Wednesday, March 4, 2015

காலண்டர் கதைகள் - அறிமுகம் 1



நன்றி கூறி முடிப்பதுதான் வழக்கமென்றாலும்.. வழக்கமானதைச் செய்வதுதான் நமக்கு வழக்கமில்லையே! எனவே நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். நான் நன்றி கூறுவது திரு.வதிலைபிரபா அவர்களுக்கு. அவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
நான் என்னைக் கண்டுபிடிக்க வைத்தவர் பிரபா அவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பன் ஆனந்தபிரகாஷ்  மூலம் அறிமுகமாகிய தினம் முதல் பல்வேறு காலகட்டங்களிலும் எனது தொய்விலும், எழுச்சியிலும் இன்று வரை உடன் இருப்பவர். எனக்கு சமகால சிற்றிதழ்கள் உலகில் மெல்லிய அறிமுகம் இருக்குமென்றால் அதற்கு முழுமுழுக் காரணம் வதிலைபிரபா அவர்கள் தான்.
பல்வேறு கருத்து வேறுபாடுகளும், சிறுஊடல்களும் எங்களின் நட்பு வெளியில் நட்சத்திரங்களாய்ச் சிதறிக்கிடந்தாலும், அவர் மீதான அன்பெனும் சூரியன் முன் அவை எம்மாத்திரம்?
அது இருக்க, இந்த உரை நான் இனி தொடந்து இங்கே எழுதப்போகும் காலண்டர் கதைகளின் அறிமுக உரை.
காலண்டர் கதைகள் ஏற்கெனவெ 2010 வாக்கில் மகாகவி மாத இதழில் தொடர் கட்டுரையாய் வந்தவைதாம். அதுவும் ஒருமுறை திரு.வதிலைபிரபா அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் நான் கூறிய விசயங்களைக் கொண்டு, இதை ஏன் நீங்கள் தொடர் கட்டுரையாக எழுக்கூடாது எனக்கேட்டு அதற்கு தளமும் அமைத்துக் கொடுத்து, மாத மாதம் நான் எழுதத் தாமதிக்கும் போதெல்லாம் தாயன்புடன் பொறுத்திருந்து அன்பாய் அவர் வெளியிட்ட கட்டுரை தொடர்.
எனவே, நானும் எழுதுவேன் என நம்பிக்கைதந்து, எழுத பயிற்சியும் தந்து, எழுதவும் வைத்து, எழுதியதை வெளியீடும் செய்தளித்த திரு.வதிலைபிரபா அவர்களுக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.
காலண்டர் கதைகள் தொடர் கட்டுரையாக வந்தது என்று சொன்னேன். பல்வேறு காரணங்களாய் ஏழு எட்டு கட்டுரைகளுக்குப்பிறகு அது தொடர்ந்து மகாகவி மாத இதழில் வரவில்லை. சிற்றிதழ்களுக்கான பெருமையே அது விட்டு விட்டு வந்தாலும் ஒரேடியாக விட்டுவிடாமல் இருப்பதுதான். அப்பெருமையே நீண்ட காலம் விட்டு இனி இணையம் வாயிலாக தொடரப் போகும் இக்கட்டுரையும் ஏற்கிறது.
காலண்டர் கதைகள் என்பது, உலகலாவிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரப் பிரிவினரிடையே புழக்கத்தில் இருந்த, இருக்கும் காலண்டர்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றிக் கிடையேயான தொடர்புகளைப் பற்றிய ஆய்வும், நமது தமிழ்க்காலண்டரின் ( நாள்காட்டி தான் அய்யாக்களே.. காலண்டர் என்னும் சொல்லின் பொருள் நாட்காட்டி என்பதைக் காட்டிலும் சற்று விசாலமாக இருப்பதாக தோன்றுவதாலும் ( எவ்வாறு காலண்டர் நாட்;காட்டியை விட விசாலம் என்று கட்டுரையினுள் கண்டிப்பாக ஆயப்படும், அய்யா!)  பெரும்பாண்மை சாமாண்யர்களின் புழக்கத்தில் உள்ளதாலும் - தமிழ்க்காலண்டர் ) ஆண்டு துவங்கும் மாதத்தைப் சர்ச்சையின் ஆழமான.. அறிவியல் ரீதியான.. ஆதாரப்பூர்வமான.. தீர்விற்கான தேடல்; நிகழ்த்தும் தொடர் கட்டுரைகள் ஆகும்.
வதிலைபிரபா போன்றோர் தரும் நம்பிக்கையினாலும், எனது ஆர்வமிகுதியினாலும், சிறிதுகாலம் இது குறித்து கொஞ்சம் அறிதல்களுடன் இருந்த காரணத்தினாலும் இக்கட்டுரைத் தொடரை மீண்டும் இணைத்தில் வாயிலாக எழுத ஆரம்பிக்கிறேன்.

எனது தவறுகள் ஏதுமிருப்பின் அதைத் திருத்தும் முகமாகவும், நான் எழுதியதைக்காட்டிலும் அதிகத்தகவல் இருப்பின் அதனைத் தெரிவிக்கும் முகமாகவும் நீங்கள் இடும் கருத்துரைகளை ஆவலுடன் எதிர்பார்த்து ஆரம்பிக்கிறேன்.