Wednesday, September 9, 2015

நடக்கும் என்பார்..நடக்கும்!

உலகம் ஒரு அதிசயக்கூடம். மனிதனே அதிசயங்களை அறியவும், அனுபவிக்கவும், ஆரம்பித்துவைக்கவும் தெரிந்தவன். மனிதன் கண்டுணர்ந்த அதிசயங்களில், மனிதனே புரிந்த, படைத்த அதிசயங்களைப் பார்த்துத்தான் அதிகம் அதிசயப்பட்டான்.

அரும்பெரும் கண்டுபிடிப்புகள் அவனை அதிசயப்படுத்தியது.

பெருமைக்குரிய கட்டிடங்கள் அவனை அதிசயப்படுத்தியது.

இவற்றில் அதிசயப்பட்டு அவன் புருவங்கள் உயர்ந்தது என்றால், 
நாளை நடக்கப்போவதை நேற்றே கணித்துச்சொல்லும் மனித திறமையைப் பார்த்து, அவனது புருவங்கள் பிடறிவரை செல்கின்றன. அதனால்தான், உலகமெங்கும் ஜோதிடத்திற்கு அவ்வளவு ஆதரவு. 

எனவே, இப்படி கணிப்புகளும் அதிகம். இவற்றில் நமது நாடி ஜோதிடம் முதல், நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் வரை பல்வேறு விசயங்கள் காலம் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும், தலையாயதும், பல்வேறு கணிப்புக்கள் மெய்யாலுமே நடந்தது அதிசயப்படுத்தியதும் மாயன் காலண்டர். இந்த அதிசயங்கள்தான் கடந்த 2012ஆம் ஆண்டு உலகையே உலுக்கிக்கொண்டிருந்தது.

விஷயம் என்னவென்றால், மாயன்காலண்டர் துவங்கியகாலத்திலிருந்து வரிசைக்கிரமமாக, நடக்கும் என அறிவுறுத்திய பல்வேறு சம்பவங்கள், உள்ளபடியே நடந்து ஆச்சரியப்படுத்திவந்திருந்தது. எனவே மாயன்காலண்டரின் கணிப்புகளை உலகம் உற்றுப்பார்த்து வந்தது. இப்படி கணிப்புக்களைச் சொல்லிவந்த மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் தன் கணிப்புக்களையும், கணக்குகளையும் முடித்துக்கொள்ளுவது போல வடிவமைக்பட்டிருந்தது. அல்லது, மாயன்காலண்டர், மேற்சொன்ன தேதிவரைதான் தன் கணிப்புக்களை வெளியிட்டிருந்தது. 

எனவே, மாயன்காலண்டர் தன் கணிப்புக்களை முடித்துக்கொள்ளும் தேதி.. உலகம் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தேதியென ஓரே பேச்சாயிருந்தது. 

பல்வேறு அறிஞர்களும்(!) பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். உலகம் அழியும் - அழியாது என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டியெங்கும் நடைபெற்றது. மதம் சார்ந்த இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு மக்களிடையே பீதியைப் பரப்பின. இதெற்கெல்லாம் உச்சக்கட்டமாக ‘2012’ என்ன பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகி உலகம் அழியும் காட்சிகளை, கடைவிரித்து பெருமளவில் கல்லாக்கட்டியது. 

இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் என்வென்றால், நாம் ஏற்கெனவெ கூறியது போல், பல்வேறு மாயன்காலண்டரின் கணிப்புக்கள் உண்மையாக நடந்தேறியதுதான். அவற்றின் பட்டியல் மிக நீளமானது. கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகக் கருதப்படும் மாயன் நாகரீக காலண்டரின் வரலாற்றில் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்ட கணிப்புகள் கிருஸ்துவின் காலத்திலிருந்தே துவங்குகிறது. 

இயற்கைச்சீற்றங்களை துல்லியமாக கணித்துச் சொல்லிய அவற்றையெல்லாம் பட்டியலிட்டு ஆராய்ந்தால், நம் காலம் முழுக்க ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். ஒரு காபி குடிக்கும் அவகாசம்தான் நம்மிடம் இருக்கிறது என்பதால் சில மட்டும் இங்கே..

1. கி.பி. 1700 ஜனவரி 26, வடஅமெரிக்க பூகம்பம். இந்த நிகழ்விற்குப்பிறகுதான் மாயன்காலண்டரின் கணிப்புகள் பக்கம் உலகம் கவனம் திருப்பியது.

2. 1926 ஜுன் 26, ரோடெஸ் பூகம்பம்.

3. 1963 ஜுலை 26, யுகோஸ்லோவாக்கியவின் பெரும்பாண்மையான மக்களைப் பலிகொண்ட நிலநடுக்கம்.

4. 2003 மே மாதமும், ஜுலை மாதமும், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், அதே 26ம் தேதியில் நடைபெற்று நாமே கண்டுணர்ந்து, கண்அயர்ந்த ஜப்பானிய நிலநடுக்கம்.

5. இவ்வளவு ஏன்? நமது குஜராத்தில் 2001 ஜனவரி 26ல் உலுக்கிய பூகம்பம் என எல்லாவற்றைப் பற்றிய குறிப்பினையும் குறிப்பிட்டிருந்தனர் மாயன்கள். 
இதையெல்லாம் கணித்தவர்கள் மாயன்கள் என்பதைத்தவிரவும், இதில் இன்னொரு ஒற்றுமையைக் கவனித்திருப்பீர்கள். ஆம். எல்லா சம்பவங்களின் தேதியும் 26. அவற்றின் கூட்டுத்தொகை 8. 

அதனால்தான், உலகமெங்கும் 13ம் நம்பரை ஆகாத எண்ணாக கொண்டாடிக் கொண்டிருக்க, நாம் மட்டும் எட்டை… நட்டக்கணக்கில் வைத்திருக்கிறோமோ என்னவோ? ( யப்பா.. நமக்கும் - மாயன்களுக்கும் லிங்க் கொண்டுவர எப்டியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! )