Tuesday, December 15, 2015

சுமேரியர்கள் – 1

உமக்கான வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். எனக்கான வேலைகளை நான் பார்த்துக்கொள்வேன். நமக்கான வேலையை யார்பார்ப்பது?
விவசாயம் கண்டுபிடித்தாயிற்று, அதன் விளைச்சளை பகிர்ந்து கொள்ள வியாபாரம் ஆயிற்று. சமூகமாக வாழத் துவங்கியாயிற்று. இந்த அமைப்பையெல்லாம் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளிடமிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? யார் பாதுகாப்பது?
என்றெல்லாம் யோசிக்கத்துவங்கிய மனிதன்தான் அரசாங்கம் என்பதைக் கண்டறிந்தான். அதன் நெறிமுறைகளை வகுத்தான். அதன் நிர்வாகத்தைச் சரிவரச்செய்யும் மனிதனை அரசனென்றும், கோ என்றும், இறை என்றும் தொழுதான்.
இப்படி முறையான அரசாங்க அமைப்பை ஏற்படுத்திய முந்திய சமுதாயம் சுமேரியர்களின் சமுதாயம் ஆகும். சற்றேரக்குறைய மாயன்களுக்கு நிகரான காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் சுமேரியர்கள். இன்றைய ஈராக் இருக்கும் பகுதிதான் பண்டைய “சுமேரியா“.

“சுமேரியா“ என்று நானாகத்தான் குறிப்பிடுகிறேன். உண்மையில் அந்தப் பகுதியின் பெயர் “மொசபடோமியா“. உலகின் மிகப்பழுத்த ஆற்றங்கரை நாகரீக பிரதேசங்களில் மொசபடோமியாவும் ஒன்று. இயேசுகிருஸ்துவிற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பட்ட சமூகமாக வாழ்ந்து தங்கள் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர் மொசபடோமியர்கள். 
இங்கு வாழ்ந்த சுமேரியர்கள் மொசபடோமியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மொசபடோமியர்களுக்கு சுமேரியர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்தோமானால்.. அது நம் தமிழர்கள் என்ற பெயர் நமக்கு வந்ததைப் போன்றதே. ஆம், அன்றைய ”யுப்ரட்டீஸ்“ “டைகரீஸ்“ என்ற இரு நதிகளுக்கு இடைய இருந்த புமி மொசப்படோமியா. இங்கு வாழ்ந்த மோசபடோமியர்கள் பேசிய மொழி சுமேரியம் என்பது. அதனால்தான் சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள்.
இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஏழாயிரம் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, இன்று வழக்கொழிந்து போன ஒரு நாகரீகத்தை, அவர்கள் விட்டுப்போன நிரந்தமான கல்கட்டிடங்கள், பயன்படுத்திய உபகரணங்களின் எச்சங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது சரி. அவர்கள் இன்ன மொழிதான் பேசினார்கள் என எப்படி சொல்லமுடியும் என சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம்.
இதை வரலாற்று அறிஞர்கள் எப்படிக்கணிக்கிறார்கள் என்றால், ஒரு நாகரீகத்தினைத் தொடர்ந்தோ, அதற்கு மாற்றாகவோ வேறெரு நாகரீகம் உருவாகும். இப்புதிய நாகரீகத்தின் குறிப்புகளில் இருந்தும் ஆரம்ப நாரீகத்தின் சாரம்சங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறுதான், “அக்தாத்“ எனப்படும் ஒரு சமூகத்தின் குறிப்புகளின் அடிப்படையில் மொசபடோமியர்கள், சுமேரியர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றனர். அக்தாத் மொழியில் ”சுமேரியர்கள்“ என்றால் “கருந்தலை மனிதர்கள்“ என்று பொருளாம். இந்த சுமேரியர்கள் பேசிய மொழி ”சுமேரியம்”. சுமேரியம் என்ற சொல்லே அக்தாத் இனத்தினர் குறிப்பிடுகிறார்கள். எனவே, சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள் என கீழிந்து மேலாகக் கொள்ளப்படுகிறது.
இந்த சுமேரியர்கள், வழக்கமான மற்ற நாகரீகத்தைப்போல், கட்டிங்கள் கட்டினார்கள், கணக்கில், வாணியலில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதையும் தாண்டி சுமேரியர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்பது, அவர்கள் முதன்முதலில் முறைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பைக்கொண்டிருந்தனர். இரண்டாவது அவர்கள்தான் “சக்கரத்தின்“ பயன்பாட்டைக் கண்டறிந்த முன்னோடியினர். இந்த இரண்டிற்கும் மேலாக இருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த மூன்றாவது சிறப்பம்சம், அவர்கள் ஆகச்சிறந்த நீர்மேலாண்மையை மேற்கொண்டிருந்தனர்.
மொசபடோமிய பகுதி இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியானாலும், இந்தப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. ஆண்டிடொன்றிற்கு 13 செ.மி.யையும் விடக்குறைவு. இதனால், ஆண்டு முழுவதுமான விவசாய தேவைக்கு பல்வேறு ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் வெட்டி அதனை முறையாகப்பயன்படுத்திவந்தனர். இந்த பொதுநீர் மேலாண்மையை சுமேரிய அரசு செவ்வனே செய்து வந்தது. கவனிக்கவும், “சுமேரிய அரசு“ நீர்மேலாண்மையை செவ்வனே செய்து வந்தது.

இவ்வாறெல்லாம் திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்த, வேளாண் வளமை மிகுந்த சுமேரியர்கள் கணக்கிலும் புலிகள் தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

Sunday, November 15, 2015

நம்மைப் போன்ற நாகரீகம்!

இஸ்லாமிய மாத வரிசைகள் நன்கு குரானை அறிந்து இஸ்லாமிய காலண்டரை முறையாகப் பயன்படுத்திவருபவர்களுக்குத்தான் தெரியக்கூடும். அது அறியாதவர்களிடம் மாதங்கள் பற்றிக் கேட்போமானால் அவர்கள் கொச்சையாக பேச்சு வழக்கில் உள்ள .. ஆஷரா, சபர் கழிவு, மவ்லூது, மைதீன் கந்தூரி. மீரான் கந்தூரி, விராத், தோவத்து, நோன்பு என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். இவை ஒத்துக்கொள்ளப்பட்ட இஸ்லாத்தின் மாதங்கள் அல்ல. ஆனால், ஒத்துக்கொள்ளப்பட்ட மாதங்களில் வரும் நிகழ்வுகள். 

முதலில் நிகழ்வுகளைச் சொல்லி மாதங்களை நினைவுகூறும் நடைமுறை வந்தது. பின்னர் அதுவே.. நிலைபெற்று விட்டது என்பதுதான் இத்தகைய தன்மைக்குக் காரணம்.

இஸ்லாமியர்களின் பன்னிரண்டு மாதங்களில் - துல்கஅதாஃ, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் மட்டும் புனிதமாதங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நான்கு மாதங்கள் தீமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் போர் செய்தல் தடுக்கப்பட்டு உள்ளது. போர்கள் கொலைக்கும், கொடும் குற்றங்களுக்கும் வழிவகுப்பதால் குறைந்த பட்சம் இந்த நான்கு மாதங்களிலாவது அமைதி நிலவட்டும் என்ற நோக்கில், இம்மாதங்களில் போரில் ஈடுபட இறைமார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 

மக்கத்துக்கு காஃபீர்கள் (முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்) பல்லாண்டுகளாக முஸ்லீம்களை மதீனாவிற்குள் நுழைய இடம் அளிக்க வில்லை. அவர்கள் அல்லாஹீவிற்கும் இறைத்தூதருக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று குவித்தனர். 

இவர்களிடம் தூது செல்வதற்காக நபிகள் ஒரு குழுவினரை போர் தடைசெய்யப்பட்ட புனித மாதத்தில் அனுப்பினார். ஆனால் காஃபீர்களைக் கண்டவுடன் தூதுக்குழுவினர் போர்ச்செயலில் ஈடுபட்டனர். இது முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவர்கள் தூதுக்குழுவினரைக் கண்டித்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து நபிகள் புனிதமாதத்தில் நடைபெற்ற போர்களை மிகவும் வெறுத்தார் என்பது தெரிகிறது.

ஆனால், இஸ்லாமியர்கள் போர் செய்யாத போது, எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் என்ன செய்வது எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது.. நீங்கள் அல்லாஹுவிடம் நம்பிக்கையாய் இருங்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புனித மாதங்களில் உங்களைத் தாக்குபவர்கள் மீது நீங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். என நபிகள் விலக்கு அளித்துள்ளார்.

போர் தவிர, விபச்சாரம், எளியோர்க்கு தீங்கு இளைத்தல் போன்றவையும் புனித மாதங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. புல் வெட்டுதல் மரம் வெட்டுதல் போன்றவை கூட ஹராத் (பாவச்செயல்) தான். இன்னும் சொல்லப் போனால் தாடி மீசை சிரைத்தல் கூட இந்த மாதங்களில் பாவக்கணக்கில்தான் வருகின்றன.

சிலர் (அறியாமையில்) ரமலான் மாதமும் புனிதமாதங்களில் ஒன்றாக கணக்கிடுவார். ஆனால் குரானில் நான்கு மாதங்கள் மட்டுமே புனிதமாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதங்களை தீமைகளில் இருந்து விலகி அல்லாஹ்வை அடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேற்கூரிய இந்த நான்கு மாதங்களைத் தவிர ஐந்தாவது மாதமாக ரமலானை சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனாலும், ரமலான் மாதம் இறைவனால் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட – நோன்புக்கான மாதம் தான்.

ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் இஸ்லாத்தின் காலண்டர், முஸல்மான்களின் வழிபாட்டு, மதம்சார் விழாக் கொண்டாட்ட நெறிமுறைகளை உலகெங்கும் அனைவருக்கும் ஒன்றாக பரிபாலிக்கிது. ஈது (விழா) நாளில் கருப்பர், சிவப்பர், பணக்காரன், ஏழை, மேற்கத்தியர், கிழக்கு நாட்டிலிருந்து வருபவர் போன்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் ஒன்றினைக்கிறது. அனைவரையும் “ஜம் ஜம்“ புனித நீரைப்பருகியவாரே மக்காவின் சதுக்கத்தில் அல்லாஹ்வைத் தொழ வைக்கிறது.

இம்மாதிரியான மதம்சார் ஒற்றுமையை விளைவிக்கும் காலண்டர் ஒன்று இருக்குமானல் அது இஸ்லாமிய காலண்டர் ஒன்றுமட்டும்தான். 

ஆக, இஸ்லாமிய காலண்டர்கள் ஆண்டுத்துவக்கமானது அதன் சுற்றான பன்னிரண்டு நிலவின் மாதங்களைத் தொடர்ந்து வருகிறது. வாரங்கள் சனியில் துவங்கி வெள்ளியில் முடியும் ஏழு நாட்களைக் கொண்டவை. நாட்கள் இரவு நிலவோடு ஆரம்பித்துத் தொடரும் இருபத்தி நான்கு மணிநேரத்தை உடைய ஒரு இரவும்-பகலும் சேர்ந்தது என்பனவற்றையெல்லாம் கண்டோம்.

இம்மாதிரியான உலகெங்கும் பயன்படுத்தப்படும் காலண்டர் போன்றது நம் தமிழ்க்காலண்டர் இல்லை. இது நமது இனக்குழுவின் பண்பாட்டின், பாரம்பரியத்தின் விழுமியங்களைக் கொண்டு நெய்யப்பட்டதாகும்.



நம்மைபோலவே, மாயன்களைப் போலவே, சீனர்களைப் போலவே - உலகின் வேறுஒரு பகுதியில் வாழ்ந்த ஆதிகுடிகளான, மற்றொரு நாகரீகத்தின் தோற்றுவிப்பாளர்களான சுமேரியர்களும் – துவக்க கால காலண்டரின் வடிவமைப்பாளர்கள் தான்.

Thursday, November 5, 2015

நல்லவை நான்கு

மாதங்கள் சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்தலை ஒட்டி ஆரம்பிக்கவும் முடியவும் செய்கின்றன. இப்படிச் சரியாக 29 அல்லது 30 நாட்கள் ஒரு மாதத்திற்கு. ஆண்டுக்கு 354 அல்லது 355 நாட்கள்.

அப்படியானால் கிரிகோரியன் காலண்டருக்கும் இஸ்லாமிய காலண்டருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் வருமே என்று கேட்கிறீர்களா? ஆமாம் வரும்தான். ஆனாலும் இப்படித்தான் இஸ்லாமிய காலண்டர் இயங்குகிறது. 

இந்த முன்னூற்றி அறுபத்து ஐந்தேகால் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவரும் காலம். மாறிமாறி வரும் பருவநிலை மாற்றங்கள் – இதைப்பற்றி யெல்லாம் இஸ்லாத்காலண்டர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், ஹிஜ்ரத் எனப்படும் ஆண்டுக் கணக்கானது முழுக்க முழுக்க தனித்துவமானது, நிலவைப் பின்பற்றியே செல்லக்கூடியது. நிலவு எல்லாப்பருவத்திலும் எந்நாளும் போல் தன் வளர்ந்து தேயும் பணியைச் செவ்வனே செய்வது போல், ஹிஜ்ரத்தும் தன்வழி செல்கிறது.

ஒரு காலண்டர் என்பது பண்பாட்டின் வெளிப்பாடு. பயன்பாட்டின் காலக்கோடு. அப்படித்தான் உலகின் எல்லாப்பாகங்களிலும் காலண்டர்கள் குறிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நைல்நதியின் வெள்ளப்பெருக்கை கணக்கில் கொள்வதற்காகத்தான் எகிப்தியர்கள் பருவநிலை மாற்றங்களை குறித்துக்கொண்டார்கள் எனப்பார்த்தோம். இதில் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்தும், அவர்கள் வாழ்வாதாரம் குறித்தும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.


அதே போல்தான் விவசாயம் சார்ந்த நாடுகளில், சூரியனின் அடிப்படையிலான காலண்டர்களும் தோன்றின. ஏனெனில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயமானது முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களுக்கு உட்பட்டது. பருவநிலை மாற்றமோ பூமி சூரியனைச் சுற்றிவரும் செய்கையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவேதான், விவசாய நாடுகளில் – நிலவின் சுற்றுக்களை மாதமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் – நிலவின் மாதத்திற்கும், சூரிய தொடர்புடைய ஆண்டிற்கும் சமன் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வாரக்கணக்கை ஆண்டுக்கணக்குடன் நம்மைப்போன்ற விவசாய நாடுகள் சமன் செய்ய முயற்சிக்கவில்லை. வாரங்கள் தன்போக்கிற்கு வந்துகொண்டேயிருக்கிறது.


அத்தகைய நிர்ப்பந்தங்கள் ஏதும் இஸ்லாமிய காலண்டர்களுக்கு இல்லை. இஸ்லாமிய காலண்டர்களின் உற்பத்தி ஸ்தானமான அரபுநாடுகள் பெரும்பாலும் பாலை வனத்தால் ஆனவை. அவற்றில் விவசாயம் நடத்துவது எளிதல்ல. (தற்போதைய துபாய் உட்பட்ட அரபுநாடுகளில் நவீன முறைகளைப்பின்பற்றி பெரும் தோட்டங்களை உருவாக்கி பாலை நிலத்தில் சோலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வேறு விசயம்). 

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு பாலைவனங்களில் விவசாயம் இல்லை. வணிகமே பிரதான தொழில். ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்ப்பதும் தொழிலாக இருந்திருக்கிறது. பெட்ரோல் கண்டுபிடிப்பெல்லாம் பிற்காலத்தியவை.

அரபுமார்கள் பெரும் பணம் மிகுந்த பிரபுமார்களாக இருந்திருக்கின்றனர். உலகின் பல தேசங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து பெரும் பொருள் குவித்திருக்கின்றன். அவ்வாறு வியாபாரம் செய்ய இயலாதவர்கள் – பெரும் தனவந்தர்களின் அடிமையாக இருந்திருக்கின்றனர். .இந்நிலையால்தான் ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு அரபுநாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. இந்நிலை அகற்றி ஏழைகளுக்கு அருள்பாலிக்கத்தான் தன் பெரும் போதனைகளை நபிகள்(ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்.

இத்தகைய வாழ்க்கை முறைக்கு சூரிய காலண்டர்கள் அவசியப்பட்டிருக்கவில்லை போலும். அதனால்தான் நிலவினை அடிப்படையான காலண்டர்களை அல்லாஹ் அருளினார் போலும். எனவேதான் சில சமயங்களில் தீபாவளியை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் பொங்கலை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் ஒரே கிரிகோரியன் ஆண்டில் இரண்டு ரம்ஸானும் வர நேர்கிறது.

ஆக, இஸ்லாத் மாதங்கள் ஆண்டிற்கு பன்னிரண்டு. 

1. முஃகர்ரம்

2. சஃபர்

3. ரபி உல் அவ்வல்

4. ரபி உல் ஆகிர்

5. ஜமா அத்துல் அவ்வல்

6. ஜமா அத்துல் ஆகிர்

7. ரஜப்

8. ஷஃபான்

9. ரமலான்

10. ஷவ்வால்

11. துல் கஃதா

12. துல் ஹிஜ்ஜா

என்பவைதான் அவைகள்.

இஸ்லாமிய மதம் தியாகத்தைப் போற்றுகிறது. தியாகமே இஸ்லாம் சொல்லும் அடிப்படை கருத்து. எனவேதான், இஸ்லாமிய காலண்டர்களும் தியாகத்தைக் குறிக்கும் மாதத்தினில் ஆரம்பித்து தியாகத்தைக் குறிக்கும் மாதத்தில் முடிவடைகிறது.


முதல் மாதமான முஃகர்ரமானது, முகமது நபிகள் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி அவர்கள் நாட்டில் பிரபுக்களின் (காஃபிர்கள்) கொடுமை வீழ்ந்து ஏழை எளியோரின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, கர்பலாக் என்னும் போர்களத்தில் தனது இன்னுயிரை இழந்ததைக் குறிப்பிடும் தியாக மாதமாகும்.


பன்னிரண்டாவது மாதமான துல்ஹிஜ்ஜாவோ – இறை நம்பிக்கையில் தலைசிறந்தவரான இப்ராஹிம் அலை அவர்கள் தனது அருந்தவப்புதல்வனான இஸ்மாயிலை இறைவனுக்கு பலியிடத்துணிந்த தியாகத்தைக் குறிக்கிறது. 


இவ்வாறான தியாகத்தைப்போற்றும் இஸ்லாமியக்காலண்டர்களில் நான்கு மாதங்கள் மிகப்புனிதம் வாய்ந்தவையாக அல்லாஹ் அறிவுறுத்துகிறார். இம்மாதங்களில் பாவங்கள் செய்யாத படிக்கு இஸ்லாமியர்களை ஆணையிடுகிறார்.

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்'' (ஸஹீஹுல் புஹாரி- -3197)

என்று ஸல் அவர்கள் விளக்குகிறார்.

Thursday, October 29, 2015

பல்லி - வெள்ளி

ஆதி நாளில் அறிவுடையோர் சேர்ந்த மக்கள் குழுவானது முகம்மது நபிகள் (ஸல்) அவர்களிடம், நிலவு நாள்தோறும் தேய்ந்து வளர்ந்தும் வருகிறதே அதற்கான காரணம் என்ன? அதனைக் கொண்டு அல்லாஹ் என்ன நமக்கு அருள்கிறார் என்று கேட்டார்கள். அப்பொழுதுதான் குரானின் காலண்டர்கள் பற்றிய தெய்வ வசனம் எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்டது.

"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. நீங்கள் அவற்றை பின்பற்றி வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 02:189 ) 

மேலும் கீழ்வரும் வசனங்களும் இறைவனால் உரைக்கப்பட்டு நிலவின் அடிப்படையிலான நாட்களின் கணக்கீட்டைக் குறிக்கின்றன.

"அவன் தான் (அல்லாஹ்) சூரியனைச் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் தக்க காரணம் கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் இவ்வாறு அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." (திருக்குர்ஆன் 10:5)

இவ்வாறான இறைவாக்கின் அடிப்படையில் இனிமை தாலாட்டும் இரவில் துவங்குகின்றது இஸ்லாத்தின் “நாள்“. நிலவின் உதயகாலத்தில் நாள் என்பது பிறக்கும் என்று அல்லாஹ் ஆரம்ப காலத்திலேயே அருளியிருக்கிறார் என்பதுதான் முசல்மான்களின் நம்பிக்கை. அறிவியலின் படியும் நிலவின் அடிப்படையில் பிரிக்கப்படும் நாட்கள் மிகவும் துல்லியமானது. இயற்கையானது. பிழைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லாதது. ஆனால் நவீன காலத்தில் ‘ஹதீஸ்’களைக் ( ஹதீஸ்கள் என்றால் நிலவின் தேய்தல் வளர்தலைக் கணக்கிடும் இஸ்லாமிய முறை ) கணக்கிடுவதில் பண்டைய நுட்பங்களை அறிந்தவர்கள் இல்லாத காரணத்தினால் சிற்சில தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. அதனாலேதான் ரம்ஸான் போன்ற விஷேச தினங்களைக் கடைசிக்கட்டம் வரையில் காத்திருந்து நிலவின் பிறைபார்த்து அறிவிக்க வேண்டியிருக்கிறது.

வரலாற்றைக் காண்போமானால் வெவ்வேறு காலகட்டத்தில் முஸ்லீம்களின் –நாளை-க் கணக்கிடும் முறை மாறுபட்டு வந்துள்ளது. கணித அடிப்படையில் நிலவின் படிநிலைகளைக் கணக்கிட்டு நாட்களை முன்கூட்டிய கணித்த காலண்டர்களைக் வெளியிடுவது ஒரு முறை. 

அந்த அந்த பொழுதுகளில் பிறை தெரிவதைப் பார்த்த பிறகே – புதிய நாளோ மாதமே பிறப்பதாக அறிவிப்பது மற்றொரு முறை. இவ்விரண்டு முறைகளிலும், துல்லிய கணக்குகளின் அடிப்படையில் நாளையும் – மாதத்தையும் கணக்கிட்டு முன்கூட்டியே வெளியிடும் காலண்டர் முறையே நவீன காலத்திற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுவே சற்றேரக்குறைய உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டும் வருகிறது.

ஏழு நாட்களைக் கொண்டது ஒரு வாரம். இந்த வார நாட்கள் நம் நாட்டுக்காலண்டர்கள் போலவோ, தற்போதைய கிரிகோரியன் காலண்டர்கள் போலவோ.. கிரகங்களின் பெயரிடப்பட்டவை அல்ல. மாறாக. அரபுக்காலண்டர்களோ தன் வாரநாட்களின் பெயர்களாக வரிசை எண்களையே கொண்டிருக்கின்றன.

அஹத் என்ற அரேபியச் சொல்லிற்கு முதன்மை என்று பொருள். எனவேதான் இஸ்லாமியக்காலண்டரின்படி வாரத்தின் முதல் நாளான சனிக்கிழமைக்கு “யௌமுல் அஹத்“ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆமாம் பாஸ் ஆமாம். முஸ்லீம்களுக்கு வாரத்தின் முதல்நாள் சனிக்கிழமை. கடைசிநாள் வெள்ளிக்கிழமை. இந்த இறுதிநாள் இறைவனுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளிக்கிழமை “துஆ – பிரார்த்தனை செய்வது“ புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது.



இந்த வெள்ளிக்கிழமை சம்மந்தமாக எங்களது இளமைக்காலத்தில் பல்வேறு வதந்திகள் உலவிவந்தன. நாங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த ஒரு தெருவில் அப்போது வசித்து வந்தோம். முஸ்லீம் சிறுவர்களுடன்தான் அதீத நட்பு. சரியா? தவறா? என்று எனக்குத் தெரியவில்லை என்ற போதிலும் எங்களுக்குள் ஒரு வினோதப் பழக்கம் உண்டு. அதாவது வெள்ளிக்கிழமை அன்று “பல்லி“யைக் கொன்றால் அல்லாஹ் அருள்புரிவான் என்று நம்பிக்கை கொண்டு, வகைதொகையில்லாமல் பல்லியை துரத்தித்துரத்தி கொன்றிருக்கிறோம். 

ஒருமுறை என் நண்பன் சாகுல் அன்று நாங்கள் அடித்த செத்த பல்லிகளையெல்லாம் அவனது அரைக்கால்சட்டையின் பாக்கெட்டில் போட்டு வைத்தவாறு மறந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். மறுநாள் காலையிலும் மறந்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான்.

அன்று மதியம்போல் அவனது அக்கா அந்த உடையைத் துவைக்க எடுத்த போது அவன் சேர்த்து வைத்த பல்லிகளைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டாராம். நாங்கள் மாலையில் பள்ளி விட்டு வந்தபிறகு, சாகுலின் அம்மா.. அவன் சேர்த்து வைத்திருந்த செத்த பல்லிகளுக்காக.. எங்களைச் சாவடி அடித்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சாகும் வரை மறக்க முடியாதல்லவா?

அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையில் முடியும் வாரத்தின் பட்டியல் இதோ..

எண்
இசுலாமிய நாள்
தமிழ் நாள்
1 வது
யௌமுல் அஹத்
சனிக் கிழமை
2 வது
யௌமுல் இஸ்னைண்
ஞாயிற்றுக் கிழமை
3 வது
யௌமுல் ஸுலஸா
திங்கட் கிழமை
4 வது
யௌமுல் அருபா
செவ்வாய்க் கிழமை
5 வது
யௌமுல் கமைஸ்
புதன் கிழமை
6 வது
யௌமுல் ஜுமுஆ
வியாழக் கிழமை
7 வது
யௌமுல் ஸப்த்
வெள்ளிக் கிழமை

Friday, October 23, 2015

அமாவாசையும் அப்துல்காதரும்

“இறக்கும் நாள் தெரிந்து விட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும்“ என்று சொல்வார்கள். அதனால்தானோ? என்னவோ? ஆண்டவன் நாம் இறக்கும்நாள் எது என்பதை நாம் இருக்கும்நாள் வரை தெரியவிடாமலே வைத்திருக்கிறான்.

ஆனாலும், இறக்கும் நாள் பற்றியும்.. இந்த உலகின் இறுதிபற்றியும் நாம் கேள்விப்படும் விஷயங்களில் மனம் லயிக்கத்தான் செய்கிறது. நமது காலண்டர்கதைகளும் மாயன்காலண்டரைத் தொடர்ந்து இப்போது இஸ்லாமியக் காலண்டரைப் பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்து விட்ட போதிலும்.. “இறுதித்தீர்ப்பினைப் பற்றிய விஷயங்களையே கடந்த ஓரிரு வாரங்களாகவே பேசிக்கொண்டேயிருக்கிறோம். ஆன போதிலும் இறுதித்தீர்ப்பின் விஷயங்கள் இறுதியாகி விடுவதில்லை. இன்னும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

இஸ்லாமிய காலண்டருக்கு வருவோம்.

உலக வரைபடத்தின் மிகச்சரியான மையப் புள்ளியில் அமைந்துள்ளது மெக்கா நகரம். உலகெங்கும் இருக்கும் இஸ்லாத்தை தழுவியவர்களின் புன்னியஸ்தலம். இஸ்லாமிய கோட்பாடுகளின் மையம். இந்த புன்னிய தேசத்தை சுற்றிலும் அமைந்திருக்கும் அரபு நாடுகள் தான் இன்றைய இஸ்லாமிய மார்க்கத்தின் தொட்டில். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து மக்களை நல்வழிப்படுத்தி – காஃபீர்களின் (இஸ்லாத்திற்கும் அல்லாஹ்விற்கும் எதிரானவர்கள்) வசமிருந்து மக்களைக் காப்பாற்றி – இறைவனை அடையும் நல்மார்க்கத்தை உருவாக்கிய திவ்ய பிரதேசம்.

இன்றைக்கு இந்த அரபு நாடுகளிடமிருந்து உலகின் பிற நாடுகள் எல்லாம் பெட்ரோல் வாங்கி கடன் கணக்கு வைத்திருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் கைமாறு செய்ய இயலாத கணக்குக்கடனும் வைத்திருக்கின்றன. ஆம், இன்றைக்கு நாம் உட்பட உலகமெங்கும் மக்கள் செய்யும் எந்தக்கணக்கிலும் பயன்படும் எண்களின் வடிவத்தை அளித்தது அரபு நாடுகளாகும்.

தமிழ் மட்டுமல்லாது நமது இந்தியாவில் இருக்கும் மொழிகளின் பயன்பாட்டு எண் வடிவங்களும் – உலகின் நாடுகளில் இருக்கும் எண் வடிவங்களும் எளிதில் தத்தம் மொழிக்காரர்களாலேயே புழங்க முடியாத கடின வடிவம் கொண்டவை. 

தமிழ் முறைப்படி எண்களை நாம் “க-ச-ஞ“ என்றுதான் துவங்கி எழுதவேண்டும். அப்படி எழுத நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும். எழுத்தத்தெரியும், தெரியாதது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழின் எண் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்றுகூட பலருக்குத் தெரியாத சூழ்நிலைதான் நிலவுகிறது. 


ஆங்கில முறையோ ஆரம்பகாலத்தில் நாம் இப்போது ரோமன் லெட்டர் என்று சொல்லப்படும் I, II, III, IV, V.. எனத்தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஐரோப்பிய முழுமைக்கும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். 


அமெரிக்க ஆதிகுடிகளின் எண்களையும்தான் பார்த்தோமே.. இருபதின் அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்துக்களாக! 


சீனம் உட்பட்ட மேற்காசிய நாடுகளும் போன்று விசித்திர சித்திர எழுத்துக்களே இருக்கின்றன.


அரபு எண்கள்தான் 1,2,3.. என்ற வடிவம் கொண்டது. இந்த அரபு எண்கள்தான் இன்று உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறோம். 1, 2, 3 என்கின்ற இந்த வடிவத்தில்தான் நமக்கு எண்கள் அறிமுகமாகி – அன்யோன்யமாக உள்ளது. இந்த வடிவத்தைத் தவிர்த்த வேறு உருவத்தில் நமக்கு எண்கள் என்பது அன்னியம் தானே? 

எண்களின் ஆரம்ப காலம் தொட்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே காலம் வரை அரபுஎண்களே எல்லாவகையிலும் எளிமையானதாகவும் இயல்பானதாகவும் உலகம் முழுவதும் பயன்படுகிறது. இப்போது மனதினுள் எண்ணிப்பாருங்கள், விரல்விட்டு எண்ணியும் பாருங்கள்.. அரபு நாடுகள் – கணக்கு உலகிற்கு அளித்த பங்களிப்பு எத்துனை அளப்பரியது என்று. 

அப்படியெல்லாம் கணக்குலகிற்கு பங்களித்த அரபு நாடுகள் காலண்டர் விசயத்திலும் கைவிட்டுவிடுமா என்ன? கிரிகோரிஸ் காலண்டருக்கு அடுத்த படியாக உலகெங்கும்.. எல்லாத்தரப்பு மக்களாலும்.. எல்லா மொழி பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு காலண்டர் உண்டென்றால் அது அரபுகளின் உலகக்கொடையான இஸ்லாமியக் காலண்டரே!




இஸ்லாம் மதத்தில் பின்பற்றப்படும் காலண்டர் இறைவன் அல்லாஹ் - இறைத்தூதர் நபிகள் (ஸல்) அவர்களின் மூலமாக “உம்மத்“ (உம்மத் - உலகமக்கள்) உயர்வுற வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகத்தின் காலத்திற்கு அப்பால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 639ல் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இஸ்லாத்தின் காலண்டர். இதன்படி நபிகள் நாயகத்தின் வாழ்கைக்காலத்தின் பின் அக்காலத்தை மையமாகக் கொண்டு அதிலும் குறிப்பாக.. நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த காலம் தொட்டு ( கிரிகோரிஸ் காலண்டரில் கிருஸ்துவின் பிறப்பை கணக்கில் எடுத்துக் கொள்வது போல) துவங்குகிறது இக்காலண்டர். இஸ்லாமிய காலண்டருக்கு ஹிஜ்ரத் காலண்டர் எனவும் பெயர் உண்டு. ஹிஜ்ரத் என்றாலே புலம்பெயர்வு என்றுதான் அர்த்தம். 


இஸ்லாமியக் காலண்டர் நிலவினை அடிப்படையாகக் கொண்டது. உலககெங்கும் சூரிய அடிப்படையானதும், சூரியன் மற்றும் சந்திரன் இரண்டு ஒளிரும் கிரகங்களையும் அனுசரித்து வருவதுமான பல்வேறு காலண்டர்கள் இயக்கத்தில் உள்ளன. முழுக்க முழுக்க சந்திரனின் அடிப்படையில் ஆன நிலவு காலண்டர் என்பது இஸ்லாத் காலண்டர் மட்டும் தான்.


அல்லாஹ் ஆணைப்படி இஸ்லாத் காலண்டர்கள் 12 மாதங்களையும், 7 நாட்களைக் கொண்ட வாரங்களையும்.. இரவில் ஆரம்பிக்கும் நாளையும் கொண்டது.


நமது தமிழ் நாட்காட்டியின் படி நாள் என்பது காலையில் சூரிய உதயத்துடன் ஆரம்பிக்கிறது. முதலில் பகலும் தொடரும் இரவும் சேர்ந்த ஒரு நாள். கிரிகோரிஸ் காலண்டரின் நாள்.. நள்ளிரவில் ஆரம்பிக்கிறது. இரவு பன்னிரண்டு மணியில் இருந்து மருநாள் இரவு பன்னிரண்டு மணிவரையிருக்கும் இருபத்துநான்கு மணிநேரம் ஒரு நாள். இஸ்லாத்தின் நாளோ.. இரவு நிலவு உதித்தவுடன் மாலை நேரத்தில் ஆரம்பிக்கிறது. முதலில் வரும் முழுமையான இரவும் தொடரும் பகலும் சேர்ந்து ஒரு நாள் என்ற கணக்கில் வருகிறது. 


அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.. நாளின் தொடக்கத்தில் தூய இஸ்லாமியர்கள் “தக்பீர்“ சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். “தக்பீர்“ என்னும் துவக்க இறைவணக்கமானது சூரிய அஸ்தமனித்தின் போது சந்திர உதயகாலத்தில்.. அதாவது அரபு நாளின் துவக்கத்தில்.. சொல்லப்பட வேண்டும்.


அரபு மாதங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. நிலவின் தேய்தல் வளர்தனில் அடிப்படையில்தால் மாதங்கள் அமைந்திருக்கின்றன. நிலவின் அடிப்படையில் வரும் மாறுதல்களைப் பொறுத்தே நிகழ்மாற்று தகவமைப்புடன் ( Changeable according to current events) இஸ்லாமிய மாதங்கள் பிறக்கின்றன. நிலவின் வளர்ச்சியும் தேய்தலும் நேரடியாக இஸ்லாத்தின் மாதங்களை பாதிக்கின்றன. அமாவாசையும் பௌர்ணமியும்தான் அவர்தம் அன்றாட வாழ்வியலையும், வாழ்வின் கொண்டாட்டங்களையும், விழா நாட்களையும் தீர்மானிகின்றன. நிலவுக்கும் முசல்மான்களுக்குமான பிரிக்கமுடியாத பிணைப்பை உணர்ந்த நம்மவர்கள்தான் “அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் பார்த்தாயா?“ எனச்சொல்லி சொல்லி வியந்தார்கள்.

Tuesday, October 20, 2015

தஜ்ஜால்

உலகின் இறுதியென்பது உறுதியானது. அது எப்பொழுது வரும் என்பதுதான் அல்லாஹ்வின் கையிலிருக்கிறது.

மனிதநேயர் முகம்மது நபிகள் ஸல் அவர்கள் வாயிலாக இம்மை முடிந்து மறுமை மலரும் அந்த நாட்களை உலகத்தோராகிய நாம் சிற்சில குறிப்புக்கள் மூலம் அறியத்தந்துள்ளார் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்.

1.   பெரும்புகை மூட்டம் தோன்றும்
2.   அதிசய பிராணி ஒன்று உலகை மிரட்டும்
3.   மேற்கில் சூரியன் உதிக்கும்
4.   ஈஸா நபி வருகைபுரிவார்
5.   யஹ்ஜுஜ்,  மஹ்ஜுஜ் வருகை நிகழும்
6.   கிழக்கு திசையில் மாபெரும் இயற்கைச்சீற்றம்
7.   மேற்கு திசையிலும் ஒரு புகம்பம்
8.   அரபுதீபகற்பத்திலும் ஒரு புகம்பம்
9.   பெரும் நெருப்பு தோன்றும்
10. இறுதியானதாகவும் மிக முக்கியமானதுமான உலக அழிவின் அடையாளமானது.. தஜ்ஜாலின் வருகை.

தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த தஜ்ஜால் என்பவன் – கிருஸ்துவ நம்பிக்கையில் செல்லப்படும் “அந்திக்கிருஸ்து“ போன்றவன் ஆவான்.


''ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை) நாள் வரும்

வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

குட்டையான குண்டான அவன் குறுமலையைப் போன்று தோற்றமளிப்பான். மகா பொய்களைக்கூட உண்மை போன்று கூறும் ஆற்றல் மிக்கவன். அவனது கால்கள் பருத்தும் அகண்டும் காணப்படும். நினைத்த மாத்திரத்தில் மழையைப் பொழியவைக்கும் ஆற்றலும் அவனிடத்தில் உண்டு. கால்நடைகளை ஒரே நாளில் பன்மடங்கு கொழுக்கச் செய்வான். மலையளவு உணவுப்பொருட்களை உடைய கிடங்கும் அவன் கையகப்படுத்தியிருப்பான்.


தஜ்ஜால் வலது கண்ணில் ஊணம் உடையவன். கிழக்கு நாடுகளில் இருந்து வெளிவரும் அவனது ஊணமுற்ற வலதுகண் பெரிய கருத்த திராட்சைப்பழத்தைப் போன்று காட்சியளிக்கும். மந்திர தந்திரங்களில் தேர்ந்தவனான அவன் இறந்தவர்களை பிழைக்கவைக்கும் ஆற்றல் உடையவன். உயிரோடிப்பவர்களையும் கொல்லக்கூடியவன் எனச்சொல்லத் தேவையில்லை. பிறவிக்குருடு, கொடும் குஷ்டம் போன்ற நோய்களைக்கூட குணப்படுத்திக் காப்பாற்ற வல்லவனாக இருப்பான்.

இந்த தஜ்ஜால் முதலில் நல்லவன் போல உலக மக்களிடையே அறிமுகமாகி மெல்ல மெல்ல அனைவரின் அபிப்பிராயத்தையும் பெற்று பின்.. துரோகம் செய்ய ஆரம்பிப்ப்பான். தானே இறைவன் எனக்கூறி ஈமான்களை நம்பிக்கையுறச்செய்வான்.  அவனிடத்தில் சொர்க்கமும் நரகமும் உண்டு. அவன் சொர்க்த்தை நரகம் எனவும் நரகத்தை சொர்க்கம் எனவும் கூறி ஏமாற்றுவான். ஏமாந்தவர்கள் அவன்காட்டிய சொர்கத்தில் சென்று நரகவேதனையை அடைவார்கள்.

அவனிடத்திலே தண்மை பொருந்திய நீரும், சுடும் நெருப்பும் உண்டு. சுடும் நெருப்பை நீரென்று சொல்லி உண்ணத்தருவான். இறைவனிடத்திலே கட்டுப்பட்டோர் தவிர ஏனையோர் அவற்றை வாங்கி உண்டு தாங்கொணா நெருப்பின் தழலில் மடிவார்கள்.

அவனால் ஒரு இறைத்தூதர் கொல்லப்படுவார். அவன் அவரை மீண்டும் பிழைக்க வைப்பான். ஆனால் மறுபடி அவரைக் தஜ்ஜால் கொல்ல முற்படும் போது.. அவனால் இறைத்தூதரைக் கொல்ல முடியாது. அதுதான் அவனது அழிவிற்கு ஆரம்பம். உலகின் இறுதி.

அவன் மெக்கா, மெதினா தவிர உலகின் எல்லாப்பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்வான்.  அவ்வாறு அவன் பிரயாணம் செய்து மக்களுக்கு துன்பம் அளித்து வரும் வேளையில் பாலஸ்தீனத்திலுள்ள “லுத்து“ என்னு பெருநகரின் நுழைவாயில் அருகே அவனுக்கு ஈஸா நபி (அலை) அவர்களுக்கும் பெரும் யுத்தம் மூளும். அந்த யுத்தத்தின் இறுதியில் அவன் – தஜ்ஜால் கொல்லப்படுவான்.  

அவனால் விளைவிக்கப்பட்ட தீமைகள் அவனுக்குப்பின்னும் தொடர்ந்து உலகை அழிவுறச்செய்யும். ஆனால், இறைநம்பிக்கையில் இஸ்லாத்தைச் சார்ந்தோர்கள் இந்த இறுதித்தீர்ப்பின் நெருக்கத்திலும் தஜ்ஜாலின் தீமைகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் மார்க்கம் உள்ளது.

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள்...

''உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக அல்கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்வாறு பிரார்த்திக்குங்கால், இறைத்தூதரின் மொழிப்படி நம்மை இரட்சிக்கவும் இறைவன் அருளுள்ளம் கொண்டுள்ளார். 

Wednesday, October 7, 2015

இறுதித் தீர்ப்பு நாள்

உண்மையில் மாயன்கள் என்றொரு பெரும் கலாச்சாரம் கொண்ட ஆதிஇனம் இருந்தது என்பதைப்பற்றிய உலகின் கவனம் குவிந்தது, நாமும் இதுவரை அவர்களைப்பற்றிப் பார்த்து வந்தது எல்லாம், அவர்களின் ஆச்சரியம் மிக்க கணிப்புகளால்தான். அதையும் அவர்கள் கல்வெட்டுக்களாக, தங்களின் பிரம்மாண்டக் கட்டிடங்களில் குறித்து வைத்திருந்ததனால்தான்.

இம்மாதிரிக் குறிப்பெடுத்தல் என்பதைச் செய்யாமல் விட்டுவிட்ட எத்தனையோ அமைதியான, அழகான, அறிவார்ந்த, இன்றைய நமது பலகேள்விகளுக்கு விடைசொல்லக்கூடிய இனக்குழுக்கள் அன்றைக்கே உலகில் பலபகுதிகளில் பரந்து விரிந்து இருந்து இருக்கலாம். அவர்களை நாம் இழந்திருக்கலாம்.

ஒரு வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயத்தின் எச்சமாக, என்றென்றும் இருக்கும் மச்சமாக, இல்லாதபோதும் இருக்கும் மிச்சமாக அடையாளமாவது அவர்களின் அறிவாற்றலைப் பதிந்து வைத்திருக்கும் தன்மையே. அதனால்தான், ஒரு சமுதாயத்தையே அழிக்க நினைக்கும் நச்சுமனம் கொண்டோர் முதலில் அச்சமுதாயத்தின் அறிவுசார் பதிவுகளை அழிக்க முனைகின்றனர். ‘யாழ்’ நூலகத்தின் அழிப்பு என்பதும் இத்தன்மைத்தான முன்னெடுப்புத்தான்.

எல்லோரும் அழியப்போகிறவர்கள்தான். ஆனால் இப்புவியை அழியாமல் நீண்டநாள் காக்கும் வழியில் வாழ்ந்த, இயற்கையை நேசித்த சமுதாயமும்.. இந்த இயற்கைக்கு எதிர்மறையான சமுகத்தால் அழிக்கப்படுவதும், மாறுபட்ட குணமுடையோரின் பழக்கவழக்கங்கள் சிறந்த நாகரீகமாகக் கருதப்படுவதும் தான் காலத்தின் கொடுமை.

அழிவைப்பற்றிய பயம் எங்கும் வியாபித்து இருக்கிறது. அழிவைப் பற்றிய பயமே, உலகில் கொஞ்சமேனும் இருக்கும் அறச்செயல்களுக்கு உள்ளார்ந்த காரணமாக இருக்கிறது. அழிவைப்பற்றிய பயமே நடக்கும் நன்மைகளுக்கும், நடந்துவிடாத தீமைகளுக்கும் ஆழமாக யோசித்தால் அடிப்படையான விடையாக இருக்கிறது. இந்த அழியும் பயத்தை போதிக்காத மதங்களே இல்லை எனலாம்.

ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் காலத்தில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் மரணத்திற்குப் பின்பு சென்றடைகிறார்கள் என்றும், மறபிறப்பு எய்துகிறார்கள் என்றும், இறுதிநாளின் தீர்ப்புப்படி இறைவன் தண்டிக்கிறார் என்றும் இயம்புகின்றன மதங்கள். கிருஸ்துவ மதமோ மரணமே பாவத்தின் சம்பளம்தான் என்கிறது. இவையெல்லாம் தனிமனிதனுக்கான இறுதித்தீர்ப்பு நாட்கள்.

இவைபோக, நாம் இருக்கும் இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்து போகும் நாள் வரும் எனவும் மதங்கள் பறைசாற்றுகின்றன. அந்த நாள் உண்டு என்பதிலும், அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதிலும் எல்லா மதங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக என்சிற்றறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை. அதுவும் மதம்சார் குழு நிறுவனங்கள் - இஸ்கான், பிரம்மகுமாரிகள் சபை, தேவ ஆராதனைக் கூடங்கள், இதர அனைத்து மதங்களின் சிறு வழிபாட்டுக்கூடங்கள் யாவிலும் உரக்க ஒலிப்பது.. உலகம் அழியும் நாள் சமீபித்து விட்டது என்ற கோஷமே! ( இது சரி-தவறு என்ற கணிக்கும் திறனெல்லாம் எனக்கு இல்லை -  இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்கிறேன். )

இந்து நம்பிக்கை, காலத்தை நான்கு யுகங்களாகப் பிரிக்கிறது. சத்திய, திரேத, துவாபர, கலி என நான்கு யுகங்கள். கலி என்பது இறுதியுகம். அதுவும் முடியும் தருவாயில் நாம் இருக்கிறோம். ‘காலம் கெட்டுப்போச்சு.. கலிமுத்திப் போச்சு’ன்னு எனக்கு விவரம் தெரியாத காலத்தில் இருந்து எங்கள் பாட்டி சொல்லிக்கொண்டுதான் வருகிறார்கள். ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறீர்கள் என அழுத்திக் கேட்டதில் கிடைத்தது ‘அவர்கள் பாட்டிகாலத்திலும் அவர்களை அப்படித்தான் சொன்னார்களாம்’.

கிருஸ்துவ நண்பர்களும் உலகின் அழிவும் இறைவனின் வருகையும் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டு விட்டதென்று நெடுநாளாகச் சொல்கிறார்கள். காலண்டர் கட்டுரைக்காக அவற்றையும் அனுகியிருக்கிறேன். நாம் பெரும்பாலும் புலங்குவதெல்லாம் கிரிகோரிஸ் பாதிரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கிருஸ்துவக்காலண்டர் தானே! ‘அந்திக்கிருஸ்துவின்’ வருகை அறிவிக்கும் இறுதித் தீர்ப்புநாள் பற்றி நாம் பேசத்தானே போகிறோம்.



உயிரோடு இணைந்த அன்புறவான இஸ்லாத் சகோதரர்களும் உலகம் அழியும் என்பதை இயம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழியும் அந்த நாளை தீர்மானிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. இறைத்தூதர் நபிகளுக்கு கூட நம்மிடம் இறுதிநாள் நெருங்கும் என அறிவுறுத்தும் பொறுப்பை மட்டுமே இறைவன் அளித்துள்ளார்.

படைத்தவனாலேயே இந்த உலகம் அழிக்கப்படும். அது எந்த நாளில் என்பதை மனிதர்களான நாம் அறிய முடியாது. அதன் ஞானம் அல்லாஹ்-னிடத்திலேயே இருக்கிறது. அதை விட்டு விட்டு இந்த நாளில் உலகம் அழிந்து விடும் என்று கூறுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

'(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர்இ அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை.

மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஓதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். (அல் குர்ஆன் 78:17-18) ( Information courtesy to : yenadhumarkkam  Blogspot )

Saturday, October 3, 2015

ஹாப்கள்

மாயன்கள் என்ற பெயர் ஏன்? எப்படி வந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், அவர்களி பல்வேறு விசயங்கள் மாயமானவை என்பது மட்டும் உண்மை. 

அவர்களின் சமுதாயம் எப்படிப்பட்டது. மன்னர்கள் ஆட்சியா? அல்லது அதற்கு ஏதேனும் மாற்று வைத்திருந்தார்களா? அவர்களுக்கு தெய்வங்கள் உண்டு என்று தெரியும். ஆனால் அவற்றின் மதம் என்ன? வழிபாட்டு முறைகள் எப்படி? இத்தனை அரும் பெரும் அதிசய கட்டிடங்களை ‘மெசோ அமெரிக்கா’ என இன்றைக்குச் சொல்லப்படக்கூடிய பகுதிகளில் கட்டினார்களே.. அவையெல்லாம் கோவில்களா? அல்லது அரண்மனைகளா? அல்லது படைவீரர் தங்கும் கொட்டில்களா? அல்லது மக்களின் குடியிருப்புக்களா என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு, இதுதான் இப்படித்தான் எனும் திட்டவட்டத்திற்கு வரவில்லை.

அவர்களிடம் அதிசயத்தக்க கட்டடிங்கள் இருந்திருக்கிறது. அபூர்வமான சிற்பக்கலையில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள். எழுத்து வடிவம் கொண்ட மொழி யாவருக்கும் – அப்போதைய அமெரிக்க, அய்ரோப்பியர்களுக்கு – முன்பே இருந்தது. எழுதும் முறை நம்மைப்போல் இடமிருந்து வலமாக இருந்திருக்கிறது. ( சீனத்தில் சித்திர எழுத்துவகை என்பதால் மேலிருந்து கீழாகவும் கூட எழுதுவார்கள் ) முறையாக செய்திகளையும், சமிக்கைகளையும் பதிவுசெய்யும் முறை இருந்தது. கற்கட்டங்களில் இருக்கும் தகவல்களைப்போல, புத்தகங்கள் போன்ற ஆவணங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருந்திருக்கின்றனர். ( நாம் பயன்படுத்தும் பேப்பரால் ஆன புத்தகங்கள் அல்ல ) இலக்கியங்கள் கூட இருந்திருக்கின்றன. சட்டதிட்டங்களும், அவற்றினை பின்பற்றி நடக்கும் சமுதாயமும் இருந்தது. கணிதம் இருந்திருக்கிறது. காலக் கணிப்புகள் இருந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காலண்டர் இருந்திருக்கின்றது.



அவர்கள் கணிதம் இருபதின்கீழ்க் கணக்குவகையைச் சார்ந்தவை. அவர்கள் பூஜ்யத்தின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். ( இந்தியாவில் இருந்து போயிருக்குமோ என்ற பார்வையில்.. இது வரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை ) ஐரோப்பியாவில் பூஜ்யத்தின் பயன்பாடு அரேபியர்களிடம் இருந்துதான் பரவியது என்பதால்.. அதற்கும் முன்பாக.. மாயன்கள் பூஜ்யத்தை பயன்படுத்தியது என்பது ஆச்சரியம்தான்.
கிட்டத்தட்ட சீனர்கள்போல, இந்திய ஜாதகங்கள் போல, மாயன்களுக்கும் விலங்குகளின் பெயர்களைக் கொண்ட ராசி ஜோதிடமும் உண்டு. 


இதைப்பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டே போனால் சுவாரசியம் தான். ஆயினும் நாம் தேடத்துவங்கியது காலண்டரின் அடி, முடிதான் என்பதால் அதற்கே பாய்வோம். நாம் ஏற்கெனவே ;20 நாட்கள் கொண்ட ‘ஹாப்கள் இருந்தன என்று பார்த்தோம் அல்லவா? அந்த ஹாப்களுக்கு பெயர்களும் இருந்தன. அவை



என்பன தான். இந்த 20 நாட்களைக் கொண்ட வரிசைக்கிரமம் 52 முறை வந்தால் அது ஒரு சோல்கின் எனப்படும் வருடம். 



இம்மாதிரியான கணக்குகளை, குறிப்புக்களை சரியாக கிரிகோரியன் ஆண்டுகளுடன் ஒப்பு நோக்கினால் மாயன் காலண்டர்கள் கி.மு 3114ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 11 தேதி முதல் துவங்குகிறது. முடிவடைகிற நாளைப்பற்றித்தான் நாம் பலமுறை பேசி உள்ளோமே?

Saturday, September 26, 2015

நிபிரு Nibiru

கடவுள் வழிபாட்டினை தீர்க்கமாக நம்பி வழிபட்ட ஆதிக்குடிகளுள் மாயன்கள் முக்கியமானவர்கள். அவர்கள் தங்கள் கணிதத்தையும் காலண்டரையும் கூட ‘இட்சாம்னா’ எனப்படும் ‘காலத்தின் கடவுள்’ தங்கள் முன்னோர்களிடம் கொடுத்ததாகக் கருதினர்.  

இந்துக்களின் கருத்தாக்கத்தில் வரும் ‘நரகம்’ என்ற அமைப்பைப் போலவே, ‘மெட்னசு’ என்ற இருண்ட நகரம் ஒன்று இருப்பதாக, மாயன்கள் நம்பினர். மனித பாவங்களுக்கான தண்டனை அளிக்கும் அந்த நகரை ‘கூனிகா’ என்ற கொடும் தெய்வம் ஆட்சி செய்வதாகவும் கருதினர்.

அறிவியல் கூற்றின்படி, மாயன்கள் கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்காவில் வசித்துவந்த பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கு முன்பேயும் ‘சப்போட்டெக்’, ‘ஒல்மெக்’ போன்ற பழங்குடியினர் இங்கு வசித்துவந்தனர். இவர்களுக்கு சற்று அடுத்தும் மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற நாகரீகங்கள் இருந்து அழிந்திருக்கின்றன. எனினும், இந்த நாகரீகங்கள் மாயன்களின் நீட்சியைக் காட்டிலும் காலத்தால் குறைந்தவை.

மேற்கூறப்பட்ட எல்லா நாகரீகங்களிலும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கணக்குவழக்குகளை (கணக்குன்னா.. ஏன் உடனே வழக்கும் வருகிறது?) உடையவை. 

மாயன்களின் காலண்டர்கள் சூரியச்சுற்றினை ஒட்டியவை மட்டும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை எல்லாக் கோள்களையும் ஒருசேரச் சார்ந்தவை. முழுமையான விவசாயத்தை பின்பற்றிய நாகரீகங்கள் மட்டுமே உறுதியான சூரியச்சுற்று காலண்டர்களைப் பின்பற்றியவை. மாயன்கள் வேட்டையாடி வாழ்வை விட்டுவிடாதவர்கள். 

நிலவின் அடிப்படையிலான மாதங்கள் எனும் பகுப்பினை அவர்கள் கொண்டிருந்தார்களா? என்பது பற்றி சரிவரத் தெரியவில்லை. ஆனாலும், பல்வேறு கோள்களின் அடிப்படையிலான பல்வேறு சுற்றுக்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். வெள்ளி – சுக்கிரன் - கிரகத்தின் அடிப்படையிலான நாட்சுற்றுக்கள் கூட மாயன் காலண்டர்களின் உண்டு. 

மாயன்களின் ஆண்டு நீள் தன்மையைக் (Linear) கொண்டது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. (Infinite). அடுத்தடுத்து தொடரும் நாட்களைக் கொண்டது. அதாவது.. நம்மைப்போல, சென்ற ஆண்டு இந்தநேரம் என்று குறிப்பிட்டெல்லாம் அவர்கள் நாட்களை நினைவு கொள்வதில்லை. நாட்கள் முடிந்து விட்டால் முடிந்ததுதான். கதம் கதம். (பிறந்தநாட்கள் கூட கொண்டாட மாட்டார்கள் போலிருக்கிறது. டிரீட் மிச்சம்)

அடுத்தடுத்து தொடரும் நாட்களை பிரிவுகளாக பிரித்திருந்தனர். அந்தப்பிரிவுகளும் சுழற்சியில் இல்லை. தொடர்ச்சியில்தான். 260 நாட்களைக் கொண்ட சோல்க்கின் (Tzolk'in) எனும் ஆண்டுச்சுற்றும் உண்டு. ஆண்டென்பது 365 நாட்களை கொண்டதாகவும் சிற்சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. 584 நாட்கள் அடிப்படையிலும், 819 நாட்களின் அடிப்படையிலும் கூட ஆண்டுகள் வெவ்வேறு குறிப்புகளில் உள்ளன. ஆனாலும், இந்த முறைகளையேதான் அவர்கள் பின்பற்றினார்களா, விழா நாட்கள் எவை எவை என்பதெல்லாம் மாயமானவை. 

மாயன்கள் ‘ஹாப்’ Haab என்ற சிறு சுற்றுக்களைப் பயன்படுத்தினர். 52 ஹாப்கள் கொண்டது ஒரு ஆண்டு. 13 நாட்களைக் கொண்ட வரிசை (சுற்று அல்ல),  20 நாட்களைக் கொண்ட வரிசை என்பதும் கூட மாயன் காலண்டரில் உண்டு. மாயன்கள் பல்வேறு கிரகங்களையும் கணக்கிட்டு, காலண்டர்கள் அமைத்தனர் எனக் கண்டோம். இந்த கிரக சேர்க்கையன் அடிப்படையில்தான் நாட்களில் சிலவற்றை ‘இருண்ட நாட்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த இருண்ட நாட்கள் தான் தீமை செய்யும் என கருதினர். இந்த தீமை செய்யும் நாட்களில் தான் போர்கள் நடத்தினர். 

மாயன்களின் எண்கள் இருபதின் அடிப்படையில் ஆனவை. ( தசமத்தை பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ) இந்த இருபதின் அடிப்படையிலேயே அவர்கள் சகலத்தையும் அளந்தனர். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல, கோள்களின் இடைவெளியைக் கூட அவர்கள் துல்லியமாக அளவிட்டனர். மேலும் பூமியின் பகுதிகளையும் அவர்கள் இருந்த பிரதேசத்தில் இருந்து அளவிட்டிருந்தனர்.

அதன்படி மாயன்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இருந்து இவ்வளவு தூரத்தில் - அன்றைய நாளில் இருந்து இவ்வளவு நாட்களக்குப் பிறகு - இவ்வாறு நடக்கும் என இயற்கையின் சீற்றத்தால் அமையும் துர்ச்சம்பவங்களைக் குறிப்பிட்டு இருந்தனர். இவற்றைத்தான் ‘மாயன்களின் பேரழிவுக்கான கணிப்புகள்’ என்று நாம் எடுத்துக்கொண்டு, அனுபவித்து வருகிறோம்.

மாயன்களின் கோள்களைப் பற்றிய கணிப்புகளின் ஒன்றுதான் பத்தாவது கிரகம் (10th Planet.) எனக் கருதப்படும் “நீபுரு“ ஆகும். கிறது. இந்தக் கோள் சூரியனில் இருந்து 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் மாயன்கள்.  “நீபுரு“ எனப் பத்தாவது கிரகத்திற்கு பெயரிப்பட்டது என்னவோ தற்காலத்தில் தான், ஆனாலும் பத்தாவதாக கிரகம் ஒன்று இருப்பதைச் சொன்னவர்கள் மாயன்கள்.  



இந்த 'நிபிரு' கோளம் நெருங்கிவந்து பூமியில் மோதும் என்றும், அதுதான் பூமியின் அழிவிற்கு காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள் மாயன்கள். ஆனால், அது எந்த நாள் என்பதுதான் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவேதான்.. மாயன் காலண்டரின் தொடர் கணிப்புக்கள் முடிவுற்ற நாளான ‘21 டிசம்பர் 2012’ தான் அந்த இறுதித்தீர்ப்பு நாள் என உலகம் கருதியது.