறது என்றால், பூவியின் மேற்பரப்பின் குறுக்காக (Horizontal) கற்பித்துக் கொண்டுள்ள, அட்ச ரேகைகளும் பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகையும், மகரரேகையும், கடக ரேகையும் சொல்வன ஏராளம். இந்த அட்ச ரேகைகள் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. 

பூமி சுற்றும் நேரத்தின் அடிப்படையில் தீர்க்க ரேகைகள் உருவாயின என்றால், பூமி சுற்றும் கோணத்தின் அடிப்படையில் அட்சரேகைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பூமி தன் அச்சிலிருந்து சாய்ந்து சுற்றுகிறது என்பது நாம் அறிந்ததே! இவ்வாறு சாய்ந்து சுற்றுவதின் அடிப்படையில், பூவியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் கோணமும் நீளமும் மாற்றமடைகிறது. இம் மாற்றங்களினால்தான் பருவகாலங்களும் மாற்றம் பெருகிறது. பருவ காலங்களின் மாற்றம்தான் முதல் முதலின் மனிதனின் கவனத்திற்குட்பட்டு ஆரம்ப கால காலண்டர்களை தோன்றின என்பதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, இந்த அட்சரேகைகள் காலண்டர்களின் சுற்றோட்டத்தில் சேர்ந்து சுழல்கிறது என்றால் மிகையாகாது. இவற்றைப்பற்றி விரிவாக இனிவரும் தொடர்களின் காணத்தானே போகிறோம்.

இப்போது நாம் நாட்களைப் பற்றி கவனித்துக்கொண்டிருக்கிறோம். உட்பிரிவுகள் அடங்கிய நாளும், நாட்கள் அடங்கிய வருடங்களையும் நாம் ஆங்கில காலண்டர் முறையில், எண்களிட்டு அழைக்கிறோம். அனால் மாதங்களுக்கு முழுமையான அர்த்தார்த்தமான பெயர்கள் இருப்பதை கவனியுங்கள். இவை, யோசிக்குங்கால் நமக்கு புலனாவது ஒன்று, தற்போதைய ஆங்கிலகாலண்டர் பல ஆரம்ப கால இனக்குழுக்கள் பயன்படுத்தி வந்த காலண்டர்களின் தொகுப்பே.

 ஆனால், பயன்பாட்டிலிருக்கும் தமிழ்க்காலண்டரில் மாதங்களுக்கு இருப்பது போல் நாட்களுக்கும், வருடங்களுக்கும் பெயரிட்டுள்ளது எதையோ உணர்த்துகிறதல்லவா?