Friday, October 23, 2015

அமாவாசையும் அப்துல்காதரும்

“இறக்கும் நாள் தெரிந்து விட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும்“ என்று சொல்வார்கள். அதனால்தானோ? என்னவோ? ஆண்டவன் நாம் இறக்கும்நாள் எது என்பதை நாம் இருக்கும்நாள் வரை தெரியவிடாமலே வைத்திருக்கிறான்.

ஆனாலும், இறக்கும் நாள் பற்றியும்.. இந்த உலகின் இறுதிபற்றியும் நாம் கேள்விப்படும் விஷயங்களில் மனம் லயிக்கத்தான் செய்கிறது. நமது காலண்டர்கதைகளும் மாயன்காலண்டரைத் தொடர்ந்து இப்போது இஸ்லாமியக் காலண்டரைப் பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்து விட்ட போதிலும்.. “இறுதித்தீர்ப்பினைப் பற்றிய விஷயங்களையே கடந்த ஓரிரு வாரங்களாகவே பேசிக்கொண்டேயிருக்கிறோம். ஆன போதிலும் இறுதித்தீர்ப்பின் விஷயங்கள் இறுதியாகி விடுவதில்லை. இன்னும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

இஸ்லாமிய காலண்டருக்கு வருவோம்.

உலக வரைபடத்தின் மிகச்சரியான மையப் புள்ளியில் அமைந்துள்ளது மெக்கா நகரம். உலகெங்கும் இருக்கும் இஸ்லாத்தை தழுவியவர்களின் புன்னியஸ்தலம். இஸ்லாமிய கோட்பாடுகளின் மையம். இந்த புன்னிய தேசத்தை சுற்றிலும் அமைந்திருக்கும் அரபு நாடுகள் தான் இன்றைய இஸ்லாமிய மார்க்கத்தின் தொட்டில். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து மக்களை நல்வழிப்படுத்தி – காஃபீர்களின் (இஸ்லாத்திற்கும் அல்லாஹ்விற்கும் எதிரானவர்கள்) வசமிருந்து மக்களைக் காப்பாற்றி – இறைவனை அடையும் நல்மார்க்கத்தை உருவாக்கிய திவ்ய பிரதேசம்.

இன்றைக்கு இந்த அரபு நாடுகளிடமிருந்து உலகின் பிற நாடுகள் எல்லாம் பெட்ரோல் வாங்கி கடன் கணக்கு வைத்திருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் கைமாறு செய்ய இயலாத கணக்குக்கடனும் வைத்திருக்கின்றன. ஆம், இன்றைக்கு நாம் உட்பட உலகமெங்கும் மக்கள் செய்யும் எந்தக்கணக்கிலும் பயன்படும் எண்களின் வடிவத்தை அளித்தது அரபு நாடுகளாகும்.

தமிழ் மட்டுமல்லாது நமது இந்தியாவில் இருக்கும் மொழிகளின் பயன்பாட்டு எண் வடிவங்களும் – உலகின் நாடுகளில் இருக்கும் எண் வடிவங்களும் எளிதில் தத்தம் மொழிக்காரர்களாலேயே புழங்க முடியாத கடின வடிவம் கொண்டவை. 

தமிழ் முறைப்படி எண்களை நாம் “க-ச-ஞ“ என்றுதான் துவங்கி எழுதவேண்டும். அப்படி எழுத நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும். எழுத்தத்தெரியும், தெரியாதது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழின் எண் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்றுகூட பலருக்குத் தெரியாத சூழ்நிலைதான் நிலவுகிறது. 


ஆங்கில முறையோ ஆரம்பகாலத்தில் நாம் இப்போது ரோமன் லெட்டர் என்று சொல்லப்படும் I, II, III, IV, V.. எனத்தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஐரோப்பிய முழுமைக்கும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். 


அமெரிக்க ஆதிகுடிகளின் எண்களையும்தான் பார்த்தோமே.. இருபதின் அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்துக்களாக! 


சீனம் உட்பட்ட மேற்காசிய நாடுகளும் போன்று விசித்திர சித்திர எழுத்துக்களே இருக்கின்றன.


அரபு எண்கள்தான் 1,2,3.. என்ற வடிவம் கொண்டது. இந்த அரபு எண்கள்தான் இன்று உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறோம். 1, 2, 3 என்கின்ற இந்த வடிவத்தில்தான் நமக்கு எண்கள் அறிமுகமாகி – அன்யோன்யமாக உள்ளது. இந்த வடிவத்தைத் தவிர்த்த வேறு உருவத்தில் நமக்கு எண்கள் என்பது அன்னியம் தானே? 

எண்களின் ஆரம்ப காலம் தொட்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே காலம் வரை அரபுஎண்களே எல்லாவகையிலும் எளிமையானதாகவும் இயல்பானதாகவும் உலகம் முழுவதும் பயன்படுகிறது. இப்போது மனதினுள் எண்ணிப்பாருங்கள், விரல்விட்டு எண்ணியும் பாருங்கள்.. அரபு நாடுகள் – கணக்கு உலகிற்கு அளித்த பங்களிப்பு எத்துனை அளப்பரியது என்று. 

அப்படியெல்லாம் கணக்குலகிற்கு பங்களித்த அரபு நாடுகள் காலண்டர் விசயத்திலும் கைவிட்டுவிடுமா என்ன? கிரிகோரிஸ் காலண்டருக்கு அடுத்த படியாக உலகெங்கும்.. எல்லாத்தரப்பு மக்களாலும்.. எல்லா மொழி பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு காலண்டர் உண்டென்றால் அது அரபுகளின் உலகக்கொடையான இஸ்லாமியக் காலண்டரே!




இஸ்லாம் மதத்தில் பின்பற்றப்படும் காலண்டர் இறைவன் அல்லாஹ் - இறைத்தூதர் நபிகள் (ஸல்) அவர்களின் மூலமாக “உம்மத்“ (உம்மத் - உலகமக்கள்) உயர்வுற வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகத்தின் காலத்திற்கு அப்பால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 639ல் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இஸ்லாத்தின் காலண்டர். இதன்படி நபிகள் நாயகத்தின் வாழ்கைக்காலத்தின் பின் அக்காலத்தை மையமாகக் கொண்டு அதிலும் குறிப்பாக.. நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த காலம் தொட்டு ( கிரிகோரிஸ் காலண்டரில் கிருஸ்துவின் பிறப்பை கணக்கில் எடுத்துக் கொள்வது போல) துவங்குகிறது இக்காலண்டர். இஸ்லாமிய காலண்டருக்கு ஹிஜ்ரத் காலண்டர் எனவும் பெயர் உண்டு. ஹிஜ்ரத் என்றாலே புலம்பெயர்வு என்றுதான் அர்த்தம். 


இஸ்லாமியக் காலண்டர் நிலவினை அடிப்படையாகக் கொண்டது. உலககெங்கும் சூரிய அடிப்படையானதும், சூரியன் மற்றும் சந்திரன் இரண்டு ஒளிரும் கிரகங்களையும் அனுசரித்து வருவதுமான பல்வேறு காலண்டர்கள் இயக்கத்தில் உள்ளன. முழுக்க முழுக்க சந்திரனின் அடிப்படையில் ஆன நிலவு காலண்டர் என்பது இஸ்லாத் காலண்டர் மட்டும் தான்.


அல்லாஹ் ஆணைப்படி இஸ்லாத் காலண்டர்கள் 12 மாதங்களையும், 7 நாட்களைக் கொண்ட வாரங்களையும்.. இரவில் ஆரம்பிக்கும் நாளையும் கொண்டது.


நமது தமிழ் நாட்காட்டியின் படி நாள் என்பது காலையில் சூரிய உதயத்துடன் ஆரம்பிக்கிறது. முதலில் பகலும் தொடரும் இரவும் சேர்ந்த ஒரு நாள். கிரிகோரிஸ் காலண்டரின் நாள்.. நள்ளிரவில் ஆரம்பிக்கிறது. இரவு பன்னிரண்டு மணியில் இருந்து மருநாள் இரவு பன்னிரண்டு மணிவரையிருக்கும் இருபத்துநான்கு மணிநேரம் ஒரு நாள். இஸ்லாத்தின் நாளோ.. இரவு நிலவு உதித்தவுடன் மாலை நேரத்தில் ஆரம்பிக்கிறது. முதலில் வரும் முழுமையான இரவும் தொடரும் பகலும் சேர்ந்து ஒரு நாள் என்ற கணக்கில் வருகிறது. 


அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.. நாளின் தொடக்கத்தில் தூய இஸ்லாமியர்கள் “தக்பீர்“ சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். “தக்பீர்“ என்னும் துவக்க இறைவணக்கமானது சூரிய அஸ்தமனித்தின் போது சந்திர உதயகாலத்தில்.. அதாவது அரபு நாளின் துவக்கத்தில்.. சொல்லப்பட வேண்டும்.


அரபு மாதங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. நிலவின் தேய்தல் வளர்தனில் அடிப்படையில்தால் மாதங்கள் அமைந்திருக்கின்றன. நிலவின் அடிப்படையில் வரும் மாறுதல்களைப் பொறுத்தே நிகழ்மாற்று தகவமைப்புடன் ( Changeable according to current events) இஸ்லாமிய மாதங்கள் பிறக்கின்றன. நிலவின் வளர்ச்சியும் தேய்தலும் நேரடியாக இஸ்லாத்தின் மாதங்களை பாதிக்கின்றன. அமாவாசையும் பௌர்ணமியும்தான் அவர்தம் அன்றாட வாழ்வியலையும், வாழ்வின் கொண்டாட்டங்களையும், விழா நாட்களையும் தீர்மானிகின்றன. நிலவுக்கும் முசல்மான்களுக்குமான பிரிக்கமுடியாத பிணைப்பை உணர்ந்த நம்மவர்கள்தான் “அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் பார்த்தாயா?“ எனச்சொல்லி சொல்லி வியந்தார்கள்.

Tuesday, October 20, 2015

தஜ்ஜால்

உலகின் இறுதியென்பது உறுதியானது. அது எப்பொழுது வரும் என்பதுதான் அல்லாஹ்வின் கையிலிருக்கிறது.

மனிதநேயர் முகம்மது நபிகள் ஸல் அவர்கள் வாயிலாக இம்மை முடிந்து மறுமை மலரும் அந்த நாட்களை உலகத்தோராகிய நாம் சிற்சில குறிப்புக்கள் மூலம் அறியத்தந்துள்ளார் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்.

1.   பெரும்புகை மூட்டம் தோன்றும்
2.   அதிசய பிராணி ஒன்று உலகை மிரட்டும்
3.   மேற்கில் சூரியன் உதிக்கும்
4.   ஈஸா நபி வருகைபுரிவார்
5.   யஹ்ஜுஜ்,  மஹ்ஜுஜ் வருகை நிகழும்
6.   கிழக்கு திசையில் மாபெரும் இயற்கைச்சீற்றம்
7.   மேற்கு திசையிலும் ஒரு புகம்பம்
8.   அரபுதீபகற்பத்திலும் ஒரு புகம்பம்
9.   பெரும் நெருப்பு தோன்றும்
10. இறுதியானதாகவும் மிக முக்கியமானதுமான உலக அழிவின் அடையாளமானது.. தஜ்ஜாலின் வருகை.

தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த தஜ்ஜால் என்பவன் – கிருஸ்துவ நம்பிக்கையில் செல்லப்படும் “அந்திக்கிருஸ்து“ போன்றவன் ஆவான்.


''ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை) நாள் வரும்

வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

குட்டையான குண்டான அவன் குறுமலையைப் போன்று தோற்றமளிப்பான். மகா பொய்களைக்கூட உண்மை போன்று கூறும் ஆற்றல் மிக்கவன். அவனது கால்கள் பருத்தும் அகண்டும் காணப்படும். நினைத்த மாத்திரத்தில் மழையைப் பொழியவைக்கும் ஆற்றலும் அவனிடத்தில் உண்டு. கால்நடைகளை ஒரே நாளில் பன்மடங்கு கொழுக்கச் செய்வான். மலையளவு உணவுப்பொருட்களை உடைய கிடங்கும் அவன் கையகப்படுத்தியிருப்பான்.


தஜ்ஜால் வலது கண்ணில் ஊணம் உடையவன். கிழக்கு நாடுகளில் இருந்து வெளிவரும் அவனது ஊணமுற்ற வலதுகண் பெரிய கருத்த திராட்சைப்பழத்தைப் போன்று காட்சியளிக்கும். மந்திர தந்திரங்களில் தேர்ந்தவனான அவன் இறந்தவர்களை பிழைக்கவைக்கும் ஆற்றல் உடையவன். உயிரோடிப்பவர்களையும் கொல்லக்கூடியவன் எனச்சொல்லத் தேவையில்லை. பிறவிக்குருடு, கொடும் குஷ்டம் போன்ற நோய்களைக்கூட குணப்படுத்திக் காப்பாற்ற வல்லவனாக இருப்பான்.

இந்த தஜ்ஜால் முதலில் நல்லவன் போல உலக மக்களிடையே அறிமுகமாகி மெல்ல மெல்ல அனைவரின் அபிப்பிராயத்தையும் பெற்று பின்.. துரோகம் செய்ய ஆரம்பிப்ப்பான். தானே இறைவன் எனக்கூறி ஈமான்களை நம்பிக்கையுறச்செய்வான்.  அவனிடத்தில் சொர்க்கமும் நரகமும் உண்டு. அவன் சொர்க்த்தை நரகம் எனவும் நரகத்தை சொர்க்கம் எனவும் கூறி ஏமாற்றுவான். ஏமாந்தவர்கள் அவன்காட்டிய சொர்கத்தில் சென்று நரகவேதனையை அடைவார்கள்.

அவனிடத்திலே தண்மை பொருந்திய நீரும், சுடும் நெருப்பும் உண்டு. சுடும் நெருப்பை நீரென்று சொல்லி உண்ணத்தருவான். இறைவனிடத்திலே கட்டுப்பட்டோர் தவிர ஏனையோர் அவற்றை வாங்கி உண்டு தாங்கொணா நெருப்பின் தழலில் மடிவார்கள்.

அவனால் ஒரு இறைத்தூதர் கொல்லப்படுவார். அவன் அவரை மீண்டும் பிழைக்க வைப்பான். ஆனால் மறுபடி அவரைக் தஜ்ஜால் கொல்ல முற்படும் போது.. அவனால் இறைத்தூதரைக் கொல்ல முடியாது. அதுதான் அவனது அழிவிற்கு ஆரம்பம். உலகின் இறுதி.

அவன் மெக்கா, மெதினா தவிர உலகின் எல்லாப்பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்வான்.  அவ்வாறு அவன் பிரயாணம் செய்து மக்களுக்கு துன்பம் அளித்து வரும் வேளையில் பாலஸ்தீனத்திலுள்ள “லுத்து“ என்னு பெருநகரின் நுழைவாயில் அருகே அவனுக்கு ஈஸா நபி (அலை) அவர்களுக்கும் பெரும் யுத்தம் மூளும். அந்த யுத்தத்தின் இறுதியில் அவன் – தஜ்ஜால் கொல்லப்படுவான்.  

அவனால் விளைவிக்கப்பட்ட தீமைகள் அவனுக்குப்பின்னும் தொடர்ந்து உலகை அழிவுறச்செய்யும். ஆனால், இறைநம்பிக்கையில் இஸ்லாத்தைச் சார்ந்தோர்கள் இந்த இறுதித்தீர்ப்பின் நெருக்கத்திலும் தஜ்ஜாலின் தீமைகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் மார்க்கம் உள்ளது.

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள்...

''உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக அல்கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்வாறு பிரார்த்திக்குங்கால், இறைத்தூதரின் மொழிப்படி நம்மை இரட்சிக்கவும் இறைவன் அருளுள்ளம் கொண்டுள்ளார். 

Wednesday, October 7, 2015

இறுதித் தீர்ப்பு நாள்

உண்மையில் மாயன்கள் என்றொரு பெரும் கலாச்சாரம் கொண்ட ஆதிஇனம் இருந்தது என்பதைப்பற்றிய உலகின் கவனம் குவிந்தது, நாமும் இதுவரை அவர்களைப்பற்றிப் பார்த்து வந்தது எல்லாம், அவர்களின் ஆச்சரியம் மிக்க கணிப்புகளால்தான். அதையும் அவர்கள் கல்வெட்டுக்களாக, தங்களின் பிரம்மாண்டக் கட்டிடங்களில் குறித்து வைத்திருந்ததனால்தான்.

இம்மாதிரிக் குறிப்பெடுத்தல் என்பதைச் செய்யாமல் விட்டுவிட்ட எத்தனையோ அமைதியான, அழகான, அறிவார்ந்த, இன்றைய நமது பலகேள்விகளுக்கு விடைசொல்லக்கூடிய இனக்குழுக்கள் அன்றைக்கே உலகில் பலபகுதிகளில் பரந்து விரிந்து இருந்து இருக்கலாம். அவர்களை நாம் இழந்திருக்கலாம்.

ஒரு வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயத்தின் எச்சமாக, என்றென்றும் இருக்கும் மச்சமாக, இல்லாதபோதும் இருக்கும் மிச்சமாக அடையாளமாவது அவர்களின் அறிவாற்றலைப் பதிந்து வைத்திருக்கும் தன்மையே. அதனால்தான், ஒரு சமுதாயத்தையே அழிக்க நினைக்கும் நச்சுமனம் கொண்டோர் முதலில் அச்சமுதாயத்தின் அறிவுசார் பதிவுகளை அழிக்க முனைகின்றனர். ‘யாழ்’ நூலகத்தின் அழிப்பு என்பதும் இத்தன்மைத்தான முன்னெடுப்புத்தான்.

எல்லோரும் அழியப்போகிறவர்கள்தான். ஆனால் இப்புவியை அழியாமல் நீண்டநாள் காக்கும் வழியில் வாழ்ந்த, இயற்கையை நேசித்த சமுதாயமும்.. இந்த இயற்கைக்கு எதிர்மறையான சமுகத்தால் அழிக்கப்படுவதும், மாறுபட்ட குணமுடையோரின் பழக்கவழக்கங்கள் சிறந்த நாகரீகமாகக் கருதப்படுவதும் தான் காலத்தின் கொடுமை.

அழிவைப்பற்றிய பயம் எங்கும் வியாபித்து இருக்கிறது. அழிவைப் பற்றிய பயமே, உலகில் கொஞ்சமேனும் இருக்கும் அறச்செயல்களுக்கு உள்ளார்ந்த காரணமாக இருக்கிறது. அழிவைப்பற்றிய பயமே நடக்கும் நன்மைகளுக்கும், நடந்துவிடாத தீமைகளுக்கும் ஆழமாக யோசித்தால் அடிப்படையான விடையாக இருக்கிறது. இந்த அழியும் பயத்தை போதிக்காத மதங்களே இல்லை எனலாம்.

ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் காலத்தில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் மரணத்திற்குப் பின்பு சென்றடைகிறார்கள் என்றும், மறபிறப்பு எய்துகிறார்கள் என்றும், இறுதிநாளின் தீர்ப்புப்படி இறைவன் தண்டிக்கிறார் என்றும் இயம்புகின்றன மதங்கள். கிருஸ்துவ மதமோ மரணமே பாவத்தின் சம்பளம்தான் என்கிறது. இவையெல்லாம் தனிமனிதனுக்கான இறுதித்தீர்ப்பு நாட்கள்.

இவைபோக, நாம் இருக்கும் இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்து போகும் நாள் வரும் எனவும் மதங்கள் பறைசாற்றுகின்றன. அந்த நாள் உண்டு என்பதிலும், அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதிலும் எல்லா மதங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக என்சிற்றறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை. அதுவும் மதம்சார் குழு நிறுவனங்கள் - இஸ்கான், பிரம்மகுமாரிகள் சபை, தேவ ஆராதனைக் கூடங்கள், இதர அனைத்து மதங்களின் சிறு வழிபாட்டுக்கூடங்கள் யாவிலும் உரக்க ஒலிப்பது.. உலகம் அழியும் நாள் சமீபித்து விட்டது என்ற கோஷமே! ( இது சரி-தவறு என்ற கணிக்கும் திறனெல்லாம் எனக்கு இல்லை -  இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்கிறேன். )

இந்து நம்பிக்கை, காலத்தை நான்கு யுகங்களாகப் பிரிக்கிறது. சத்திய, திரேத, துவாபர, கலி என நான்கு யுகங்கள். கலி என்பது இறுதியுகம். அதுவும் முடியும் தருவாயில் நாம் இருக்கிறோம். ‘காலம் கெட்டுப்போச்சு.. கலிமுத்திப் போச்சு’ன்னு எனக்கு விவரம் தெரியாத காலத்தில் இருந்து எங்கள் பாட்டி சொல்லிக்கொண்டுதான் வருகிறார்கள். ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறீர்கள் என அழுத்திக் கேட்டதில் கிடைத்தது ‘அவர்கள் பாட்டிகாலத்திலும் அவர்களை அப்படித்தான் சொன்னார்களாம்’.

கிருஸ்துவ நண்பர்களும் உலகின் அழிவும் இறைவனின் வருகையும் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டு விட்டதென்று நெடுநாளாகச் சொல்கிறார்கள். காலண்டர் கட்டுரைக்காக அவற்றையும் அனுகியிருக்கிறேன். நாம் பெரும்பாலும் புலங்குவதெல்லாம் கிரிகோரிஸ் பாதிரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கிருஸ்துவக்காலண்டர் தானே! ‘அந்திக்கிருஸ்துவின்’ வருகை அறிவிக்கும் இறுதித் தீர்ப்புநாள் பற்றி நாம் பேசத்தானே போகிறோம்.



உயிரோடு இணைந்த அன்புறவான இஸ்லாத் சகோதரர்களும் உலகம் அழியும் என்பதை இயம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழியும் அந்த நாளை தீர்மானிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. இறைத்தூதர் நபிகளுக்கு கூட நம்மிடம் இறுதிநாள் நெருங்கும் என அறிவுறுத்தும் பொறுப்பை மட்டுமே இறைவன் அளித்துள்ளார்.

படைத்தவனாலேயே இந்த உலகம் அழிக்கப்படும். அது எந்த நாளில் என்பதை மனிதர்களான நாம் அறிய முடியாது. அதன் ஞானம் அல்லாஹ்-னிடத்திலேயே இருக்கிறது. அதை விட்டு விட்டு இந்த நாளில் உலகம் அழிந்து விடும் என்று கூறுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

'(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர்இ அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை.

மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஓதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். (அல் குர்ஆன் 78:17-18) ( Information courtesy to : yenadhumarkkam  Blogspot )

Saturday, October 3, 2015

ஹாப்கள்

மாயன்கள் என்ற பெயர் ஏன்? எப்படி வந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், அவர்களி பல்வேறு விசயங்கள் மாயமானவை என்பது மட்டும் உண்மை. 

அவர்களின் சமுதாயம் எப்படிப்பட்டது. மன்னர்கள் ஆட்சியா? அல்லது அதற்கு ஏதேனும் மாற்று வைத்திருந்தார்களா? அவர்களுக்கு தெய்வங்கள் உண்டு என்று தெரியும். ஆனால் அவற்றின் மதம் என்ன? வழிபாட்டு முறைகள் எப்படி? இத்தனை அரும் பெரும் அதிசய கட்டிடங்களை ‘மெசோ அமெரிக்கா’ என இன்றைக்குச் சொல்லப்படக்கூடிய பகுதிகளில் கட்டினார்களே.. அவையெல்லாம் கோவில்களா? அல்லது அரண்மனைகளா? அல்லது படைவீரர் தங்கும் கொட்டில்களா? அல்லது மக்களின் குடியிருப்புக்களா என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு, இதுதான் இப்படித்தான் எனும் திட்டவட்டத்திற்கு வரவில்லை.

அவர்களிடம் அதிசயத்தக்க கட்டடிங்கள் இருந்திருக்கிறது. அபூர்வமான சிற்பக்கலையில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள். எழுத்து வடிவம் கொண்ட மொழி யாவருக்கும் – அப்போதைய அமெரிக்க, அய்ரோப்பியர்களுக்கு – முன்பே இருந்தது. எழுதும் முறை நம்மைப்போல் இடமிருந்து வலமாக இருந்திருக்கிறது. ( சீனத்தில் சித்திர எழுத்துவகை என்பதால் மேலிருந்து கீழாகவும் கூட எழுதுவார்கள் ) முறையாக செய்திகளையும், சமிக்கைகளையும் பதிவுசெய்யும் முறை இருந்தது. கற்கட்டங்களில் இருக்கும் தகவல்களைப்போல, புத்தகங்கள் போன்ற ஆவணங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருந்திருக்கின்றனர். ( நாம் பயன்படுத்தும் பேப்பரால் ஆன புத்தகங்கள் அல்ல ) இலக்கியங்கள் கூட இருந்திருக்கின்றன. சட்டதிட்டங்களும், அவற்றினை பின்பற்றி நடக்கும் சமுதாயமும் இருந்தது. கணிதம் இருந்திருக்கிறது. காலக் கணிப்புகள் இருந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காலண்டர் இருந்திருக்கின்றது.



அவர்கள் கணிதம் இருபதின்கீழ்க் கணக்குவகையைச் சார்ந்தவை. அவர்கள் பூஜ்யத்தின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். ( இந்தியாவில் இருந்து போயிருக்குமோ என்ற பார்வையில்.. இது வரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை ) ஐரோப்பியாவில் பூஜ்யத்தின் பயன்பாடு அரேபியர்களிடம் இருந்துதான் பரவியது என்பதால்.. அதற்கும் முன்பாக.. மாயன்கள் பூஜ்யத்தை பயன்படுத்தியது என்பது ஆச்சரியம்தான்.
கிட்டத்தட்ட சீனர்கள்போல, இந்திய ஜாதகங்கள் போல, மாயன்களுக்கும் விலங்குகளின் பெயர்களைக் கொண்ட ராசி ஜோதிடமும் உண்டு. 


இதைப்பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டே போனால் சுவாரசியம் தான். ஆயினும் நாம் தேடத்துவங்கியது காலண்டரின் அடி, முடிதான் என்பதால் அதற்கே பாய்வோம். நாம் ஏற்கெனவே ;20 நாட்கள் கொண்ட ‘ஹாப்கள் இருந்தன என்று பார்த்தோம் அல்லவா? அந்த ஹாப்களுக்கு பெயர்களும் இருந்தன. அவை



என்பன தான். இந்த 20 நாட்களைக் கொண்ட வரிசைக்கிரமம் 52 முறை வந்தால் அது ஒரு சோல்கின் எனப்படும் வருடம். 



இம்மாதிரியான கணக்குகளை, குறிப்புக்களை சரியாக கிரிகோரியன் ஆண்டுகளுடன் ஒப்பு நோக்கினால் மாயன் காலண்டர்கள் கி.மு 3114ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 11 தேதி முதல் துவங்குகிறது. முடிவடைகிற நாளைப்பற்றித்தான் நாம் பலமுறை பேசி உள்ளோமே?

Saturday, September 26, 2015

நிபிரு Nibiru

கடவுள் வழிபாட்டினை தீர்க்கமாக நம்பி வழிபட்ட ஆதிக்குடிகளுள் மாயன்கள் முக்கியமானவர்கள். அவர்கள் தங்கள் கணிதத்தையும் காலண்டரையும் கூட ‘இட்சாம்னா’ எனப்படும் ‘காலத்தின் கடவுள்’ தங்கள் முன்னோர்களிடம் கொடுத்ததாகக் கருதினர்.  

இந்துக்களின் கருத்தாக்கத்தில் வரும் ‘நரகம்’ என்ற அமைப்பைப் போலவே, ‘மெட்னசு’ என்ற இருண்ட நகரம் ஒன்று இருப்பதாக, மாயன்கள் நம்பினர். மனித பாவங்களுக்கான தண்டனை அளிக்கும் அந்த நகரை ‘கூனிகா’ என்ற கொடும் தெய்வம் ஆட்சி செய்வதாகவும் கருதினர்.

அறிவியல் கூற்றின்படி, மாயன்கள் கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்காவில் வசித்துவந்த பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கு முன்பேயும் ‘சப்போட்டெக்’, ‘ஒல்மெக்’ போன்ற பழங்குடியினர் இங்கு வசித்துவந்தனர். இவர்களுக்கு சற்று அடுத்தும் மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற நாகரீகங்கள் இருந்து அழிந்திருக்கின்றன. எனினும், இந்த நாகரீகங்கள் மாயன்களின் நீட்சியைக் காட்டிலும் காலத்தால் குறைந்தவை.

மேற்கூறப்பட்ட எல்லா நாகரீகங்களிலும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கணக்குவழக்குகளை (கணக்குன்னா.. ஏன் உடனே வழக்கும் வருகிறது?) உடையவை. 

மாயன்களின் காலண்டர்கள் சூரியச்சுற்றினை ஒட்டியவை மட்டும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை எல்லாக் கோள்களையும் ஒருசேரச் சார்ந்தவை. முழுமையான விவசாயத்தை பின்பற்றிய நாகரீகங்கள் மட்டுமே உறுதியான சூரியச்சுற்று காலண்டர்களைப் பின்பற்றியவை. மாயன்கள் வேட்டையாடி வாழ்வை விட்டுவிடாதவர்கள். 

நிலவின் அடிப்படையிலான மாதங்கள் எனும் பகுப்பினை அவர்கள் கொண்டிருந்தார்களா? என்பது பற்றி சரிவரத் தெரியவில்லை. ஆனாலும், பல்வேறு கோள்களின் அடிப்படையிலான பல்வேறு சுற்றுக்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். வெள்ளி – சுக்கிரன் - கிரகத்தின் அடிப்படையிலான நாட்சுற்றுக்கள் கூட மாயன் காலண்டர்களின் உண்டு. 

மாயன்களின் ஆண்டு நீள் தன்மையைக் (Linear) கொண்டது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. (Infinite). அடுத்தடுத்து தொடரும் நாட்களைக் கொண்டது. அதாவது.. நம்மைப்போல, சென்ற ஆண்டு இந்தநேரம் என்று குறிப்பிட்டெல்லாம் அவர்கள் நாட்களை நினைவு கொள்வதில்லை. நாட்கள் முடிந்து விட்டால் முடிந்ததுதான். கதம் கதம். (பிறந்தநாட்கள் கூட கொண்டாட மாட்டார்கள் போலிருக்கிறது. டிரீட் மிச்சம்)

அடுத்தடுத்து தொடரும் நாட்களை பிரிவுகளாக பிரித்திருந்தனர். அந்தப்பிரிவுகளும் சுழற்சியில் இல்லை. தொடர்ச்சியில்தான். 260 நாட்களைக் கொண்ட சோல்க்கின் (Tzolk'in) எனும் ஆண்டுச்சுற்றும் உண்டு. ஆண்டென்பது 365 நாட்களை கொண்டதாகவும் சிற்சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. 584 நாட்கள் அடிப்படையிலும், 819 நாட்களின் அடிப்படையிலும் கூட ஆண்டுகள் வெவ்வேறு குறிப்புகளில் உள்ளன. ஆனாலும், இந்த முறைகளையேதான் அவர்கள் பின்பற்றினார்களா, விழா நாட்கள் எவை எவை என்பதெல்லாம் மாயமானவை. 

மாயன்கள் ‘ஹாப்’ Haab என்ற சிறு சுற்றுக்களைப் பயன்படுத்தினர். 52 ஹாப்கள் கொண்டது ஒரு ஆண்டு. 13 நாட்களைக் கொண்ட வரிசை (சுற்று அல்ல),  20 நாட்களைக் கொண்ட வரிசை என்பதும் கூட மாயன் காலண்டரில் உண்டு. மாயன்கள் பல்வேறு கிரகங்களையும் கணக்கிட்டு, காலண்டர்கள் அமைத்தனர் எனக் கண்டோம். இந்த கிரக சேர்க்கையன் அடிப்படையில்தான் நாட்களில் சிலவற்றை ‘இருண்ட நாட்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த இருண்ட நாட்கள் தான் தீமை செய்யும் என கருதினர். இந்த தீமை செய்யும் நாட்களில் தான் போர்கள் நடத்தினர். 

மாயன்களின் எண்கள் இருபதின் அடிப்படையில் ஆனவை. ( தசமத்தை பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ) இந்த இருபதின் அடிப்படையிலேயே அவர்கள் சகலத்தையும் அளந்தனர். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல, கோள்களின் இடைவெளியைக் கூட அவர்கள் துல்லியமாக அளவிட்டனர். மேலும் பூமியின் பகுதிகளையும் அவர்கள் இருந்த பிரதேசத்தில் இருந்து அளவிட்டிருந்தனர்.

அதன்படி மாயன்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இருந்து இவ்வளவு தூரத்தில் - அன்றைய நாளில் இருந்து இவ்வளவு நாட்களக்குப் பிறகு - இவ்வாறு நடக்கும் என இயற்கையின் சீற்றத்தால் அமையும் துர்ச்சம்பவங்களைக் குறிப்பிட்டு இருந்தனர். இவற்றைத்தான் ‘மாயன்களின் பேரழிவுக்கான கணிப்புகள்’ என்று நாம் எடுத்துக்கொண்டு, அனுபவித்து வருகிறோம்.

மாயன்களின் கோள்களைப் பற்றிய கணிப்புகளின் ஒன்றுதான் பத்தாவது கிரகம் (10th Planet.) எனக் கருதப்படும் “நீபுரு“ ஆகும். கிறது. இந்தக் கோள் சூரியனில் இருந்து 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் மாயன்கள்.  “நீபுரு“ எனப் பத்தாவது கிரகத்திற்கு பெயரிப்பட்டது என்னவோ தற்காலத்தில் தான், ஆனாலும் பத்தாவதாக கிரகம் ஒன்று இருப்பதைச் சொன்னவர்கள் மாயன்கள்.  



இந்த 'நிபிரு' கோளம் நெருங்கிவந்து பூமியில் மோதும் என்றும், அதுதான் பூமியின் அழிவிற்கு காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள் மாயன்கள். ஆனால், அது எந்த நாள் என்பதுதான் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவேதான்.. மாயன் காலண்டரின் தொடர் கணிப்புக்கள் முடிவுற்ற நாளான ‘21 டிசம்பர் 2012’ தான் அந்த இறுதித்தீர்ப்பு நாள் என உலகம் கருதியது. 

Sunday, September 20, 2015

டூம்ஸ் தினம்

சென்ற வாரம் கூட நாம்  மாயன்கள் குறிப்புகளில் சொல்லப்பட்டு, உண்மையில் பலித்தவற்றை கண்டோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் அவர்கள் குறித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொன்றையும் வெளியிடுதல் சாத்தியமல்ல. இருப்பினும் சென்ற வாரக்குறிப்புக்கள் மிகவும் குறைந்தவையே என்பதால் மேலும் சிலவற்றை காண்போம்.

கரகட்டோ எரிமலை வெடிப்பு 26 ஆகஸ்டு 1883 ( 36ஆயிரம் பேர் பலி)

போர்ச்சுக்கீசிய நிலநடுக்கம் 26 ஜனவரி 1951 ( 30 ஆயிரம் உயிரிழப்பு )

26 டிசம்பர் 1932 ல் சீன நிலநடுக்கம் ( 70,000 பலி )

மீண்டும், சீன நிலநடுக்கம் 26 ஜுலை 1976 (2 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலி  )

ஷிபாவின் ஆழிப்பேரலையினால் அழிவு 1996 

ஈரானில் நிலநடுக்கம் 26 டிசம்பர் 2003 என நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் நிகழ்விடம் மற்றும நிகழ்வுகள் தான் மாயன் இனத்தவரின் குறிப்புகள் ஆகும். அதன் இழப்பின் மக்கள் தொகை நிகழ்ச்சி நடந்தபின் கிடைத்த தகவல்களே!

மாயன்கள் கணிப்புக்கள் எல்லாம் இயற்கை சார்ந்தவை. அவர்கள் காலண்டர்களின் கணிப்புத்துவங்கி கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரையிலான இயற்கையின் பெருஞ்சீற்றங்களை அவர்கள் துல்லியமாக சொல்லிவைத்துச் சென்றிருக்கின்றனர். எட்டுக்கும் மாயன்களுக்குமான தொடர்பெல்லாம் மிகச் சொற்பமானவையே. உண்மையில் அவர்கள் அதற்கும் பலமடங்கு கணித உயரத்தை எட்டியவர்கள்.

அவர்களின் காலண்டர் சுற்றுத்தான் கணக்கிடல்களில் மிகச் சரியானது. சூரியச் சுற்றை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்கள். அவர்கள் காலண்டர்கள் திரும்பத்திரும்ப நிகழும் நாட்களின் வரிசைக்கிரமம் இல்லை. தொடர்ந்து நிகழும் வெவ்வேறு அமைப்புகளுன் கூடிய நாட்களைக் கொண்டவை. இத்தகைய காலண்டர் அமைப்பு உலகில் வேறு எங்கிலும் இல்லை. ஏன் நம்மிடத்தே கூட இல்லை.

அவர்கள் எகிப்திய, கிரேக்க காலண்டர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். மாயன் காலண்டர்களில் விவசாய அடிப்படையிலான குறிப்புக்கள் இல்லை. எனினும், கிரகங்களின் ஈர்ப்பு மற்றும் சூரிய சுற்றுக்களினால் ஏற்படும் புவியியல் மாற்றங்களைச் சரியாகக் குறித்துள்ளனர். வழிபடுதலும் மாயன்களின் வழக்கம்; என்பதால் அமானுஷ்ய வடிவமுள்ள தெய்வச்செயல்பாடுகளைக் கொண்ட குறிப்புக்களும் அவர்கள் காலண்டரில் காணப்படுகின்றன.

நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சி பற்றியும், கோள்களின் சஞ்சாரம் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர் அதைக்கொண்டே, பூமியில் நடைபெறும் இயற்கைச்சீற்றங்களைக் கணித்து வைத்திருந்தனர். 

நவீன கணிதங்களின் கண்டுபிடுப்புகளும், தொலைநோக்கிகளும் இல்லாத காலத்திலேயே.. ஒவ்வொரு கோள்களுக்குமான இடைவெளி தூரம், சூரியனுக்கும் கோள்களுக்குமான இடைவெளி தூரம் போன்றவற்றை அவர்கள் சரியாகக் கணக்கிட்டிருப்பது ஆச்சரியம்தான். இந்த தூர வெளிக்கணக்குகள் 99.45% துல்லியமானவை என ‘நாசா’ உட்பட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோள்கள் மட்டுமின்றி சூரிய அமைப்பையும், அந்தச் சூரியனில் மத்தியில் காணப்படும் கரும்புள்ளிகள் பற்றிய முதற்குறிப்பை மாயன்களே உலகிற்குத் தெரியப்படுத்தினர். 

மாயன்களின் கணிப்புகள் தற்போதைய காலம் வரை சொன்னது சொன்னபடி நிறைவேறித்தான் வந்தது. அந்த மாயனின் காலண்டர் கணிப்புக்களில் மிக முக்கியமானதாக கருதப்பட்ட ‘21 டிசம்பர் 2012’ல் உலகம் அழிந்து போகும் என்ற விசயம்தான் பொய்த்துப்போனது.

அந்த 21 டிசம்பர் 2012 நாளை ‘டூம்ஸ் டே’ என அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ‘டூம்ஸ் டே’ என்பது மாயன்காலண்டர்களின் கணிப்புக்களின் குறிப்புக்கள் இறுதி பெற்ற நாள். எனவே, இந்த நாள் வரை மட்டுமே குறிப்புக்கள் நீள்வதால்.. இந்தநாளில் உலகில் நீட்சியும் முடிந்து போகும் என்று சிலர் கதைகட்டினார்கள். பலர்; அதை நம்பவே செய்தார்கள். 

ஆனால், உண்மையில் மாயன்கள் இந்த நாளை இறுதிநாள் என உறுதியாகக் குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டுவந்த கணிப்புக்களும், நிகழ்செய்திகளும் இந்த நாளில் முடிவடைந்திருந்தது. ஒருவேளை அவர்கள் வேறொரு கணிப்பை இதைத்தொடர்ந்து வெளியிடலாம் என்றிருந்திருந்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து இயற்கைச்சீற்றங்களைக் கண்டுகுறித்தவர்கள், அடுத்த குறிப்பை வெளியிட சற்று இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கலாம். அந்த இடைவெளியில் அவர்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது, அவர்கள் வெளியிட்டிருந்த அடுத்த பட்டியல் நமது கையில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆக, நமக்கு கிடைத்த தகவல்படி சென்ற 2012 டிசம்பர் 21 அன்று.. ‘டூம்ஸ் டே’ என்று அழைக்கப்படுகிற நாள் அன்று.. உலகம் அழியவில்லை. எனவே, அன்று உலகம் அழியும் என்று மாயன்கள் குறிப்பிட்டு இருக்கவில்லை.

Wednesday, September 9, 2015

நடக்கும் என்பார்..நடக்கும்!

உலகம் ஒரு அதிசயக்கூடம். மனிதனே அதிசயங்களை அறியவும், அனுபவிக்கவும், ஆரம்பித்துவைக்கவும் தெரிந்தவன். மனிதன் கண்டுணர்ந்த அதிசயங்களில், மனிதனே புரிந்த, படைத்த அதிசயங்களைப் பார்த்துத்தான் அதிகம் அதிசயப்பட்டான்.

அரும்பெரும் கண்டுபிடிப்புகள் அவனை அதிசயப்படுத்தியது.

பெருமைக்குரிய கட்டிடங்கள் அவனை அதிசயப்படுத்தியது.

இவற்றில் அதிசயப்பட்டு அவன் புருவங்கள் உயர்ந்தது என்றால், 
நாளை நடக்கப்போவதை நேற்றே கணித்துச்சொல்லும் மனித திறமையைப் பார்த்து, அவனது புருவங்கள் பிடறிவரை செல்கின்றன. அதனால்தான், உலகமெங்கும் ஜோதிடத்திற்கு அவ்வளவு ஆதரவு. 

எனவே, இப்படி கணிப்புகளும் அதிகம். இவற்றில் நமது நாடி ஜோதிடம் முதல், நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் வரை பல்வேறு விசயங்கள் காலம் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும், தலையாயதும், பல்வேறு கணிப்புக்கள் மெய்யாலுமே நடந்தது அதிசயப்படுத்தியதும் மாயன் காலண்டர். இந்த அதிசயங்கள்தான் கடந்த 2012ஆம் ஆண்டு உலகையே உலுக்கிக்கொண்டிருந்தது.

விஷயம் என்னவென்றால், மாயன்காலண்டர் துவங்கியகாலத்திலிருந்து வரிசைக்கிரமமாக, நடக்கும் என அறிவுறுத்திய பல்வேறு சம்பவங்கள், உள்ளபடியே நடந்து ஆச்சரியப்படுத்திவந்திருந்தது. எனவே மாயன்காலண்டரின் கணிப்புகளை உலகம் உற்றுப்பார்த்து வந்தது. இப்படி கணிப்புக்களைச் சொல்லிவந்த மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் தன் கணிப்புக்களையும், கணக்குகளையும் முடித்துக்கொள்ளுவது போல வடிவமைக்பட்டிருந்தது. அல்லது, மாயன்காலண்டர், மேற்சொன்ன தேதிவரைதான் தன் கணிப்புக்களை வெளியிட்டிருந்தது. 

எனவே, மாயன்காலண்டர் தன் கணிப்புக்களை முடித்துக்கொள்ளும் தேதி.. உலகம் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தேதியென ஓரே பேச்சாயிருந்தது. 

பல்வேறு அறிஞர்களும்(!) பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். உலகம் அழியும் - அழியாது என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டியெங்கும் நடைபெற்றது. மதம் சார்ந்த இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு மக்களிடையே பீதியைப் பரப்பின. இதெற்கெல்லாம் உச்சக்கட்டமாக ‘2012’ என்ன பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகி உலகம் அழியும் காட்சிகளை, கடைவிரித்து பெருமளவில் கல்லாக்கட்டியது. 

இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் என்வென்றால், நாம் ஏற்கெனவெ கூறியது போல், பல்வேறு மாயன்காலண்டரின் கணிப்புக்கள் உண்மையாக நடந்தேறியதுதான். அவற்றின் பட்டியல் மிக நீளமானது. கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகக் கருதப்படும் மாயன் நாகரீக காலண்டரின் வரலாற்றில் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்ட கணிப்புகள் கிருஸ்துவின் காலத்திலிருந்தே துவங்குகிறது. 

இயற்கைச்சீற்றங்களை துல்லியமாக கணித்துச் சொல்லிய அவற்றையெல்லாம் பட்டியலிட்டு ஆராய்ந்தால், நம் காலம் முழுக்க ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். ஒரு காபி குடிக்கும் அவகாசம்தான் நம்மிடம் இருக்கிறது என்பதால் சில மட்டும் இங்கே..

1. கி.பி. 1700 ஜனவரி 26, வடஅமெரிக்க பூகம்பம். இந்த நிகழ்விற்குப்பிறகுதான் மாயன்காலண்டரின் கணிப்புகள் பக்கம் உலகம் கவனம் திருப்பியது.

2. 1926 ஜுன் 26, ரோடெஸ் பூகம்பம்.

3. 1963 ஜுலை 26, யுகோஸ்லோவாக்கியவின் பெரும்பாண்மையான மக்களைப் பலிகொண்ட நிலநடுக்கம்.

4. 2003 மே மாதமும், ஜுலை மாதமும், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், அதே 26ம் தேதியில் நடைபெற்று நாமே கண்டுணர்ந்து, கண்அயர்ந்த ஜப்பானிய நிலநடுக்கம்.

5. இவ்வளவு ஏன்? நமது குஜராத்தில் 2001 ஜனவரி 26ல் உலுக்கிய பூகம்பம் என எல்லாவற்றைப் பற்றிய குறிப்பினையும் குறிப்பிட்டிருந்தனர் மாயன்கள். 
இதையெல்லாம் கணித்தவர்கள் மாயன்கள் என்பதைத்தவிரவும், இதில் இன்னொரு ஒற்றுமையைக் கவனித்திருப்பீர்கள். ஆம். எல்லா சம்பவங்களின் தேதியும் 26. அவற்றின் கூட்டுத்தொகை 8. 

அதனால்தான், உலகமெங்கும் 13ம் நம்பரை ஆகாத எண்ணாக கொண்டாடிக் கொண்டிருக்க, நாம் மட்டும் எட்டை… நட்டக்கணக்கில் வைத்திருக்கிறோமோ என்னவோ? ( யப்பா.. நமக்கும் - மாயன்களுக்கும் லிங்க் கொண்டுவர எப்டியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! )