Tuesday, April 14, 2015

வியப்பின் சரித்திரக் குறியீடு!

வடிவேலுவின் காமடியை மேற்கோள் காட்டாமல் எதையும் தாண்டிச் செல்வதென்பது அவ்வளவு சுலபமில்லை போலும். அன்றாட வாழ்க்கையில் நாளுக்கு ஒருமுறையாவது அப்படி நேர்ந்து விடுகிறது. 



அரசுப்பேருந்தை வடிவேலு விற்பது போன்ற ஒரு காமெடியில் “ஆமாங்க, நீங்க வாசிச்சா என் சொத்து, நான் வாசிச்சா உங்கள் சொத்து” என்று முடிப்பார். கிட்டத்தட்ட அதுபோல்தான் வரலாறும் சில சமயங்களில் அவரவர் இஷ்டத்திற்கு குறிப்பிடப்பட்டு விடுகிறது. வரலாற்று பதிவுகளில் மிகத் தெளிவான குறியீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்றாலோ, சில தரவுகளுக்கு பல அர்த்தம் கற்பிக்க ஏதுவாக இருந்தாலோ அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒரு முடிவை சொல்லிவிடுகிறார்கள். 

உதாரணமாக, இன்றைய மத்தியப்பிரதேசத்திற்கும் வடக்கே, ஏதோ ஒரு சிறுகோயில் மதிற்சுவரில் மீன் போன்ற உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.. அதைக் கண்டுணர்ந்த வரலாற்று ஆசிரியர், நம்மவராக இருந்தால், இந்தியாவின் இந்தப்பகுதிவரை இரண்டாம் வரகுணப்பாண்டியனின் ஆட்சிப்பரப்பு இருந்தது என்பதற்கான அடையாளம் இது என்று எழுதிவைப்பார். அதே, வேறுபுறத்தவராயின்.. இது பாண்டிய மன்னனை வென்றதைக் கொண்டாட, இங்கே அமைக்கப்பட்ட கோவில். நீண்டகாலமாக.. இப்புற மன்னனின் காலடியில் - செழியன், குப்புற விழுந்து கிடந்தான் எனப் பதிவார்.

இம்மாதிரிப் பிரச்சனைகளில், வரலாறு பல்வெறு இடங்களில் சிக்குண்டு கிடந்தாலும்.. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ.. தமிழ், தமிழரின் பண்பாட்டுத் தொண்மைதான் என்று தோன்றுகிறது. ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்வதும், அதை அடுத்த ஆள் வந்து மறுப்பதும், ஆதாரங்கள் விளக்கப்படுவதும், அவை ஆதாரங்களே அல்ல என விலக்கப்படுவதும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிலர் மறுப்பதும், சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தினால் பொதுக்கருத்து புறம் கிடப்பதும், பொதுவில் இருக்கும் சில தவறான கருத்துக்கள் ஏற்றம் பெறுவதும், சிலரால் முன்வைக்கப்பட்ட சரியான கருத்துக்கள், இது இன்னாரால் வைக்கப்பட்டது என்பதினாலேயே மறுக்கப்படுவதும் தமிழுக்கு நடப்பதுபோல், வேறெங்கும் காணோம். 

தமிழ்ப்பரப்பில் ஒரு கருத்தை எதிர்ப்பதனால் வரும் வெகுஜன கவனயீர்ப்பிற்காக சிலர், எதைச்சொன்னாலும் எதிர்ப்பது, ஆதாரங்களைக்களைக் கூறாமல் எதிராளியை மட்டம்தட்டுவதில் கவனம் செலுத்துவது போன்றவையும் மலிந்து கிடக்கின்றன. அதெல்லாம் நாம் மாற்ற முடியாது. எனவே, வேறு ஏதேனும் முடிந்ததைச் செய்வோம். 

- இக்கட்டுரைத்தொடரின் ஆரம்பம்.. தைய்யா? சித்திரையா? என நண்பர்களுடன் தர்க்கித்துக் கொண்டது என எற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் பள்ளி மேல்நிலை பயிலும்போது தமிழும், வரலாறும் படித்ததோடு சரி. இப்பாடங்களில் பட்டம் பெற்றவனல்லன், மலையளவு படித்தவனு மல்லன். ஆயினும் மனதளவு பிடித்தத்தின் காரணமாக சில தேடல்களுடனும் அவற்றில் கிடைத்த விடைகளுடனும் பயனித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில், இன்று சித்திரை ஒன்று.

இன்றைக்கு ஆண்டுப்பிறப்பா? இல்லையா? என்று சொல்லிவிட்டால் நாம் எதை நோக்கிப் போகிறோம் என்பது தெரிந்துவிடும். இக்கட்டுரையின் நோக்கம் முடிந்துவிடும். முடிவை உடைத்துச் சொல்லிவிட்டு, அந்த முடிவை ஏன் தெளிந்தேன் என்பதை விளக்கிச்சொல்வதும் ஒரு முறைதான். எனினும், இதைத் தொடராக எழுதிவருகிறேன் என்பதாலும்.. முடிவைச் சொல்லிவிட்டால் தொடரில் தொடர்ந்து விளக்கிவருவதின் சுவை(!) குறையும் என்பதாலும், இன்று புத்தாண்டா இல்லையா என்பதை கட்டுரை முடிவிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். 

- எந்த ஒரு உண்மையும் நிரூபிக்கப்படும் வரை வெறும் கருதுகோள்தான். உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். அந்த ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் நிறைய இருக்கின்றன. நீருபிக்கப்பட்ட உண்மைகள் குறைவுதான். எனினும் உண்மைகளை நிரூபிக்க முயலும் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு வாதத்தை முன்வைக்கையில், தன் சுயவிருப்பத்தை முன்வைக்காமல், தனது தர்க்கத்தை நிகழ்த்த வேண்டும். சுயவிருப்பத்திற்காக உண்மையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. 

தமிழ்க் காலண்டரின் ‘நதிமூலம், ரிஷிமூலம்’ தேடிய பலரும் கட்டுரையும் கருத்துரையும் அளித்துள்ளனர். தமிழர்கள் எப்போது ஆண்டுப்பிறப்பினை கொண்டாடினர் என்பதற்கு துணையாக இலக்கியத்தில், வானவியலில், கல்வெட்டுக்களில் தங்கள் தங்கள் தரப்பிற்கு ஆதரவாக ஆதாரங்கள் அளித்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் கூட்டி இரண்டால் வகுத்து அளிப்பது மட்டுமல்லாமல்.. உலகில் பல்வேறு காலண்டர்களின் தண்மை, அவற்றின் துவக்கம், அவற்றை அவ்வாறு துவங்கியதற்கான காரணங்கள், அவற்றைக் கொண்டாடிய மக்கள், அவர்களுக்கும் தமிழர்களுக்குமான பண்பாட்டு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள், அதனால் எழும் கருதுகோள்கள் போன்றவற்றைப் பற்றிய எனது இயன்றவரையிலான தேடல்களையும் தெரிவுகளையும், இவண் தெரிவிக்கிறேன்.

- தமிழ்க்காலண்டரின் ஆரம்பம் பற்றி ஆராய்கையில், தமிழனின் ஆரம்பமும் ஆராய வேண்டி உள்ளது. தமிழனின் தொண்மை பற்றி ஆராய்கையில் வரும் கருத்துக் குவியல்களின் தீர்க்கமின்மைதான் மேலே நான் விளக்கியவற்றின் அடிப்படை. 

“தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவானர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுனராத இயல்பினாளாம் எங்கள்தாய்" 
என பாரதி பாடியதைப் போல.. வரலாற்றைத் தேடுவோர், “தமிழினம் எப்ப பிறந்துச்சுன்னு யாருக்குமே தெரியலையாமப்பா..” என்று சொல்லி தப்பிவிட முடியாது. ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும். ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் ஒரு முடிவுக்கு வரலாற்று ஆசிரியர்கள் வந்து சேர்ந்ததாய் தெரியவில்லை. இதிலும், கொடுமையாக ஆய்வுகளுக்கு பல தரப்பட்ட தடையம்சங்கள் வேறு. பூம்புகாருக்கு அருகில் ஒரு பண்டைய தமிழர் பண்பாட்டுப் பெரு நகரம் இருந்ததாம். ஆதனைப்பற்றிய ஆய்வு நிதிப்பற்றாக்குறை எனச்சொல்லி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாம். அதைத்தாண்டியும் ‘திருவாளர். கிரஹாம் ஹான்காக்’ என்பவரின் கண்டுபிடிப்புகளும் நம்பகத்தன்மையற்றiவை என நகையாடப்படுகிறதாம்.

தமிழன் தொண்மை மிகுந்தவன் எனச் சொல்வதில் பலருக்கும், பலகருத்து. 

ஒருமித்த கருத்தென்பது தமிழனுக்கு ஒவ்வாத ஒன்றோ? ஏன சந்தேகிக்கும்படியாக.. இன்றைய தினத்தை ஒரு தொலைக்காட்சி புத்தாண்டாகவும், அடுத்த தொலைக்காட்சி தனது பிறந்த தினமாகவும், மற்றொரு தொலைக்காட்சி திங்கள் பிறந்ததென்றும், இன்னுமொரு தொலைக்காட்சி ஏதுமில்லா நாளாகவும் கொண்டாடுகிறது. 

ஹூம்… இவைதானோ ‘வியப்பின் சரித்திரக் குறியீடு!?’