Friday, March 20, 2015

காலெண்டர் கதைகள் - ஆங்கில காலெண்டர்

காலண்டர்களைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆரம்பிக்கையில், நாம் முதலிலும் முக்கியமாவுகம் தெரிந்து கொள்ள வேண்டியது, நாம் முக்காலே முழுவீதம் அன்றாடம் புழங்கும் ஆங்கிலக்காலண்டர்கள் தானல்லவா?
மாநகரத்தின் பிரதான சாலையாகட்டும்.. மாநில நெடுஞ்சாலையிலிருந்து கிளைத்து நீளும் மண்சாலையின் முடிவில், தனித்திருக்கும் குறுங்கிராமமாகட்டும்.. இரவெல்லாம் விழித்திருந்து.. நேரம்பார்த்து.. என் இனிய தமிழ் மக்கள் அனைவரும் Happy New Year சொல்லி வரவேற்று வாழ்த்துப்பாடி ஜனவரி முதல் தேதியில் துவங்கும் ஆங்கிலப்புத்தாண்டு துவங்கியது கிரேக்கத்தில்.
கிரேக்கர்கள் பயன்படுத்திவந்த ஆரம்பகால காலண்டர்களில் பல்வேறு சீர்திருத்தங்களைப் புகுத்தி.. தற்போது நடைமுறையில் இருக்கும் காலண்டர்களுக்கு நெருங்கிய வடிவத்தில் கொண்டு வந்தவர்கள் ரோமானியர்கள். கிரேக்கர்களின் கடவுள் பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்த மாதங்களுடன் ரோம சாம்ராஜ்யத்தின் மாமன்னர்களான அகஸ்டஸ் சீசரும், ஜுலியஸ் சீசரும் உள் நுழைந்ததெல்லாம் அவர்களின் தாங்களே அமைத்துக்கொண்ட சீர்திருத்தங்களினால்தான்.
தத்துவ விசாரங்களிலும், வீரத்திலும் மேம்பட்டிருந்த கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த காலண்டரின் ஆரம்பவேர் உண்மையில்… அதிசயமான கட்டுமானங்களையும், வியத்தகு வானியல் அறிவையும், மனிதன் இறந்தும் கூட ஆயிரம் ஆண்டுகளாய் உடல் கெடாமல் ‘மம்மி’யாக வைத்து காக்குமளவிற்கு அறிவியலும், மருத்துவ அறிவையும் பெற்றிருந்த எகிப்திய நாகரீகத்தில் தான்.
நமது சிந்துவும், சீனாவின் மஞ்சளாற்று நாகரீகமும் இருந்த காலத்தில் தோன்றி.. இன்றளவும் நிலைத்து நிற்கும் ஸ்பிங்ஸ், பிரமிடு என பிரமிக்க வைக்கும் கட்டுமானங்களை நமக்களித்த எகிப்து நாகரீகம்தான், பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட காலண்டரின் ஆரம்ப வித்தை விதைத்தது.
எகிப்து நாகரீகத்தின் அடிப்படை வாழ்வாதாரமான நைல் நதி, மிகுந்த வெள்ளத்தை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் எகிப்தியர்கள் வாழிடங்களில் பெருக்கி.. வாழ்வின் சோதனைக் கலனாகவும் விளங்கியது.  இதனை உணர்ந்த எகிப்தியர்கள் நதி பெருக்கெடுக்கும் கால கட்டங்களில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பருவகாலங்களை குறித்துக் கொண்டார்கள். பருவ காலங்கள்; சுழற்சியில் வருவதை உணர்ந்து குறித்துக்கொண்ட எகிப்தியர்கள் ஆரம்பகால காலண்டர்களை நமக்கு வழங்கினர். இக்காலண்டர்கள் நான்கு பருவங்கள் கொண்டதாகவும் சூரியனை அடிப்படையாக (Solar Calendars) கொண்டதாகவும் ஆகும்.
கடவுள் நம்பிக்கையும், யூக அறிவும், வலிமையும் பெற்றிருந்த கிரேக்கர்கள் தற்போதைய நாற்காட்டியின் வழிகாட்டியாக இருந்ததில் வியப்பில்லைத்தானே! நாம் தற்போது பயன்படுத்தி வரும் காலண்டருக்கு சற்றேரக்குறைய ஒரே மாதிரியான காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.  ஏகிப்தியர்களின் சூரிய காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தாலும் அவர்களின் காலண்டரில் பருவகாலங்கள் மட்டுமின்றி, மாதங்களும் இருந்தன.
‘மார்ட்டியஸ்’ என்பதில் துவங்கி ‘பிப்ரவோரியஸ்’ மாதத்தில் முடிவடைந்த ஒவ்வொரு மாதத்திற்கும் கடவுளரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.
ரோமானியர்களும், கிரேக்கர்களும் - கி.மு. 146 இல் 'ரோமர்' முழுவதுமாக கிரேக்கத்தை கைப்பற்றும் வரை - அடிக்கடி போரிட்டுக்கொண்டனர். போர் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் நடந்தது. பருவகாலங்களின் அடிப்படையில் போரிடும் முறையில் மாற்றங்களும் ஏற்பட்டன. போர்முறைகளில் தந்திரங்களும் பெருகிவந்தன. அவற்றில் தலையாயது காலங்கருதி போரிடுவதுதான். இதனால் பல நுட்பான குறிப்புகளும் கால அட்டவனையில் ஏறின. வானியல் சாஸ்திர அறிவும் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அதிகரித்து வந்த காலத்தில் அதன் அனைத்து மாற்றங்களையும் காலண்டர் ஏற்றிக்கொண்டது.
ரோம சாம்ராஜ்யம் ஐரோப்பா முழுமையையும் தன் ஆளுமைக்கு உட்படுத்தியிருந்த காலகட்டத்தில் இப்போதைய காலண்டரின் இறுதிவடிவம் எட்டியது எனலாம். தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் தங்களின் அனைத்து சம்பிரதாயங்களையும் நடைமுறைப்படுத்திய ரோமானியர்கள் தாங்கள் உருவாக்கிய காலண்டரையும் அன்றாட மக்களின் புழக்கத்தில் வழக்கப்படுத்தினர். ரோமானியர்களே ஜெருசலம், பெத்தகேமில் தோன்றிய புதிய மதமான கிருஸ்தவ மதத்தையும் ஐரோப்பா முழுவதும் பரப்பியது.
கிருஸ்தவமதம் காலண்டர் கணக்குகளையும் தனது வழிபாடுகளையும் ஒரு சேர கணித்துக்கொண்டது. இயேசு கிருஸ்து வாழ்ந்த காலத்தை கொண்டு கி.மு., கி.பி. என ஆண்டினை குறியிடத்துவங்கியது. காலண்டரின் வளர்ந்து வரும் போக்கினை எல்லாம் உள்வாங்கி ஒரு இறுதி வடிவம் தந்தது. தற்போதைய திருத்தப்பட்ட காலண்டரை அறிவித்தது கிறிகோறிஸ் என்ற பாதிரியார் தான். தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஆங்கில காலண்டருக்கு ‘கிறிகோறிஸ் காலண்டர்’ என்ற பெயரும் உண்டு. ரோம் பரப்பிய கிருஸ்தவம் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும், பிறகு உலகெங்கும் வியாபித்தது போல காலண்டரும் பரவி நமது பயன்பாட்டிற்கு வந்தடைந்தது.