Sunday, September 20, 2015

டூம்ஸ் தினம்

சென்ற வாரம் கூட நாம்  மாயன்கள் குறிப்புகளில் சொல்லப்பட்டு, உண்மையில் பலித்தவற்றை கண்டோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் அவர்கள் குறித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொன்றையும் வெளியிடுதல் சாத்தியமல்ல. இருப்பினும் சென்ற வாரக்குறிப்புக்கள் மிகவும் குறைந்தவையே என்பதால் மேலும் சிலவற்றை காண்போம்.

கரகட்டோ எரிமலை வெடிப்பு 26 ஆகஸ்டு 1883 ( 36ஆயிரம் பேர் பலி)

போர்ச்சுக்கீசிய நிலநடுக்கம் 26 ஜனவரி 1951 ( 30 ஆயிரம் உயிரிழப்பு )

26 டிசம்பர் 1932 ல் சீன நிலநடுக்கம் ( 70,000 பலி )

மீண்டும், சீன நிலநடுக்கம் 26 ஜுலை 1976 (2 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலி  )

ஷிபாவின் ஆழிப்பேரலையினால் அழிவு 1996 

ஈரானில் நிலநடுக்கம் 26 டிசம்பர் 2003 என நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் நிகழ்விடம் மற்றும நிகழ்வுகள் தான் மாயன் இனத்தவரின் குறிப்புகள் ஆகும். அதன் இழப்பின் மக்கள் தொகை நிகழ்ச்சி நடந்தபின் கிடைத்த தகவல்களே!

மாயன்கள் கணிப்புக்கள் எல்லாம் இயற்கை சார்ந்தவை. அவர்கள் காலண்டர்களின் கணிப்புத்துவங்கி கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரையிலான இயற்கையின் பெருஞ்சீற்றங்களை அவர்கள் துல்லியமாக சொல்லிவைத்துச் சென்றிருக்கின்றனர். எட்டுக்கும் மாயன்களுக்குமான தொடர்பெல்லாம் மிகச் சொற்பமானவையே. உண்மையில் அவர்கள் அதற்கும் பலமடங்கு கணித உயரத்தை எட்டியவர்கள்.

அவர்களின் காலண்டர் சுற்றுத்தான் கணக்கிடல்களில் மிகச் சரியானது. சூரியச் சுற்றை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்கள். அவர்கள் காலண்டர்கள் திரும்பத்திரும்ப நிகழும் நாட்களின் வரிசைக்கிரமம் இல்லை. தொடர்ந்து நிகழும் வெவ்வேறு அமைப்புகளுன் கூடிய நாட்களைக் கொண்டவை. இத்தகைய காலண்டர் அமைப்பு உலகில் வேறு எங்கிலும் இல்லை. ஏன் நம்மிடத்தே கூட இல்லை.

அவர்கள் எகிப்திய, கிரேக்க காலண்டர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். மாயன் காலண்டர்களில் விவசாய அடிப்படையிலான குறிப்புக்கள் இல்லை. எனினும், கிரகங்களின் ஈர்ப்பு மற்றும் சூரிய சுற்றுக்களினால் ஏற்படும் புவியியல் மாற்றங்களைச் சரியாகக் குறித்துள்ளனர். வழிபடுதலும் மாயன்களின் வழக்கம்; என்பதால் அமானுஷ்ய வடிவமுள்ள தெய்வச்செயல்பாடுகளைக் கொண்ட குறிப்புக்களும் அவர்கள் காலண்டரில் காணப்படுகின்றன.

நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சி பற்றியும், கோள்களின் சஞ்சாரம் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர் அதைக்கொண்டே, பூமியில் நடைபெறும் இயற்கைச்சீற்றங்களைக் கணித்து வைத்திருந்தனர். 

நவீன கணிதங்களின் கண்டுபிடுப்புகளும், தொலைநோக்கிகளும் இல்லாத காலத்திலேயே.. ஒவ்வொரு கோள்களுக்குமான இடைவெளி தூரம், சூரியனுக்கும் கோள்களுக்குமான இடைவெளி தூரம் போன்றவற்றை அவர்கள் சரியாகக் கணக்கிட்டிருப்பது ஆச்சரியம்தான். இந்த தூர வெளிக்கணக்குகள் 99.45% துல்லியமானவை என ‘நாசா’ உட்பட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோள்கள் மட்டுமின்றி சூரிய அமைப்பையும், அந்தச் சூரியனில் மத்தியில் காணப்படும் கரும்புள்ளிகள் பற்றிய முதற்குறிப்பை மாயன்களே உலகிற்குத் தெரியப்படுத்தினர். 

மாயன்களின் கணிப்புகள் தற்போதைய காலம் வரை சொன்னது சொன்னபடி நிறைவேறித்தான் வந்தது. அந்த மாயனின் காலண்டர் கணிப்புக்களில் மிக முக்கியமானதாக கருதப்பட்ட ‘21 டிசம்பர் 2012’ல் உலகம் அழிந்து போகும் என்ற விசயம்தான் பொய்த்துப்போனது.

அந்த 21 டிசம்பர் 2012 நாளை ‘டூம்ஸ் டே’ என அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ‘டூம்ஸ் டே’ என்பது மாயன்காலண்டர்களின் கணிப்புக்களின் குறிப்புக்கள் இறுதி பெற்ற நாள். எனவே, இந்த நாள் வரை மட்டுமே குறிப்புக்கள் நீள்வதால்.. இந்தநாளில் உலகில் நீட்சியும் முடிந்து போகும் என்று சிலர் கதைகட்டினார்கள். பலர்; அதை நம்பவே செய்தார்கள். 

ஆனால், உண்மையில் மாயன்கள் இந்த நாளை இறுதிநாள் என உறுதியாகக் குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டுவந்த கணிப்புக்களும், நிகழ்செய்திகளும் இந்த நாளில் முடிவடைந்திருந்தது. ஒருவேளை அவர்கள் வேறொரு கணிப்பை இதைத்தொடர்ந்து வெளியிடலாம் என்றிருந்திருந்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து இயற்கைச்சீற்றங்களைக் கண்டுகுறித்தவர்கள், அடுத்த குறிப்பை வெளியிட சற்று இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கலாம். அந்த இடைவெளியில் அவர்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது, அவர்கள் வெளியிட்டிருந்த அடுத்த பட்டியல் நமது கையில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆக, நமக்கு கிடைத்த தகவல்படி சென்ற 2012 டிசம்பர் 21 அன்று.. ‘டூம்ஸ் டே’ என்று அழைக்கப்படுகிற நாள் அன்று.. உலகம் அழியவில்லை. எனவே, அன்று உலகம் அழியும் என்று மாயன்கள் குறிப்பிட்டு இருக்கவில்லை.

Wednesday, September 9, 2015

நடக்கும் என்பார்..நடக்கும்!

உலகம் ஒரு அதிசயக்கூடம். மனிதனே அதிசயங்களை அறியவும், அனுபவிக்கவும், ஆரம்பித்துவைக்கவும் தெரிந்தவன். மனிதன் கண்டுணர்ந்த அதிசயங்களில், மனிதனே புரிந்த, படைத்த அதிசயங்களைப் பார்த்துத்தான் அதிகம் அதிசயப்பட்டான்.

அரும்பெரும் கண்டுபிடிப்புகள் அவனை அதிசயப்படுத்தியது.

பெருமைக்குரிய கட்டிடங்கள் அவனை அதிசயப்படுத்தியது.

இவற்றில் அதிசயப்பட்டு அவன் புருவங்கள் உயர்ந்தது என்றால், 
நாளை நடக்கப்போவதை நேற்றே கணித்துச்சொல்லும் மனித திறமையைப் பார்த்து, அவனது புருவங்கள் பிடறிவரை செல்கின்றன. அதனால்தான், உலகமெங்கும் ஜோதிடத்திற்கு அவ்வளவு ஆதரவு. 

எனவே, இப்படி கணிப்புகளும் அதிகம். இவற்றில் நமது நாடி ஜோதிடம் முதல், நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் வரை பல்வேறு விசயங்கள் காலம் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும், தலையாயதும், பல்வேறு கணிப்புக்கள் மெய்யாலுமே நடந்தது அதிசயப்படுத்தியதும் மாயன் காலண்டர். இந்த அதிசயங்கள்தான் கடந்த 2012ஆம் ஆண்டு உலகையே உலுக்கிக்கொண்டிருந்தது.

விஷயம் என்னவென்றால், மாயன்காலண்டர் துவங்கியகாலத்திலிருந்து வரிசைக்கிரமமாக, நடக்கும் என அறிவுறுத்திய பல்வேறு சம்பவங்கள், உள்ளபடியே நடந்து ஆச்சரியப்படுத்திவந்திருந்தது. எனவே மாயன்காலண்டரின் கணிப்புகளை உலகம் உற்றுப்பார்த்து வந்தது. இப்படி கணிப்புக்களைச் சொல்லிவந்த மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் தன் கணிப்புக்களையும், கணக்குகளையும் முடித்துக்கொள்ளுவது போல வடிவமைக்பட்டிருந்தது. அல்லது, மாயன்காலண்டர், மேற்சொன்ன தேதிவரைதான் தன் கணிப்புக்களை வெளியிட்டிருந்தது. 

எனவே, மாயன்காலண்டர் தன் கணிப்புக்களை முடித்துக்கொள்ளும் தேதி.. உலகம் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தேதியென ஓரே பேச்சாயிருந்தது. 

பல்வேறு அறிஞர்களும்(!) பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். உலகம் அழியும் - அழியாது என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டியெங்கும் நடைபெற்றது. மதம் சார்ந்த இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு மக்களிடையே பீதியைப் பரப்பின. இதெற்கெல்லாம் உச்சக்கட்டமாக ‘2012’ என்ன பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகி உலகம் அழியும் காட்சிகளை, கடைவிரித்து பெருமளவில் கல்லாக்கட்டியது. 

இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் என்வென்றால், நாம் ஏற்கெனவெ கூறியது போல், பல்வேறு மாயன்காலண்டரின் கணிப்புக்கள் உண்மையாக நடந்தேறியதுதான். அவற்றின் பட்டியல் மிக நீளமானது. கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகக் கருதப்படும் மாயன் நாகரீக காலண்டரின் வரலாற்றில் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்ட கணிப்புகள் கிருஸ்துவின் காலத்திலிருந்தே துவங்குகிறது. 

இயற்கைச்சீற்றங்களை துல்லியமாக கணித்துச் சொல்லிய அவற்றையெல்லாம் பட்டியலிட்டு ஆராய்ந்தால், நம் காலம் முழுக்க ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். ஒரு காபி குடிக்கும் அவகாசம்தான் நம்மிடம் இருக்கிறது என்பதால் சில மட்டும் இங்கே..

1. கி.பி. 1700 ஜனவரி 26, வடஅமெரிக்க பூகம்பம். இந்த நிகழ்விற்குப்பிறகுதான் மாயன்காலண்டரின் கணிப்புகள் பக்கம் உலகம் கவனம் திருப்பியது.

2. 1926 ஜுன் 26, ரோடெஸ் பூகம்பம்.

3. 1963 ஜுலை 26, யுகோஸ்லோவாக்கியவின் பெரும்பாண்மையான மக்களைப் பலிகொண்ட நிலநடுக்கம்.

4. 2003 மே மாதமும், ஜுலை மாதமும், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், அதே 26ம் தேதியில் நடைபெற்று நாமே கண்டுணர்ந்து, கண்அயர்ந்த ஜப்பானிய நிலநடுக்கம்.

5. இவ்வளவு ஏன்? நமது குஜராத்தில் 2001 ஜனவரி 26ல் உலுக்கிய பூகம்பம் என எல்லாவற்றைப் பற்றிய குறிப்பினையும் குறிப்பிட்டிருந்தனர் மாயன்கள். 
இதையெல்லாம் கணித்தவர்கள் மாயன்கள் என்பதைத்தவிரவும், இதில் இன்னொரு ஒற்றுமையைக் கவனித்திருப்பீர்கள். ஆம். எல்லா சம்பவங்களின் தேதியும் 26. அவற்றின் கூட்டுத்தொகை 8. 

அதனால்தான், உலகமெங்கும் 13ம் நம்பரை ஆகாத எண்ணாக கொண்டாடிக் கொண்டிருக்க, நாம் மட்டும் எட்டை… நட்டக்கணக்கில் வைத்திருக்கிறோமோ என்னவோ? ( யப்பா.. நமக்கும் - மாயன்களுக்கும் லிங்க் கொண்டுவர எப்டியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! )

Wednesday, September 2, 2015

மாயா மச்சிந்ரா..

தமிழர், தமிழின் பெருமையை, தொன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். ஆதிதொட்டு மனிதகுலத்தின் தனிச்சிறப்புகளில் ஆதிக்கம் செலுத்திய மேன்மையை சொல்லத்தான் வேண்டும்.

ஆனால், அதற்காக எல்லாமே நாங்கதான் என ‘புருடா’ விடத்தேவையில்லை.
முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். 

உலகத்தில் முதல் முதலில் ‘பாஸ்வேர்டை’ கண்டுபிடித்தது தமிழன் தான் என்றிருந்தது அந்த செய்தி. அதற்கு உதாரணமாக ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதையில் வரும் ‘அன்டா காகசம், அபு காகுகும் திறந்திடு சீசே’ என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

எனக்கு.. ‘அடேய்…!’ என்றிருந்தது.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது பாரசீகத்தின் கதை. அந்தக் கதையில் எம்.ஜி.ஆர். நடித்த தமிழ்ப்படம் வந்தது என்பதற்காக.. அதில் வரும் ‘பாஸ்வேர்டு’ தமிழரின் கண்டுபிடிப்பு ஆகிவிடாது.

தமிழன் முதல் பாஸ்வேர்டை கண்டுபிடித்து இருக்கலாம். அதை நீங்கள் சொல்ல வருவதானால்.. உண்மையான தகவலின் அடிப்படையில் விளக்குங்கள். அல்லது இதுபோன்ற கண்டுபிடிப்புக்களை நீங்கள் கண்டுபிடிக்காமல் இருங்கள். 

ஏனெனில், தமிழனை ‘எப்படியாவது’ இவன்தான் ஆதிகாலத்தவன் என்பதைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவனது இயல்பான, இயற்கையோடு இணைந்த பண்பாட்டை உணர்ந்தாலே, உலகம் தெரிந்து கொண்டுவிடும் இவன்தான் மூத்தவன் என்று.

இப்போது, நம்மைப் போலும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான, மாயன் இனத்தவரையும், சமீபத்தில் உலகை உலுக்கிய அவர்களது காலண்டரையும் காணலாம்.

கொலம்பஸ், இந்தியாவிற்கு கடல்வழிதேடி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அங்கிருந்தவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார். அந்த செவ்விந்திய இனத்தை அடியாடு அழித்துவிட்டு அமெரிக்காவை ‘ஆக்குபை’ ஆக்கினார்கள் அய்ரோப்பியர்கள். 

அய்ரோப்பியர்கள் காலடித்தடமெல்லாம் இயற்கை அழிந்தது. இயற்கையோடு சேர்ந்த மனித வாழ்வும் அழிந்தது. அவ்வாறு அழிந்த அளவிற்கடங்கா ஆதியினத்துள் ஒன்றுதான் மாயன்.

மாயன்கள், வரலாற்றில் கனிந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள்.

எகிப்தியர்களுக்கும் முன்பே, பிரமிடு அமைப்புடன் கூடிய கட்டிடக்கலையில் தேறியவர்கள்.

கணிதத்தில் வல்லவர்கள்.

கட்டமைக்கப்பட்ட காலண்டர்களைக் கண்டறிந்தவர்கள். என ஏகப்பட்ட சிறப்புக்கள் கொண்டவர்கள் மாயன் இனத்தவர்கள். இவர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய சம்மந்தங்கள் உண்டு.

சீனர்களும், தமிழர்களும் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர் என்று சொன்னால்.. மயான் இனத்தவர்களே தமிழர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது தகவல்கள்.

-- இடையில் எனக்கு ஒரு டவுட்டு – அதாவது பண்டைய கால வரலாற்றை படிக்கையில் -- சிந்து சமவெளி நாகரீகம், மாயன் நாகரீகம் என்று படிக்கிறோம். அந்த நாகரீகங்களின் இயல்புதன்மைக்கு நேர் எதிரில் இருக்கும் - இன்றைய செயற்கையான இயற்கையை கெடுக்கும் நடைமுறைகளையும் நாகரீகம் என்கிறோம். அப்படி என்றால் .. உண்மையில் எது நாகரீகம்? – தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

விசயத்திற்கு வருவோம். மாயன்கள் இன்றைய அமெரிக்கா - மெக்சிகொவிலிருக்கும் - கோசுமெல் தீவில் வசித்தவர்கள். அவர்களது நாகரீகத்தின் சான்றுகள் இங்கேதான் காணக்கிடைக்கிறது.
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறி வாழ்ந்ததை உறுதி செய்கிறார்.

மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.

அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hygo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.

அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் திரு. மஞ்சை வசந்தன் தனது Blog-ல் நமக்கு தெரிவிக்கிறார். அவருக்கு நன்றிகள்.

இது போக இன்னும் சில தகவல்களும் மாயன் இனத்தவரைப்பற்றி நமக்கு தெரிவிக்கிறது. மாயன் இனத்தவர்களின் படைப்புகளில் உலகினை அதிக வியப்புக்குள்ளாக்குவது அவர்களது கட்டிடக்கலைதான்.

அவர்களின் பிரமிடு போன்ற கட்டிடங்கள் பிரம்மிக்கத்தக்கவை. உச்சியில் ஏற ஏற தலைகீழாக நிற்பது போலவும், வானத்தில் தொங்குவது போலவும் ஒரு பிரம்மை என்றபடுகிறதாம். வானக்கிரகங்களின் சக்திகள் ஒன்றினைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தக் கட்டிடங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு எப்படி இவ்வாறு கட்டினார்கள் என்பது உள்ளபடியே ஆச்சரியம்தான்.



இதற்கெல்லாம் மேலாக ஆச்சரியத்தை தரக்கூடியது அவர்களின் காலண்டர்கள். இந்த மாயன் காலண்டரின் விசேசம் என்னவென்றால் வெறும் நாட்கணக்கை மட்டும் அவர்கள் குறிப்பிடாமல் அவற்றில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கணிப்பையும் வெளியிட்டிருந்ததாகவும் அவையெல்லாம் பெரும்பாலும் அப்படியே நடந்து வியப்பளிக்கின்றன.

Friday, August 28, 2015

சீனக்காலண்டர் 5

பண்டைய சீனப்பழக்க வழக்கங்களை மூடநம்பிக்கைகளின் நிலவரையாகப் பார்க்கும் அறிவுலகம், சீனக்காலண்டரை மட்டும் விண்ணறிவின் தோரணவாயிலாகப் பார்க்கிறது. சீனக்காலண்டர் நிலவின் தன்மைத்தான மாதச்சுற்றுக்கும், சூரியனின் பின்செல்லும் ஆண்டுச்சுற்றிற்குமான கால வித்தியாசத்தை சரியாகக் கணிக்கிறது. பிரபல கிரிகோரியன் காலண்டரில் கூட இந்த கணிப்பு மிகத்துல்லியமாக இல்லை.

அதாவது, பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் நாட்கள் 365.25 என சொல்லப்பட்டாலும் உண்மையில் மிகச்சரியாக 365.25 நாட்கள் இல்லை. நுட்பமான உண்மை என்னவெனில், பூமி சூரியனை ஒரு முழுச்சுற்று சுற்றிவரும் நேரமானது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் மற்றும் 46 நொடிகள் ஆகும். 365 நாட்கள் கழித்த மீதி நேரத்தை நாட்களாக கணக்கெடுத்தால் 0.23 நாட்களாகிறது. இந்தக்கணக்கும் இருபின்னங்களுக்கு திருத்தப்பட்ட வடிவமாகும். 

இதன்படி ஒரு ஆண்டுக்கு 365.23 நாட்கள்தான். இந்த 0.23 நாட்களைத்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழுநாளாக மாற்றி கிரிகோரியன் ஆண்டுடன் சேர்த்துக்கொள்கிறோம். இதன்படி ஒரு லீப் இயர்க்கு உண்மையான ஆண்டுச்சுற்றை விட 0.08 நாட்கள் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். இந்த அதிகப்படியான நாட்சுற்றை கிரிகோரியன் காலண்டர் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் டே இல்லாத லீப் இயராக நேர் செய்ய முயற்சிக்கிறது. எனினும் இதில் சற்றுக் குறைபாடே உள்ளது. 



இந்த கணக்கை சீனக்காலண்டர் வேறுமாதிரி கையாளுகிறது. அதுதான், 60 ஆண்டுகளுக்கான சுற்று (sexagenary cycle). 

சீனத்தின் காலண்டர் நம்பிக்கையைப் பொறுத்த மட்டில் அவர்கள் ஆண்டுகளை அவற்றின் தன்மையை வைத்து 12 ஆண்டுகளாக தொகுத்துள்ளனர் என்பதை நாம் ஏற்கெனவே அறிவோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளையும் 10 விதமான அடிப்படை தெய்வீக தன்மைகளின் ஆட்சியில் அமைவதாகக் கருதுகின்றனர். இந்த பத்து அடிப்படை தெய்வீகத்தன்மைகளும் ஒவ்வொரு தன்மையும் ஒவ்வொரு ஆண்டை ஆட்சிசெய்வதாக கருதுகின்றனர். 

இந்தக்கணக்கில் வரும் போது முதல் பத்து ஆண்டை வரிசையாக பத்து தெய்வீக தன்மைகள் ஆளுகின்றன். பதினோறாவது ஆண்டை, மீண்டும் முதல் தெய்வீகத்தன்மை ஆளுகிறது.  புனிரெண்டாவது ஆண்டை இரண்டாவது தெய்வீகமும் அடுத்;துவரும் முதல் ஆண்டை மூன்றாவது தெய்வீகத்தன்மையும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டை நான்காவது தன்மையும்.. இப்படியாக வரிசையாக இவை இரண்டும் (10ம், 12ம் )பூர்த்தியாக 60 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அறுபது ஆண்டுச்சுற்றில், 29 நாட்களைக் கொண்ட மாதங்களாக 12 மாதங்கள் nPகாண்ட சாதா ஆண்டுகள் 45ம், 13 மாதங்களைக் கொண்டு சீன லீப் ஆண்டுகள் 15 ஆண்டும் சேர்ந்து, நாளின் சுற்றில் மாதத்தின் சுற்றிற்கான பாக்கியையும், மாதத்தின் சுற்றில் ஆண்டின் சுற்றிற்றகான பாக்கியும் எந்த பாக்கியும் இல்லாமல் நிறைவாகிறது. 

இந்த பாக்கியற்ற நிறைவுச்சுற்றுக்களை பூமியோடு இணைந்து தானும் சுற்றிய மனித வாழ்வைத்தான் நாமும் ச~;டி யப்த பூர்த்தியாக கொண்டாடுகிறோம். ஏனெனில் 60வருடங்களில்தான் ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் அனைத்து கிரகங்களின் திசை, பார்வை, பெயர்ச்சிகளையும் சந்தித்து முழுமையாக அனுபவித்து முடிக்கிறான் என நமது ஜோதிடமும் சொல்கிறது.

ஆக, நமக்கும் சீனாவிற்குமான பல்வேறு தர்க்கரீதியான ஒற்றுமைகளைப் பார்த்தோம். சீனர்களின் காலண்டர் இன்னும் ஆயிரம் ஆயிரம் நுட்பங்களைக் கொண்டது. இதில் நமக்குத் தேவையான பலவற்றையும், சுவாரசியமான சிலவற்றையும் அறிந்து கொண்டோம். அதாவது, நமக்கும் அவர்களுக்குமான பாரம்பரிய தொடர்பு, தொன்று தொட்டு கொண்டாடிவரும் விழாக்களில் அவர்களுக்கும் நமக்குமான சம்மந்தங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆண்டுத்துவக்கம் நமது தைமாத திகதிகளில் ஆரம்பிக்கிறது என்பது.

சீனர்களை மட்டும் கொண்டு நாமும் அப்படித்தான் என்று சொல்லி விட முடியாது. உலகின் பண்டைய காலண்டர்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று பார்த்து விடலாம் என்றுதான் இந்த உலகின் காலண்டர்களைத் தேடி சுற்ற ஆரம்பித்தோம்.  அந்த வரிசையில் நாம் அடுத்துக் காணப்போவது ‘மாயன் காலண்டர்கள்’.

2012-ல் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்திப்பரப்பரப்பு ஏற்படுத்தியே அதே மாயன் காலண்டரைத்தான் காணப்போகிறோம். 

Saturday, August 15, 2015

சீனக்காலண்டர் 4

சீனக்காலண்டர், சீனாவில் மட்டுமல்லாது தைவான், ஹாங்காங், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், மாகே, தென்கொரியா, இந்தோனிசா, புருனே, டாயோ, வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ( ஏனோ, கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறது ) அதனால்தான் சீனக்காலண்டரை அதிகம் கவனிக்க வேண்டும்.

சீனக்காலண்டரின் நாள் என்பது, நாம் ஏற்கெனவே சொன்னது போல், நள்ளிரவில் துவங்குகிறது. நள்ளிரவு 12 மணிமுதல் மருநாள் இரவு 12 மணிவரை ஒரு நாள். 

வாரக்கணக்கு, அவர்கள் வரலாறு மாற மாற மாறிவந்திருக்கிறது. பொதுவாக ஒரு தொடர்ந்த உழைப்பின் நாட்களும், ஒரு ஓய்வுநாளும் அவர்களின் ஆரம்பகால வாரம். மிங் வம்ச ஆட்சிக்காலத்தில் பத்துநாட்கள் கொண்ட வாரம், பதினைந்து நாட்கள் கொண்ட வாரம், இருபது நாட்கள் கொண்ட வாரம் எல்லாம் அந்த அந்தப் பகுதிகளின் விவசாய நடைமுறைக்கேற்ப புழக்கத்தில் இருந்தது. 

நிலவின் அடிப்படையில் அமைந்த காலண்டர்கள் மெல்ல மெல்ல நிலைபெற்ற பிறகு பதினைந்து நாட்கள் கொண்ட வாரங்கள் இரண்டாகப்பிரித்து (பதினைந்தில் சரிபாதி ஏழரை தானேன்னு ஏழரையப் பண்ணாதீங்க!) ஏழுநாட்களைக் கொண்ட உழைப்பின் வாரத்தை உருவாக்கினார்கள். 

ஏழு நாட்களின் பெயர்கள் எண்களின் வரிசைக் கிரமத்தில் அமைந்தது. முதல்நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள், ஆறாம் நாள் என்பவைதாம் அவை. 

உலகத்தில் வாரங்களுக்கு முதல் முதலாக கிரகங்களின் பெயரிட்டவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கும். தற்போது பயன்படுத்திவரும் கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையால் அமைந்த கிரேக்க காலண்டரில் ஆரம்ப காலத்தில் வாரங்கள் இல்லை. அது பிற்சேர்க்கையே. அதெல்லாம் இருக்கட்டும் நீ எழாம் நாளை சொல்லாமல் விட்டுவிட்டாய் என்கிறீர்களா? ஆம், சீனர்களும்தான். சீனர்கள் ஏழாம் நாளுக்கு மட்டும் ஏழாம் நாள் என பெயரிடவில்லை. அன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை.

மாதங்கள்தான் பொதுவாக காலண்டரின் பெரிதும் பிரச்சனையில்லாத பிசிறில்லாத அமைப்புக்களாக ஆரம்பம் முதல் இருக்கின்றன. நிலா அடிப்படையிலான மாதங்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் நாளைப் பகுக்க மனிதர்களுக்கு உதவியது. 

கிரிகோரியன் காலண்டரிலும், நமது காலண்டர்களிலும் நிலவின் சுற்றான மாதத்தையும் (29.5 நாட்கள்), பூமியின் சூரியனைச்சுற்றி வரும் வருடத்தையும் (365.25) ஒரு முழு வட்டமாக அமைக்க, பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடத்தையும்.. மாதத்தின் நாட்கள் ஒரு 30, 31 நாட்கள் என பிரித்து சமாளித்து லீப் வருடத்தையும் அமைத்தார்கள். அப்படியிருந்தும் அவை இன்றும் பொருந்தாத கணக்குகளாகவே இருக்கின்றன. நமது ஜோதிட அமைப்பு இந்த கணக்கு இடிப்புக்கு, சில தீர்வுகளை முன்வைக்கிறது. ( அதனை நம்நாட்டிற்கு வந்த பின்னர் காணலாம். இப்போது சீனாவில் அல்லவா இருக்கிறோம். )



சீனக்காலண்டரோ இந்த மாத ஆண்டுச்சுற்றுக்கு வேறுமாதிரியான தீர்வை மேற்கொள்கிறது. சீன மாதங்கள் மிகச்சரியாக நிலவின் சுற்றை ஒட்டி இருக்கின்றன. மாதங்கள் 29 நாட்களைக் கொண்டவை. 30,31 என அவர்கள் மாத நாட்களை நீட்டித்துக் கொள்ளவில்லை. மாறாக வருடங்களுக்கான மாதங்களை மாற்றி அமைத்துக்கொண்டனர்.

வழக்கமாக பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடங்கள். பன்னிரண்டு மாதங்களுக்கான வருடம் 348 நாள். வருடத்திற்கு 365 நாட்களுக்கும் இதற்குமான இடைவெளி கிட்டத்தட்ட பதினேழு நாட்கள். இந்த நாட்களை நிறைவு செய்ய சீனர்கள் லீப் வருடங்களை உபயோகித்தனர். 

லீப் வருடங்களுக்கு 13 மாதங்கள். லீப் வருடங்களை அவர்கள் embolismic வருடங்கள் ( மொத்தக்கூட்டு வருடங்கள் ) என அழைத்தனர். இந்த மாதிரியான மாதங்களின் ஏற்ற இறக்கங்ளைக் கொண்ட வருடங்களின் அமைப்பினால் அவர்கள் சுற்றுக்களைச் சமமாக்கினர்.

இம்மாதிரியான கணக்கமைப்புகளினால் என்னவொரு சிக்கல் என்றால், தற்போதைய நடைமுறையில் இருக்கும் கிரிகோரியன் காலண்டருக்கு ஏற்றபடி வருடாவருடம் சீனப்புத்தாண்டு ஆரம்பிக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் ஆரம்பித்துக் குழப்பும். இந்த ஆண்டுத் துவக்கத்தைக் கண்டுபிடிப்பதிலேயே மிகுந்த கணக்குகள் உண்டு. 

ஆயினும் சீன ஆண்டுத்துவக்கமானது, ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் ஆண்டின் ஜனவரி 17ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17ம் தேதிக்குள் இருக்கிறது. (நோட் திஸ் பாயிண்ட்.. இது நம்ம தைமாசம் பாஸ்)

இவ்வாறு மாதச்சுற்றுக்களில் உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருக்கும் சீனக்காலண்டர், வருடக்கணக்கைப் பொருத்த வரையில் நமது கணக்குகளோடு பொருந்தி வருகின்றனர். நாமும் நமது ஆண்டுகளை பெருந்தொகுப்பாக 60 ஆண்டுகளாக வைத்திருக்கிறோம். அவர்களும் அப்படித்தான் 60ல் நம்மோடு பொருந்தி வருகிறார்கள். அந்தக் கணக்கு என்னவென்றால்…

Saturday, August 8, 2015

சீனக்காலண்டர் 3

சீனக்காலண்டரின் ஆரம்பகால காலண்டர் வரலாறு தெளிவாக இல்லை. தெளிவாக இல்லேண்னாத்தானே அது வரலாறு. தொன்மை மிகுந்த இடங்களில் இதுதான் தொல்லை. ஒரு சமுதாயத்தின் பண்பாடு, இலக்கியம், தொல்லியல் தெரிவுகள் போற்றவற்றில் அறிந்த செய்திகளில் உள்ள உண்மையின் அடிப்படையில் தான் அவர்களின் வரலாற்றை அறிய முடியும். 

ஒரு பண்டைய சமுதாயம் விட்டுச்செல்லும் தடங்களைக் கொண்டு அவர்களைப் பற்றி முழுவதும்.. இதுதான், இப்படித்தான் என்று அரிதியிட்டுக் கூறுவது கடினம். ஒரு யூகமான கணிப்புகளைத்தான் தெரிவிக்க முடியும். இந்தக் கணிப்புகளை மேற்கொள்பவர்களின் மனமுரண்களும் அவற்றால் எழும் வரலாற்று திரிபுகளும் பற்றி நாம் ஏற்கெனவே ‘வடிவேலு காமெடி’ மூலம் விவாதித்து இருக்கிறோம்.

இம்மாதிரி காரணங்களால்தான் சீன வருடத்தை எண்களிட்டு எத்தனையாவது ஆண்டு என்று கி.பி.2015ம் ஆண்டை 1937ம் சகஆண்டு என்றும், 2046ம் திருவள்ளுவர் ஆண்டு என்றும் சொல்வது போல் அரிதியிட்டு சொல்லமுடியவில்லை. அப்பறம், சீனக்காலண்டரை ஏன் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொகுத்தார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. 

இருப்பினும், சீனக்காலண்டரின் அடிப்படையை வைத்து நோக்கும் போது, அடிப்படையில் ஆண்டுகளை (நம்மைப்போல்) 60 ஆண்டுப் பெரும் சுற்றாக கணக்கிட்டனர். அந்த அறுபது ஆண்டுகளையும் விவசாயம் சார்ந்த சுழற்சிகாக 5 உட்பிரிவுகளாகப்பிரித்து பன்னிரண்டு பன்னிரண்டு ஆண்டுகளாக தொகுத்தனர் என்று யூகிக்கலாம் எனச் சில சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கின் வம்ச காலம் முதல் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு மிங் வம்சத்தின் காலம் வரை சுவர் கட்டுவதிலேயே சீனவரலாறு நிலைக்கிறது. கி.மு.ஏழாம் நூற்றாண்டிலேயே கட்டிடங்கலையில் சீனர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். விவசாயத்தில் பெரும் பொருளாதாரம் கண்ட சீனா, அதைக் கொள்ளையடிக்க வந்தவர்களிடமிருந்து தங்களைக் காக்கவே தன் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியைச் செலவளித்தது. சுவர் எழுந்த கதையும் அதுதான்.

பாரம்பரிய சீனக்காலண்டரை ஒட்டி சீனர்கள் கொண்டாடும் விழாக்கள் மொத்தம் ஒன்பது. இவற்றில் ஏழு திருவிழாக்கள் சந்திர சுற்றின் அடிப்படையிலும், இரண்டு திருவிழாக்கள் சூரியச்சுற்றின் அடிப்படையிலும் கொண்டாடுகிறார்கள். அவையாவன..

1. சீனப்புத்தாண்டு - சூரிய காலண்டரின் அடிப்படை.
2. விளக்கு திருநாள். ( ஐ.. தீபாவளி! ) – சந்திரன்
3. படகு திருவிழா ( ஓணமோ? ) – சந்திரன்
4. க்விச்சி திருவிழா ( காதலர் தினமாமே? ) – சந்திரன்
5. நீத்தார் நாள் ( மஹாளய அம்மாவாசை, கல்லரைத்திருநாள் ) – சந்திரன்
6. நிலவுத்திருவிழா ( சித்ரா பௌர்ணமி ) – சந்திரன்
7. இரட்டை ஒன்பதாவது திருவிழா இது மலர்கள் மற்றும் இயற்கையை வணங்கும் திருவிழா ஆகும். – சந்திரன்
8. க்சியா யுவான் திருவிழா. இது நீர்கடவுளை வேண்டும் திருவிழா ஆகும். (ஆடிப்பெருக்கு)
9. குளிர் காலத்திருவிழா. இவ்விழாவில் சீனர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி டாங் யோன் என்னும் பண்டத்தை உண்பார்கள். இதை சூரியனின் சலன சாய்வு திருவிழா என்றும் சொல்கிறார்கள். நமது ‘மகரசங்கராந்திக்கு’ சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. (இந்தத் தகவலில் ‘டாங் யோன’; என்பது எத்தகைய திண்பண்டம் என்பது தெரியவில்லை. ஒருவேளை நம்ம பொங்கலைப் போன்றதாக இருக்குமோ?. விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்) – சூரியன்.

இந்த பண்டிகைப் பட்டியலின் படியும் நம்மை சீனர்கள் நம் பண்பாட்டை எவ்வளவு ஒட்டி வருகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா?

சீனக்காலண்டர் அடிப்படையிலானன ஜோதிடத்தில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. அது பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கணிக்கும் அகில உலக பேமஸ் சீன ஜோதிடம். இந்தப்;பட்டியலின் படி தாயின் வயது மற்றும் கருவுற்ற ஆங்கில மாதத்தினைக் கொண்டு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் அறியலாம். இந்தப்பட்டியலை ஏற்கெனவே ‘மகாகவி’ மாத இதழில் வெளியிட்ட போது, தோழி ஒருத்தி.. இந்தக் கணிப்பு சரியாக இருப்பதாகவும்.. ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறினார். ஒருவேளை உங்களுக்கு சரியாக இல்லை எனில் சீன தேசத்தில் சென்று பிள்ளை பெற்றுப் பாருங்கள்! 

Friday, July 31, 2015

சீனக்காலண்டர் 2

உலகில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிகோரிஸ் காலண்டரைத் தவிர்த்து, நீண்ட பாரம்பரியம் உடைய, அதிக அளவு மக்களால் கொண்டாப்படும் காலண்டரான, சீனக்காலண்டரைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் சீனர் என்பதால் உலகின் பிரம்மாண்டமாக கொண்டாப்படும் காலண்டர்களில் சீனக்காலண்டர் முக்கியமானதாகும். நம் தேசத்திலும் அவ்வளவிற்கு மக்கள் தொகை இருந்தாலும், பல்வேறு பட்ட பண்பாட்டுக்கலவையினால், சீனக்காலண்டர் அளவிற்கு கணக்கற்ற பேர்களால் கொண்டாடப்படும் ஒரே காலண்டர் நம்மிடம் இல்லை. நம்மிடமே இல்லையென்றால்.. பிற நாடுகளுக்கு வாய்ப்பேது?

சீனக்காலண்டர்கள் ஒவ்வொரு மன்னன் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதும் புதிவண்ணம் பெறுகிறது என்று கண்டோம். ஆனால், தொன்று தொட்டே சீனர்கள் வானசாஸ்திரத்தையும், ஜோதிடத்தையும் கொண்டாடினர். ஆரம்ப காலம் தொட்டே சீன அரசு வான சாஸ்த்திர ஆய்வுக்கென உயர்தர ஆராய்ச்சிக்கூடம் அமைத்து அதில் பல்வேறு அறிஞர்களை ஆராதிக்கும் வழக்கமும் கொண்டிருந்தது.

தற்போதைய பாரம்பரிய காலண்டராக சீனத்தில் கொண்டாடப்படும் காலண்டர் ஐந்நூறு வருடங்களுக்கு முன் இறுதிவடிவம் பெற்றது. இதனை வடிவமைத்தவர் சீனதேசத்தின் ஜோதிட மஹாமேதை திரு. டாங் ரோவாங். இவர் கி.பி. 1591 முதல் 1666 வரை வாழ்ந்ததாக குறிப்புக்கள் உள்ளன. இவர் வடிவமைத்த காலண்டரின் அடிப்படையிலேயே ஆண்டுகள் பன்னிரெண்டு தொகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் இடப்பட்டுள்ளது. 



கிளி ஜோசியமோ, நாடி ஜோதிடமோ, ஜாதக ஜோதிடமோ.. நம்மூர் விசயங்கள் எல்லாம் நன்கு கற்றுக்கொண்டோருக்கு மட்டுமே கைவரும். சீன ஜோதிடத்திலும் கடினமான கணக்குகள் இருந்தாலும், எளிமையான விளக்கங்கள் கொண்ட ஜோதிடமும், ரசனைக்குரியதாய் உள்ளது. எளிய முறையில் நாமே நமக்கு ஜோதிடம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளல் அவசியம். ஒரு 60 ஆண்டிற்கான பட்டியல் கொடுத்திருக்கிறேன்.

எலி ஆண்டு (2008, 1996, 1984, 1972, 1960)
இந்த ஆண்டில் பிறந்தவர்கள் திறமைமிக்கவர்களாகவும், விடா முயற்சி உடையவர்களாகவும் இருப்பர். மைனஸ் என்னவென்றால், இவர்கள் திறமைiயும் உழைப்பும் அனேகமாக அற்ப விசயங்களில் செலுத்திவிடுவதுதான்.

எருது ஆண்டு (2009, 1997, 1985, 1973, 1961)
இவர்கள் கடின உழைப்பாளர்கள். உண்மையானவர்கள். புத்திசாலி வாழ்க்கைத்துணை அடைந்துவிட்டால், நல்ல மேலாளர் கிடைத்தால் இவர்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. சொந்த முடிவுகளை இவர்கள் எடுக்க வேண்டாமே!

புலி  (2010, 1998, 1986, 1974, 1962)
நினைத்ததை முடிக்கும் வல்லவர்கள். பொசுக்கொன்று கோபம் வரும். எடுத்தெறிந்து விட்டு, அப்புறம் வருந்தி என்ன பிரயோஜனம்?

முயல் ( 2011, 1999, 1987, 1975, 1963 )
எக்கச்சக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். இந்த உணர்வே, இவர்கள் பெரிய காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைத்து விடும்.

டிராகன் ( 2012, 2000, 1988, 1976, 1964 )
இந்த வலிமைமிக்க புத்திசாலிகள், அடுத்தவர்களின் நிறை குறைகளை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

பாம்பு ( 2013, 2001, 1989, 1977, 1965 )
இவுங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனால், அட்ஜஸ்ட் பண்றதே வேலையாகப் போய் சுயம் என்பது சுருண்டு கிடக்க நேரிடலாம்.

குதிரை (2014, 2002, 1990, 1978, 1966)
தனித்துவம் மிக்கவர்கள். கலகவென கூட்டத்தில் இருக்க வேண்டும் என நினைத்தாலும், பழகும் தன்மையின்மையால் தனிமை இவர்களை வாட்டும்.

ஆடு (2015, 2003, 1991, 1979, 1967)
ஊரோடு ஒத்து வாழ்வதில் வல்லவர்கள். எதைச் செய்தாலும் யாரையாவது எதிர்பார்தே செய்ய வேண்டியிருப்பதுதான் சிரமம்.

குரங்கு (2016, 2004, 1992, 1980, 1968)
எந்த சூழ்நிலையிலும் வாழும்படி தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள். சமயங்களில் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பிவிடுவார்கள்.

சேவல் (2017, 2005, 1993, 1981, 1969 )
திட்டமிட்டு வாழ்வார்கள். கடமை தவறாதவர்கள். ரூல்ஸ் ராமானுஜங்கள்.

நாய் (2018, 2006, 1994, 1982, 1970)
கடும் உழைப்பாளிகள். ஆனால், எப்பொழும் கடுகடு வென்று தோற்றமளித்து சுற்றியிருப்பவர்களை பீதியிலேயே ஆழ்த்துவார்கள்.

பன்றி  (2019, 2007, 1995, 1983, 1971)
அன்பானவர்கள். அன்பாக நம்பிக்கை வார்தைகளைச் சொல்வார்கள். அதில் முக்கால் வாசி புருடாவாக இருக்கும்.

நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் என்று தெரிந்த பின், நமது குணங்கள், வாழ்வின் நிகழ்வுகள் பற்றி சீன ஜோதிடம் என்ன சொல்கிறது எனத் தெரிந்து கொள்வது சுலபம். எல்லா விசயங்களையும் இங்கே சொல்ல முடியாது என்பதால் அடிப்படையான சில குணங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒத்து வருதான்னு பாத்துக்கோங்க. தப்பாயிருந்தா என்னைத் திட்டாதீங்க சார்.. வேணும்னா, திரு.டாங் ரோவாங் சொர்கத்துலதான் இருப்பாரு. அவரைத் திட்டிக்கோங்க.