Wednesday, April 1, 2015

காலண்டர் கதைகள் - முட்டாள்கள் தினம்

ஆரம்ப கால இலண்டனில் ஒரு முக்கிய நாளினை மையமாகக் கொண்டு மற்ற நாட்களைக் குறிப்பிட்டனர் எனக் கண்டோம். நம் கிராமங்களிலும் அதே பழக்கம் இன்றும் ஒரு இயல்பாக இருப்பது ஒரு ஆச்சர்ய ஒற்றுமை.
இரவின் இருட்டில் முழுக்க கதவடைத்த படுக்கையறையின்; மேற்கூறையில் ரேடியம் ஓவியங்களாய் ஒளிரும் நட்சத்திரங்களையும், வளர்ந்து தேயாத நிலவின் அழகையும் ரசித்துக் கொண்டு உறங்கச் செல்லாமல், நிஜமாகவே வான் நிலவிற்கு நெருக்கமாக வாழும் நம் மக்களுக்கு அம்மாவாசையும், பௌர்ணமியும் மாதத்தின் முக்கிய நாட்கள். அதற்கும் மேலாக உள்ளூர் விழா நாட்கள், வீட்டு விசேச நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் ரம்ஜான், கிரிஸ்மஸ் போன்ற பொதுப் பண்டிகைகளும் முக்கிய நாளாகின்றன.
இம்முக்கிய நாட்களைக் கொண்டு, “போன பௌர்ணமிக்கு ரெண்டு நாள் இருக்க மாடு கன்று போட்டுச்சு” என்றோ.. “ அம்மாவாசக்கு மறுநா பெரியாத்தா செத்துப்போச்சு” என்றோ.. “ரெண்டு வருசத்துக்கு முன்ன தீபாவளிக்கு பெஞ்ச மழ.. அதுக்கப்பறம்.. அந்த மாதிரி மழ இல்லியேப்பா” என்றோ.. “வர்ற பொங்கலுக்கு மறுவாராம் என் பொன்னுக்கு கல்யாணம் வச்சிரலாம்னு இருக்கேன்”; என்றோ.. வெகு இயல்பாக சொல்வதை கவனித்திருக்கலாம்.
இத்தகு சொல்லாடலில், தேதி, கிழமை பற்றிய பிரக்ஞை பெரும்பாலும் இருப்பதில்லை. பேசுவோர்க்கு.. ஒரு நினைவிற் கொள்ளத்தக்க முக்கிய தினமும், அதனை ஒட்டிய தங்கள் வாழ்வின் நிகழ்வும் உணர்வோடு ஒன்றி அவர்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத நினைவுகளாகின்றன. இவர் போல் அல்லாமல், தேதியைக் குறித்துக் கொள்ளுவோர் சம்பவங்களை நினைக்க தாங்கள் எழுதிவைத்த குறிப்பேடுகளை தேட வேண்டியிருக்கிறது.
எந்த ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவே தன்முன்னிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவிற்கொள்ள ஏதுவாய் இருக்கிறது என்பது  மட்டுமின்றி, அவர்கள் வாழ்வை, உணர்வை இத்தகைய சொல்லாடல்கள் தாங்கி நிற்கின்றன. மேலும் இன்றும் கிராமத்து மக்களின் புழங்கும் ஒரு வழக்கத்திற்கும் அன்றைய ஆங்கில சம்பிரதாயத்திற்குமான தொடர்பு சிலவற்றை உணர்த்துகிறது. வரலாற்றினை ஆய்ந்து உரைக்கையில், பதிவுபெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தான் அனைத்து தெரிவுகளும் தெரிவிக்கப்படுகிறது என்பதில்லை. சிலவை உணர்வுகளைச் சார்ந்தும் யூக அடிப்படையில் நிறுவப்படுகிறது. இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், நமது கட்டுரையிலும் இவையெல்லாம் பின்னர் தேவைப்படுகிறது என்பதால்தான்.
இப்போதைக்கு, கொண்டாட்டதினங்கள் மறப்பதிற்கில்லை என்பதையும், அதை ஒட்டிச் சொல்லப்படும் நிகழ்வுகளும் மறப்பதற்கில்லை என்பதையும் எடுத்துக் கொள்வோம். இன்றைக்குக் கூட ஒரு கொண்டாட்ட தினம்தான் “ஏப்ரல் முட்டாள்கள் தினம்”. திட்டமிட்ட எவ்வித அரசு அல்லது மதம் சார்ந்த கொண்டாட்ட தினமாக இது இல்லாவிட்டாலும் பள்ளிப்பருவத்தில் நமக்கு அறிமுகமான இந்த தினத்தில் நண்பனின் சட்டையில் இங்க் அடித்து நமது சட்டையில் இங்க் வாங்கி கொண்டாடப்பட்டது எப்படி மறக்கும்.
எனக்கு ஒரு பழைய ஜெமினி கணேசன் படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அப்படத்தில் ஜெமினிக்கு இரு தாரங்கள். ஒருவர் வீட்டிற்குச் ஜெமினி செல்வது மற்றொருவருக்குத் தெரியாது. இருதாரங்களுக்கும் ஆளுக்கொரு பிள்ளைகள். இருவரும் நண்பர்கள். ஒருவன் வீட்டிற்கு மற்றவன் செல்லும் நாளன்று ‘ஏப்ரல் ஒன்று’ எனும் முத்திரையை மற்றொரு நண்பன் குத்திவிடுவான். பின்னர் வரும் ஜெமினியின் முதுகிலும் குத்திவிடுவான். இரண்டு சட்டையிலும் விழுந்த முத்திரையின் ஒற்றுமையையும் துவைக்கையில் மனைவி பார்த்துவிட்டு ஜெமினியையும் கேள்விகேட்டு துவைப்பது போல் காட்சி வரும்.
நமது தமிழ்ச் சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் இருக்கும் வரை ஏப்ரல் ஒன்று கலகலத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதெல்லாம் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னொரு நகைச்சுவையான முரண் என்னவென்றால், ஏப்ரல் ஒன்று அன்றுதான் அனைத்துக் வியாபார ஸ்தாபனங்களிலும் தங்கள் ஆண்டு வரவு செலவிற்கான கணக்குப்பதிவினைத் தொடங்குகிறார்கள் என்பதுதான். யாரை முட்டாளாக்கப் பாக்குறாங்களோ?
- நாம முட்டாள் தினத்தின் ஆரம்ப வரலாற்றைப் பார்த்தோமானல், அது கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. ஸ்காட்லாந்து கி.பி. 1660லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700 வாக்கிலும், இங்கிலாந்து 1752லும் ‘போதகர் கிரிகோரிஸின்’ காலண்டரை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னரே இறுதியில் பிரான்ஸ் 1852ல் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் அதுவரை புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த ‘ஏப்ரல் 1’ கைவிடப்பட்டு ‘ஜனவரி 1’ புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கங்கள் இதை ஏற்றுக் கொண்ட சூழ்நிலையிலும் இதனை எற்காத சிலர் தொடர்ந்து ‘ஏப்ரல் 1’ஐ யே புத்தாண்டு தினமாக கொண்டாடினர், அந்த ஜீவிகளை “ஏப்ரல் முட்டாள்கள்” என்றும் அத்தினத்தை “முட்டாள்கள் தினமா”கவும் கொண்டாடுகின்றனர்.
‘தீபாவளி’க்கு காரணமாக, அன்று நரகாசுரனைக் வதம் செய்த தினம் என்ற கதை இருப்பது மட்டுமல்லாமல், வேறு சில கதைகளும் உலவுவது போல் முட்டாள்கள் தினத்திற்கும் மேற்சொன்னதை தவிர இன்னும் சில கதைகளும் உலவுகின்றன. அது...