Thursday, June 4, 2015

நாளில் நல்ல நாள்

சிறு பிள்ளைகளாய் இருந்த காலத்தில், எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் புதுக் காலண்டர் வாங்கியவுடன் முதலில் புரட்டிப் பார்ப்பது என்று ‘தீபாவளி’ வரும் என்றுதான். காலண்டர் வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து அந்த வருட தீபாவளிக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. 

கொண்டாட நினைத்தால், அதற்கான சூழல் வாய்த்திருந்தால் மனிதனுக்கு எல்லா நாட்களும் தீபாவளிதான். பண்டிகைதான். இருந்தாலும் கிருஸ்மஸில் கேக் வெட்டி, ரம்ஜானில் பிரியாணி தின்று, தீபாவளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது நம் உணர்வில் ஊறிய வழக்கங்கள்.

(Photo: K.C. Sowmish)

அதனால்தான், தீபாவளி, பொங்கல் போன்ற விசேச நாட்களை நினைத்தாலே மனம் குதூகலிக்கிறது. தீபாவளி என்றால் புது உடுப்பு துணிமணிகள் வரும், பலகாரங்கள் வரும், பட்டாசு வெடிக்கலாம் என்றெல்லம் நினைத்தாலே இனிக்கும் விசயங்கள் ஏராளம். இம் மகிழ்ச்சி குழந்தைகள் மட்டும் தான் என்பதில்லை.. பொதுவாக மனித பிறப்பே திருநாள் நோக்கித்தான் தவமிருக்கின்றன. வாழ்வின் மகிழ்ச்சிப் புதையல்கள் இத்தகு நாட்களில் திறந்து வைக்கப்படுகின்ற காரணத்தால் பண்டிகை தினங்களை நோக்கித்தான் வருடத்தின் மீதமுள்ள அத்தனை நாட்களுமே நகர்கின்றது. 

விழா நாட்கள் புறப்பொருள் சம்மந்தப்பட்ட மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, அக மன உற்சாகத்தின் தூண்டுகோளாய் அமைந்து மனிதன் மீண்டும் மீண்டும் வாழ்நாள் பாடுகளை சோர்வுறாமல் சந்திப்பதற்கு அவனைத் தயார் படுத்துகிறது. உற்சாகமளிக்கிறது. சோகங்களை முறிக்கிறது. அவனது மனஉளைச்சலுக்கு மருந்தாக அமைந்து ஓட வைக்கிறது. 

‘நல்லநாளும் பொழுதுமா இப்படியா உட்காந்திருப்ப’ என்ற ஒரு சொல் போதாதா.. உன்னை சுற்ற உள்ள உலகம் நீ எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறது என உனக்கு உணர்த்துவதற்கு? இந்த சொல்லையும் ஒரு நல்ல நாளில் சொன்னால் தானே ஆயிற்று? எல்லா நாளிலும் சொல்ல முடியுமா? சொன்னாலும் அர்த்தப்படுமா?

எனவேதான் இம்மாதிரியான கொண்டாட்டங்களை கொண்டுவரும் தினங்கள், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. பூமியோ, கிரகங்களோ, நட்சத்திரங்களோ இன்னுமுள்ள இயற்கைக் காரணிகளோ விழா நாட்களை உருவாக்கவில்லை. நாட்களுக்கு குணம் உண்டு. இருந்தாலும், எந்த நாளும் இப்படிக் கொண்டாட வேண்டும் எனும் நிர்பந்தத்தைக் கொண்டு வரவில்லை. அப்படிக் கொண்டாடப்படா விட்டாலும் அந்த நாளின் இயற்கையில் யாதொரு பங்கமுமிராது. இருந்தாலும், மனிதன் தன் ஆழ் மன தேவைகளுக்கு ஏற்ப, இன்ன நாளில் இன்ன விழா என மனிதனே உருவாக்கி, காலச்சூழலுக்கேற்ப, கிடைக்கும் சாதனங்களுக்கெற்ப விழாக்களின் கொண்டாட்ட முறையையும் வகைப்படுத்திக் கொண்டான். 

எனவேதான், விழா நாட்கள் இனம் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து, மனிதன் சார்ந்த எல்லாம் சார்ந்து வருகிறது. பின்னிருந்து நோக்கின், விழாக்கள்... மனிதனை, அவனது நிலத்தை, அவனது மொழியை, அவனது இனத்தை, அவனது கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன. மனிதனை, அவன் கொண்டாடும் விழாக்கள், அவன் இன்னார் என்று அடையாளப்படுத்துகின்றன. 

வருடப்பிறப்பும் கூட அப்படித்தான்.. ஆழ்ந்த அகன்ற மனித கலாச்சாரத்தை உரக்கச் சொல்பவை. கலாச்சார மாற்றத்தையும், திரிவையும் கூட சொல்லிச் செல்பவை.

எந்த ஒரு மனிதக் கலாச்சாரமும் மாற்றத்தையும், பிறக்கலாச்சாரக் கலப்பையும், சில சமயங்களில் அழிவையும் சந்திக்காமல் இல்லை. தொன்மை மிக்க தமிழினமும் அப்படித்தான் பல்வேறு சூழ்நிலைகளில், கால, தேச, வர்த்தமான பகிர்வுகளில் பல்வேறு சிதைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு வந்துள்ளது.

காலத்தால் இணைந்த கலாச்சாரங்கள் ஒரே நாளின் கொண்டாடத்தை வேறு வேறு பெயர்களின் கூட கொண்டாடக்கூடும். உதாரணத்திற்கு தமிழனின் திருநாளாக் கொண்டாட்ப்படும் பொங்கல் தினத்தை, மகரசங்கராந்தியாகக் வடபுலத்தார் கொண்டாடி வருகின்றனர். 

தன் உழவின் பயனை ஆதவனின் கொடையாகக் கருதி அவனுக்கு நன்றி நவிலும் நாளாக நம்மால் கருதப்படும் பொங்கலுக்கும் - மகரசங்கராந்திக்கும் ஒரே நாளில் வருகிறது என்பதைத்தவிர என்ன சம்மந்தமிருக்க முடியும்? 

Thursday, May 28, 2015

வாளாயிருக்குமா… நாள்?

இன்று ‘ரூம் பிரஸ்னர்’ பெரும் புழக்கத்தில் உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன் சகல இல்லங்களிலும் நறுமணம் கமழ வைத்தவை ஊதுபத்திகள். தற்போது அவை பூஜைப் பொருட்களாக உருமாறி, இறையருள் பெறுதற்கு தூதுப்பொருள் ஆகிவிட்டது. அதன் சராசரி நறுமண அங்கீகாரம் மாறி, தெய்வீக அங்கீகாரம் பெற்று விட்டது.  சராசரி நறுமண தேவைக்கு ரூம் பிரஸ்னர். 

அகில், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களை புகையவிட்டு வசிக்கும் அறையில் நறுமணத்தைப் பரப்புவது பண்டைய அரசவை வழக்கம். அஃதொத்து முக்கிய ஸ்தலங்களிலும், மக்கள் கூடும் கோவில் போன்ற பொது இடங்களிலும் நறுமணம் பரவி மெல்ல மக்கள் வாழ்விடங்கள் தோறும் நாசியை நிறைத்தது.

நறுமணங்களை நேரடியாகப் புகைய விடுவதில் நடைமுறைச் சிரமங்கள் அதிகம் இருந்ததாலும், சந்தனமும் அகிலும் கிடைத்தல் குறைய ஆரம்பித்த காலத்திலும், அசராத அகிலம் சிலவகைக் இயற்கலவைகளுடன் எளிய ஊதுபத்தியைக் கண்டுபிடித்து, மேற்சொன்ன பழக்க வழக்கங்களை மேற்கொண்டது. 

நவீனங்கள் பெருக ஊதிபத்தியிலும் உயர்தர நறுமணங்கள் கொண்ட பாரம்பரிய தயாரிப்பு முறையில் உற்பத்தியின் அளவு குறைந்தது. அதனை முறைப்படி தாயாரிக்கத் தெரிந்தவர்களும் அருகினர். தன் ஒற்றைக்கால் தவத்தால் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருந்த ஊதுபத்தியின் அன்றாடப் பயன்பாடு குறைந்து தெய்வப்பொருளாக மாறியது. 

தெய்வப் பொருளானாலும் தேய்வில்லாத தேவையை உடைய ஊதுபத்தி தயாரிப்பில் செயற்கைப் பொருட்களை நுழைத்து இயந்திரங்களால் தயாரித்து அழகிய உறையில் அசுர விளம்பரங்களுடன் விற்க ஆரம்பித்து விட்டது பன்னாட்டு வியாபார மூளை. ஆனால் விற்கப்படும் ஊதுபத்திகளில் ஊதுபத்தி என்ற பெயரைத்தவிர பண்டைய இயற்கை உள்ளீடுகள் எதுவும் தற்போது இல்லை. இன்றைய ஊதுபத்தியும், ரூம் பிரஸ்னரும் முழுக்க முழுக்க வேதிப் பொருட்கள்.

 எல்லாத்துறைக்கும் மேற்சொன்ன வரலாறுதான். ஜோதிடம் மட்டும் தப்பிக்குமா என்ன? மக்களிடையே ஜோதிடத்திற்கும் அபரிவிதமான தேவை இருக்கிறது. தேவையிருக்கும் துறையை மீடியா ஆதரவுடன் பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பசியுடன் சகல பித்தலாட்டங்களும் கலந்து கபளீகரம் செய்யும் என்பது மக்களுக்கும் தெரியும். அதையும் மீறிய நம்பிக்கையை இன்னமும் ஜோதிடத்தின் மீது வைத்திருக்கின்றனர். ஏனெனில், ‘நம்பிக்கை அதானே எல்லாம்!’

இந்த நம்பிக்கைகளைக் காசாக்கும் நவீன ஜோதிடத்தில் குருட்டுத் தனமாகச் சொல்லப்படும் அ~;டமியும், நவமியும் தீட்டு நாட்கள் எனும் பொய்யை நாம் திடமாக எதிர்க்கிறோம். ஆனால், நாள் எனும் காலத்துண்டிற்கு குணங்களே இல்லை. எல்லா நாளும் ஒன்றுபோல் தான் என்றும் கண்மூடித்தனமாகச் சொல்லிவிட கூடாது. 

ஒவ்வொரு நாளிற்கும் குணங்கள் உண்டு. ஒவ்வொரு பொழுதிற்கும் குணங்கள் உண்டு. இந்த குணங்கள் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இயற்கையால் விளைபவை. இந்த இயற்கையால் விளைந்த குணங்களைத்தான் முன்னர் குறித்து வைக்கத்துவங்கி நாளக்கி, வாரமாக்கி, மாதமாக்கி, வருடமாக்கி, காலண்டராக்கினர். ஜோதிடமாக்கினர். அத்தகைய ஜோதிடத்தில் குறிக்கப்பட்ட தினங்களிலும் குணங்களிலும்; அர்த்தம் உண்டு. உண்மை உண்டு. 

காலங்களின் போக்கில் மென்மையும் உண்டு. வன்மையும் உண்டு. மென் காலங்கள் எளிமையானவை. சுலபமாக செயல்பட வழிவிடுபவை. வன்காலங்கள் அத்தகயவை அல்ல. அதற்காக அவையெல்லாம் தீண்டத்தகாதவை அல்ல. கவனமாகக் கையாளப்பட வேண்டியவை. தீயை தீதென்று ஒதுக்காமல் பயன்படுத்தி வாழ்வது போல வாழத்தக்கவை. வாழ்வதற்காகவே உருவானவை. 

நெருப்பை மனிதன் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பயன்படுத்தும் விதத்தைக் கண்டுபிடித்து தன் வாழ்வை எளிதாக்கிக் கொண்டான். தன்னால் நேரிடையாகப் போரிட முடியாதவற்றை நெருப்பை கையாளத்தெரிந்த தன்மை கொண்டு உணவு முதல் உலோகங்கள் வரை தன் தேவைக்கேற்ப வனைத்துக் கொண்டான்.

அதுபோல்தான் வன்குணங்களும் மென்குணங்களும் மிக்க காலப்பொழுதை பயன்படுத்தி அதனை தன்வயமாக்கவே மனிதன், காலத்தை கண்காணித்து ஜோதிடத்தை கணித்து, காலண்டரைக் குறித்துக் கொண்டான். நாள் எனவும் தேதி எனவும் பெயரிட்டான். காலப்போக்கில் அந்தக் கணிப்புகளின் தன்மைகளைப் புரிந்து கொள்வோர் இல்லாமல்.. குணமறு கணக்குகளாகப் போய் எல்லாம் தவறுதலாகிவிட்டது. அதற்காக, நாளொன்றும் வாளாயிருப்பதில்லை. தன் குணங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது.

Friday, May 22, 2015

அஷ்டமி, நவமி… கஷ்டமி?

சிவபெருமானின் கல்யாணத்திற்கு உலகமே திரண்டு வடதிசை சென்ற வேளையில் சமநிலை காக்கும் பொருட்டு தென்திசை ஏகிய பெருமான் 'குறுமுனி அகத்தியர்'. இவர் சிவபெருமானிடமே தமிழ் கற்றதாகவும், தான் கற்ற தமிழை, தமிழகத்தில் ஸ்தாபித்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்று கர்நாடகா தரமறுக்கும் காவிரியை தன் கமண்டலத்தில் அடக்கிவைத்திருந்து, திறந்து விட்டவர் எனவும் அவருக்கு புகழுண்டு. 

அகத்தியரே இன்றுள ஜோதிட சாஸ்திரங்களுக்கு ஆரம்ப வித்து. எனவே, ஜோதிட பழக்க வழக்கங்களின் ஆரம்பக் காலம், அகத்தியர் வாழ்ந்த காலமே. அகத்தியர் வாழ்ந்த காலத்தைப்பற்றிய பல்வேறு யூகங்களும் தகவல்களும் இருந்தாலும், இவர் எழுதிய நூட்கள், அவர் பயன்படுத்திய எழுத்துக்களின் வகைகள், மற்றும் எழுதிய பாணியின் அடிப்படையில் கி.பி பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக உறுதி செய்யப்படுகிறது. இவர் எழுதிய நாடி சாஸ்திரம், சித்த மருத்துவம் உள்ளிட்ட நூட்கள் உறுதியாகக்; கிடைத்ததால், ஜோதிட கால ஆரம்பமும் பதினோராம் நூற்றாண்டாகக் கொள்வோம்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டென்பது இன்றிலிருந்து 900 வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால், தமிழர்கள் அதனினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள் என நிரூபிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. 

‘அகத்தியம்’ எனும் இலக்கண நூலையும் அகத்தியர் இயற்றி உள்ளார். பொதுவாக யாவரும் சொல்வது போல், இலக்கணத்திற்கு முன்பே இலக்கியம் இருந்திருக்க வேண்டும். இலக்கியத்திற்கு முன்பே பல்லாண்டுகள் பண்பட்டமொழி இருந்திருக்க வேண்டும். பண்பட்ட மொழி தோன்றுவதற்று முன்பே முறையான பழக்க வழக்கங்களுக்கு உட்பட்ட மனிதன் இருந்திருக்க வேண்டும். முறையான பழக்கவழக்கங்களுக்கும் உட்பட்ட மனிதன் மொழியறிவைக் கைக்கொள்ளும் போதே, நாட்களைப் பற்றிய குறிப்பையும் கண்டிப்பாக வைத்திருப்பான். ஏனெனில், சுற்றிலும் நடப்பவற்றை உற்றுக்கவனித்து பெயரிடவே மொழி பிறக்கிறது. கவனிக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது இரவும் பகலுமாகத்தானே இருக்கும்?

900 ஆண்டுகளுக்கு முந்தைய ஜோதிடம் சொல்வதுதான் அஷ்டமியும், நவமியும் ஆகாத நாட்கள் என்பதும். இந்த நாட்களில் செய்யும் காரியங்கள் நன் முடிவை தராது என்பதும்.

இந்த ஜோதிட வாதத்தை முன்வைப்பவர்கள், அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணனையும், நவமியில் பிறந்த ராமனையும் துணைக்கிழுகிறார்கள். பார்! அஷ்டமியிலும் நவமியிலும் பிறந்ததனால் கடவுளேயானாலும் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டார்கள். எனவே, அஷ்டமியிலும் நவமியிலும் எதையும் செய்யாதே என்கிறார்கள். 

சரி, அஷ்டமி, நவமியில் எதுமே செய்யக்கூடாதா? என்றால்.. செய்யலாம். அழித்தல் சம்மந்தப்பட்ட காரியங்களைச் செய்யலாம் என்கிறார்கள். அதாவது, கட்டிடம் இடித்தல், வேண்டாதவன வற்றில் தீ வைத்தல் முதலானவை.
இந்த நம்பிக்கையெல்லாம் அறிவுடைமையாகாது என்பது இந்தப் பக்க வாதம். நாளின் வரிசை உள்ளது. இந்த நாள் வரிசைக்கு பெயரிடுகிறார்கள். இந்த வரிசைப் பெயர்களின் அடிப்படையில் இது நல்லது, இது கெட்டது என எப்படி சொல்ல முடியும். எல்லாம் சுத்தப் பொய். 

மனித வாழ்வின் சாரம் என்பது நகர்ந்து கொண்டிருத்தல். இந்த நகர்ந்து கொண்டிருத்தலை ‘நம்பிக்கையும், பயமுமே’ ஆக்ஸிலேட்டராகவும், பிரேக்காகவும் இருந்து செயல்படுத்துகிறது. இதை புரிந்து கொண்ட சிலரே.. ஜோதிடம் என்னும் பெயரில் நம்பிக்கையையும், பயத்தையும் விற்று தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்கிறார்கள். எனவே, இத்தகு பயமுறுத்தலை புறந்தள்ளுவோம். அஷ்டமி, நவமி எல்லாம் எங்களுக்கு இஷ்டமி தான் என்கிறார்கள். 

இதில் நாம் எதை  கொள்வது, எதைத் தள்ளுவது என்பது அவரவர் நம்பிக்கையும், பயத்தையும் பொறுத்தது என்று சொல்லிவிட முடியாதல்லவா? எது சரிஎன முடிவுக்கு வர முயல்வோம்.

கிருஷ்ணரும் ராமரும் அஷ்டமி நவமியில் பிறந்ததனால் கடவுளேயானாலும் கஷ்டப்பட்டனர் என்பதை, அவர்கள் அஷ்டமி, நவமியில் பிறந்து கஷ்டப்பட்டதனால்தான் ‘கடவுளேயானார்கள்’ எனக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக அஷ்டமி, நவமி கஷ்டப்படுத்தும் என்பதில்லை. அது அவரவர் வாழ் சூழ்நிலை. 

- ‘நல்லோர் செய்யாததை நாள் செய்யும்’ என்பார்கள். அதாவது ஒரு காரியத்தை துவங்கக்கூடிய நாள் அறிந்து செய்தால்தான் எடுத்தகாரியம் வெற்றியாகும். மாறாகத் துவங்கப்பட்ட காரியம் வேறாகத்தான் முடியும். வள்ளுவரும் “ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்கருதி இடத்தாற் செயின்” என்று மேற் சொன்னதையே அழுத்திச் சொல்கிறார். எனவே, காரியங்களைச் செய்வதிலும் துவங்குவதிலும் நாளிற்கு முக்கிய இடம் உண்டு. இதை யாராலும் மறுக்கவியலாது.

- இதில் ‘நாள்’ என்ற சொல்லின் மீதான புரிதலைத்தான் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவரும், பழமொழியும் சொல்லும் நாள் என்பது, தினத்தின் வரிசை பெயர் கொண்ட நாள் அல்ல. அந்த ‘நாள்’ எந்த தன்மை கொண்டது என்பதைக் குறிப்பதாகும். 

அதாவது, ‘மழைநாளில் உப்புவிற்கப் போககூடாது, காற்றடிக்கும் நாளில் மாவு விற்கக் கூடாது’  என்று சொல்வார்கள். இதில் ‘நாள்’ என்பது அன்று மழைநாள் அல்லது காற்றடிக்கும் நாள் என்பதாகும். அது இல்லாமல், அன்றைக்கு திங்கட்கிழமை என்றோ.. மாதத்தில் முதல்நாள் என்பதோ அடையாளம் இல்லை. அது எந்த நாளாகவும் இருக்கலாம் ஆனால் அது ‘மழை நாள்’ அல்லது ‘காற்றடிக்கும் நாள்’. 

இது மாதிரி நாள் என்பதற்கு பல்வேறு விதமான புரிதல்கள் உள்ளன. உதாரணமாக, நமக்கு ஞாயிற்றுக்கிழமை, ‘விடுமுறை நாள்’. அந்த நாளில் எந்த அலுவலகம் சாhர்ந்த வேலையோ, அரசு சார்ந்த வேலையோ நாம் செய்வதில்லை. செய்ய நினைத்தாலும் நடப்பதற்கில்லை. 

ஒரு பத்திரம் முடிக்க இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு மே-24ம் தேதி நல்ல நாளாக படுகிறது என்று சொன்னால், உடனே அருகில் இருப்பவர் ‘வேணாங்க அன்னைக்கு, ஞாயித்துக்கிழம. வேலைக்கு ஆகாது’ என்று சொல்வார். இதுவே பின்நாளில் புழக்கத்தில் ‘ஞாயித்துக்கிழம, வேலைக்கு ஆகாது’ என்று மட்டும் பழகிப்போகும். இந்த பழக்கம் மெல்ல வழக்கமாகி ஞாயிற்றுக்கிழமை மேல் ‘தீட்டை’ எற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையில் பிறந்த அவதாரம் பற்றிய கதை வரவும் வாய்ப்பிருக்கிறது. (விடுமுறை நாளை கொண்டாட்ட நாளாக்கி, தன் பிழைப்பைப் பெருக்கும் இம்மாதிரி அரசியல், பற்றி பேசினால்…. வேண்டாம்!) ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ம…….ர்களுக்கு, அப்போதைய காலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற வழக்கம் இல்லாமல் போய்விட்டாலும் கூட, அன்றிருக்கும் ‘ஃபார்ச்சூன் அட்வைசர்’ ஞாயிற்றுக்கிழமை நல்லநாள் இல்லை என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.

இதே மாதிரிதான், அஷ்டமியும் நவமியும் முன்னோர்களின் ஓய்வு தினங்களாக இருந்திருக்கலாம். அந்நாளில் எக்காரியமும் செய்ய முனையாமல் இருந்திருக்கலாம். நமது காலத்தில் தீட்டு தினங்கள் என கதைக்கப்படுகின்றன. 

Thursday, May 14, 2015

நீளும் நாட்கணக்கு!



காற்றிற்கும், புயலுக்கும் கூட பெயரிடுவது ‘தானே!’ இப்போது பேஷன். நாளிற்கும் பெயருண்டு நமது காலண்டரில். 

புவியின் சுழற்சியுடன் நாட்கள் நகர்கின்றன. நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன. சென்ற நாட்கள் ஒரு போதும் மீள்வதில்லை. இருந்த போதிலும் வரிசையாக நகரும் நாட்களை ஒரு சுற்றாகச் செய்வது காலண்டர்தான். நாம் நாட்களை அடையாளப்படுத்தி, அவற்றிற்கு இன்ன நாள், இன்ன தேதி என பெயரிட்டு மீண்டும் மீண்டும் வரச்செய்து பயன்படுத்துவதால்தான் மனித வாழ்விற்கு அர்த்தம் வருகிறது. பிறந்தநாள் முதல் இறந்தநாள் வரை குறிப்பிடப்பட்ட எல்லா முக்கிய நாட்களும் கொண்டாட்டங்களையும், சோகங்களையும் சுமந்து சுழன்று மனித வாழ்வைப் பொருளுடைய தாக்குகிறது. நாள் என்ற ஒன்றிற்கு மனிதன் தேதியென்ற அடையாளம் இடாவிட்டால்.. மனித வாழ்வென்பது மலராமல் போயிருக்கும். திசையற்றுப் போயிருக்கும். 

அட..ட..ட..டா தேதியின் எண்கள் சுற்றுப்பாதையில் வருவதுபோல், நாமும் எத்தனை தடவைதான் காலண்டரின் சிறப்புக்களை வியந்தாலும் வியந்து கொண்டே இருப்போம் போல.

- மாதத்திற்கு முப்பது நாட்கள் என கண்டோம். சில மாதங்களுக்கு முப்பத்தியோரு நாளும், பிப்ரவரி மாதத்திற்கு இருபத்தியெட்டு நாளும், அது ‘லீப் இயர்’ என்றால் இருபத்தியொன்பது நாளும் வரிசை எண்களிட்டு ஆங்கில காலண்டரில் வருகிறது. நமது நடைமுறையிலிருக்கும் தமிழ்க்காலண்டரின் நாட்களுக்கும் நம்பர்தான் பெயராக இடப்பட்டு அழைக்கப்படுகிறது. இவையும் சற்றேரக்குறைந்த சராசரியாக முப்பது நாட்களைக் கொண்டவை.

ஆனால், பழம் வழக்கத்திலிருந்த நிலவுசார்ந்த தமிழ்க்காலண்டரில் பதினைந்து நாட்கள் என்பது ஒரு வரிசைக் கணக்கு. பதினைந்து நாட்கள் வரைதான் பெயர். அம்மாவசையிலிருந்து பௌர்ணமிவரை ஒரு வரிசை. பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை வரை ஒரு வரிசை. இரண்டு வரிசைகளும் சேர்ந்தது ஒரு மாதம். இந்த இருவரிசைக் கணக்கெடுப்பு முறையென்பது நாம் ஆரிய வருகைக்கான காலம் என்று குறிப்பிடப்படும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட காலங்களுக்கு முன்னதாகவே இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும், இம்முறையில் நாட்களுக்கான பெயர்கள் வடமொழியில் தான் இருக்கிறது.

நமது உசிலம்பட்டியில் பிறந்த ஒரு குழந்தைக்கு ‘சந்தரபோஸ்’ எனப் பெயரிடப்படுமானால், அவன் வங்காளி ஆகிவிடமாட்டான் அல்லவா? தமிழனுக்கு எப்படி வங்காளப்பெயர் சாத்தியமோ, அதுபோல் தமிழ்நாட்களின் முறைகளுக்கும் வடமொழிப்பெயர் சாத்தியம். எனவே, ஒரு மொழியில் பெயரிடப் பட்டிருப்பதாலேயே முறையாக ஆய்விடாமல் எதையும் இது இவர்களின் சொத்து என அரிதியிட்டு கூறிவிட முடியாது.

பெயர் - அம்மாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கிச்செல்லும் நாள் வரிசைக்கு ‘சுக்ல பட்சம்’ என்று பெயர். பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை நோக்கிச் செல்வதற்கு ‘கிருஷ்ண பட்சம்’ என்று பெயர். இரண்டு பட்சத்திற்கும் குறைந்த பட்சம் பதினைந்து நாட்கள். அதிக பட்சமும் அதேதான்.

பட்சத்தின் முதல் நாள் - பிரதமை
இரண்டாம் நாள் - துவிதியை
மூன்றாம் நாள் - திரிதியை
நான்காம் நாள் - சதுர்த்தி
ஐந்தாம் நாள் - பஞ்சமி
ஆறாம் நாள் - சஷ்டி
ஏழாம் நாள் - சப்தமி
எட்டாம் நாள் - அஷ்டமி
ஒன்பதாம் நாள் - நவமி
பத்தாம் நாள் - தசமி
பதினொன்று - ஏகாதசி
பனிரெண்டு – துவாதசி
பதின்மூன்று - திரயோதசி
பதினான்கு – சதுர்த்தசி
பதினைன்நது – பௌர்ணமி (அ) அம்மாவாசை

இவை நாட்களின் பெயர்கள். வடமொழியில் வரிசை எண்கள். இவை அன்றாட வாழ்வின் செயல்பாட்டில் இன்ன காரியத்தை இன்ன நாட்களில் செய்யலாம் என தீர்மானிப்பதில் மட்டுமின்றி, சமய வழிபாடுகளிலும் சடங்குகளிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. நாள்களின் தண்மையைக் கணக்கிடாமல் இந்து சமய வழிபாடுகள் நடப்பதில்iலைதான். எனினும் ‘நாள் என் செய்யும், கோள் என் செய்யும்.. நாதன் துணையிருக்கையிலே’ என்பதும் சமயச்சான்றோன் நவின்றதுதான்!

சமயச்சடங்குகளில் நாளின் ஆதிக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். நம்புலத்தார் வாழ்வில் இந்த நாட்கள் குறிப்பிடப்பட்டால் பரவாயில்லை. குறுக்கிட்டால் என்ன செய்வது? அஷ்டமியும், நவமியும் அப்படியென்ன தவறிழைத்தவை?

Thursday, May 7, 2015

நாள் என்ற ஒன்று!

“நாள்என்று ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
- எனும் குறள், எப்போதும் என்னைப் பதறவைக்கும். ‘ஒவ்வொரு நாளும் ஓரு கூரிய வாளாய்;, வாழும் உயிரை அறுத்துக்கொண்டிருக்கிறது’ எனும் வள்ளுவரின் இந்த வாக்குதான் உண்மையிலும் உண்மை. ஆகையால் நாளெனும் நல்வாள், நம் வாழ்நாளை முற்றிலும் அறுத்தெரியும் முன்னர், நம்மை சுற்றித்தாங்கும் ஜீவ சுற்றத்திற்கு நன்மையே செய்திட முயல்வோம்.

- காலம் என்பது ஆண்டு, மாதம், வாரம் எனப்பல தொகுப்பாக இருப்பினும் அவையெல்லாம், நாள் என்னும் ‘கண்ணி’களைக் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைதான். இன்றைக்கு, நாள் என்ற ஒன்றினை நாம் ‘மணி’நேரங்களாகப் பிரித்துப் பயன்படுத்துகிறோம். இது நாம் காலக்கணக்கின் அடிப்படைத் தன்மையை, நமது அன்றாட வேலை ஒழுங்கினை மிக நேர்த்தியாகச் செய்த கொள்ள உதவுகிறது.

நவீன வாழ்வோட்டத்தின் அடிப்படையான செயல்வகை ஒப்பந்தங்கள் (கமிட்மெண்டுகள்), தீர்மானங்கள், நேரங்களைச் சுட்டி குறிக்கப்படுகின்றன. இன்றைக்கு நாம் மணிநேரங்கள் இல்லாத நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பிய காதலியின் கோபம் கூட, அவனது ‘லாஸ்ட் சீன்’ டைம் பார்த்துத்தானே எழுகிறது. எனவே, நேரத்தோடு இயங்குகிற வாழ்வே சீரான வாழ்வாகிறது. நேரம் கெடும்போது சகலமும் கெட்டுவிடுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக் கோள்ளும் நேரமான ஒரு நாளை  இருபத்திநான்கு(24) கூறுகள் இட்டுக் கொண்டுள்ளோம். இந்தக் கூறுகள் மணி நேரங்கள் ஆகும். அதாவது, ஒரு முழு நாள் பொழுதினை இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரித்தால், அவற்றின் ஒவ்வொரு தனிப்பிரிவும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த மணியும் அறுபது நிமிடங்களான கூறாகவும், ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடிகள் அடங்கலாக, மொத்தம் மணிக்கு 3600 வினாடிகள் என சிறுகூறாகவும் பிரித்துக்கொண்டுள்ளோம். இன்றும் நுண்ணிய கூறுகளாக ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தி வந்தாலும் மேற்கூறியவைகளே பொதுவாகப் புழக்கத்தில் இருக்கும் பிரிவுகளாகும்.

நேரத்தின் அடிப்படையில்தான் நாம் வாழும் பூமியையும் அளவிட்டு வைத்துள்ளோம். வரலாறு, காலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல, புவிஅமைப்பை பற்றிய அறிவியலும் (புவியியல்) காலத்தின் அடிப்படையில் தான் குறிப்பிடப்படுகிறது. 

பூமியின் நெட்டுவாக்கில் (Vertical) நாம் 23 கற்பனைக் கோடுகளைப் போட்டு வைத்துள்ளோம். இவை தீர்க்கரேகைகள். இந்த 23 தீர்க்க ரேகைகளுக்குமான இடைவெளிகளின் எண்ணிக்கை 24. இந்த இடைவெளியென்பது, பூமி தன்னைத்தானே சுற்றும் போது ஒரு மணிநேரத்தில் கடக்க அல்லது சுற்ற ஆகும் தூரம் ஆகும். இந்த தீர்க்க ரேகைகளின் அமைவில் நிலப்பரப்பும் கடல் பரப்பும் அளவிடப்படுகிறது, ஆராயப்படுகிறது.

இந்த தீர்க்க ரேகைகள், நாளால் தோன்றி கோளை அளக்கிறது என்றால், பூவியின் மேற்பரப்பின் குறுக்காக (Horizontal) கற்பித்துக் கொண்டுள்ள, அட்ச ரேகைகளும் பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகையும், மகரரேகையும், கடக ரேகையும் சொல்வன ஏராளம். இந்த அட்ச ரேகைகள் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. 

பூமி சுற்றும் நேரத்தின் அடிப்படையில் தீர்க்க ரேகைகள் உருவாயின என்றால், பூமி சுற்றும் கோணத்தின் அடிப்படையில் அட்சரேகைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பூமி தன் அச்சிலிருந்து சாய்ந்து சுற்றுகிறது என்பது நாம் அறிந்ததே! இவ்வாறு சாய்ந்து சுற்றுவதின் அடிப்படையில், பூவியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் கோணமும் நீளமும் மாற்றமடைகிறது. இம் மாற்றங்களினால்தான் பருவகாலங்களும் மாற்றம் பெருகிறது. பருவ காலங்களின் மாற்றம்தான் முதல் முதலின் மனிதனின் கவனத்திற்குட்பட்டு ஆரம்ப கால காலண்டர்களை தோன்றின என்பதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, இந்த அட்சரேகைகள் காலண்டர்களின் சுற்றோட்டத்தில் சேர்ந்து சுழல்கிறது என்றால் மிகையாகாது. இவற்றைப்பற்றி விரிவாக இனிவரும் தொடர்களின் காணத்தானே போகிறோம்.

இப்போது நாம் நாட்களைப் பற்றி கவனித்துக்கொண்டிருக்கிறோம். உட்பிரிவுகள் அடங்கிய நாளும், நாட்கள் அடங்கிய வருடங்களையும் நாம் ஆங்கில காலண்டர் முறையில், எண்களிட்டு அழைக்கிறோம். அனால் மாதங்களுக்கு முழுமையான அர்த்தார்த்தமான பெயர்கள் இருப்பதை கவனியுங்கள். இவை, யோசிக்குங்கால் நமக்கு புலனாவது ஒன்று, தற்போதைய ஆங்கிலகாலண்டர் பல ஆரம்ப கால இனக்குழுக்கள் பயன்படுத்தி வந்த காலண்டர்களின் தொகுப்பே.

 ஆனால், பயன்பாட்டிலிருக்கும் தமிழ்க்காலண்டரில் மாதங்களுக்கு இருப்பது போல் நாட்களுக்கும், வருடங்களுக்கும் பெயரிட்டுள்ளது எதையோ உணர்த்துகிறதல்லவா? 

Wednesday, April 29, 2015

நாள் - வாரம் - மாதம் - ஆண்டு!

காலண்டர் கணக்கீட்டினைத் பல்வேறு வகையாகவும் தொகுத்தலென்பது, தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இக்கட்டின் அடிப்படைக் கண்ணி ‘நாள்’ என்பதாகும். ஒரு பகலும், ஒரு இரவும் ஒரு நாள். ஒரு நாளுக்குள்ளும் மணிநேரமென்றும், நிமிடமென்றும், நொடிகளென்றும் உட்பிரவுகள் உள்ளன. இந்திய, தமிழமுறையில் நாளென்பது நாழிகையால் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்கத்திலிருக்கும் ஆங்கில கணக்கீட்டின் படி நாளென்பது நள்ளிரவில் துவங்கி நள்ளிரவில் முடிகிறது. ஆனால், தமிழ்சார் காலக்கணக்கில் ஆதவன் உதிக்கும் நேரத்தில் துவங்கும் முழுப்பகலும், தொடரும் முழு இரவும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஆங்கிலத்தைப் போல், ஒரு அரையிரவும் பின் வரும் பகலும் மறு அரையிரவும் அல்ல.

மீண்டும் கவனிக்கவும், சூரியனின் துவக்கத்திலேயே தமிழரின் நாள் துவங்குகிறது. இரவின் நடுவில் அல்ல. ஏன் இதை கவனத்தில் கொள்ளச்சொல்கிறேன் என்றால், ஆண்டுத்துவக்கத்தைப் பற்றிய உறுதிப்படுத்தலிலும் தமிழனின் ஆரம்பத்தில், ஆரம்பிக்கும் இக்குணத்தைக் கொண்டே, இறுதியில் நாம் ஒரு முடிவுக்கு வர இருக்கிறோம். (பின்னே, இறுதியில் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்!)

- மாதங்களை மாதர்கள் பயன்படுத்தத் துவங்கியதை அறிந்தோம். இந்த மாதங்கள் பன்னிருமுறை சுழல ஒரு முழு ஆண்டு நிறைவடைகிறது. இம்மாதங்கள் சூரிய அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது. உண்மையில், சந்திர அடிப்படையான மாதங்கள், சூரியனைச் சுற்றும் பூமியின் பாதையின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சந்திரமாதங்கள், சூரிய மாதங்களாக பொருத்திச் சொல்லப்படுகிறது. இந்தப் பொருத்துதலின் அடிப்படையில்தான் ஆண்டுதுவங்கும் மாதத்திற்கான கணக்கீடும் உள்ளது.

அதாகப்பட்டது சந்திர மாதங்கள், சூரியச்சுற்றில் பன்னிரு முறை வருகிறது. எனவே, பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப்பாதையை பன்னிரு பிரிவுகளாகப் பிரித்து, பெயரிட்டு அவை சூரிய மாதங்களாக்கப்படுகிறது. இதில் ஆரம்பகால (மூட) நம்பிக்கையான பூமியை சூரியனும், சந்திரனும் சுற்றிவருகின்றது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். பூமியில் இருந்த மனிதன் தானிருக்கும் புள்ளியை (அதாவது பூமியை) மையமாகக் கருதி, தன்னிலிருந்து பிற கோள்களின் பெயர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதால் இந்த தோற்றப்பிழை.

இதன்படியும், பூமியை சூரியன் சுற்ற எடுத்துக்கொளும் கால அளவும் ஓராண்டு. இந்த ஓராண்டுச்சுற்றுத்தளம் 30 டிகிரி பாகையாக (30 x 12 =360 டிகிரி) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் இராசியாக குறிக்கப்படுகிறது. எனவே, ஒரு ஆண்டு முழுமைக்காக சூரியன் இந்த பன்னிரு இராசிகள் வழியாகவும் நுழைந்து பயணிக்கிறது. இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசியையும் கடக்கும் காலமே ‘சூரிய மாதம்’ என்றழைக்கப்படுகிறது.

இந்;த சூரியமாதத்தையும் (இராசிகளையும்), சந்திரமாதத்தையும் நட்சத்திரங்கள் இணைக்கிறது. பொதுவாக நட்சத்திரங்கள் எண்ணிறைந்து உள்ளது. எனினும்;, ஆதிமனிதன் அவதானிப்பின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் முக்கியமானதாக குறிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத் தொகுப்பிற்கும் புவியில் உலவும் ஜீவராசிகளின் உருவ அமைப்பிற்கும் உள்ள பொருத்தத்தின் அடிப்படையில் இராசிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மேசம், ரிசபம் முதல் மீனம் வரை. (என்னா.. கிரியேட்டிவிட்டி!)

சந்திர மாதங்களுக்கான பெயர்கள், ஒரு சூரிய மாதத்தில் அதாவது ஒரு இராசியின் காலத்தில் சந்திர (முழுநிலவின் போது) பௌர்ணமி அன்று உதிக்கும் நட்சத்திரத்தைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக சூரிய மாதமான மேச இராசியில், பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரமான ‘சித்திரை’ என்பது குறிப்பிட்ட சந்திர மாதத்திற்கான பெயராகும். இதற்கான பட்டியில் பின்வருமாறு.
thanks : wikipedia.

இவையெல்லாம் மாதங்களைப் பற்றிய மேலெருந்த வாரியான குறிப்புகள். தவிரவும், காலண்டர் கணக்கீட்டில் மாதம் எனும் கட்டினைவிட சிறுபிரிவான வாரங்கள் எனப்படும் கிழமையும் உண்டு. கிழமை என்பது ஒளிரும் கோள் வரிசையான் அமைந்த முழுமை எனப் பொருள்பெறும். கிழமைகள் பெரும்பாலும் மதச்சடங்குகளும், அதற்கொப்ப வானியல் அறிவும் தொடங்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது. மாதத்திற்கான தேவையும், அதன் வானியல் தொடர்பும் வெளிப்படையானது. ஆனால், கிழமை எனப்படும் வாரத்திற்கான தேவையென்பது சற்று நுட்பமானது.

கோள்களைக் கண்டது மட்டுமல்லாது அவற்றின் குணங்களையும், அவை மனிதன் மீதான தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துகின்றன எனும் அறிவையும் ஆரம்ப கால மனிதன் பெற்றிருந்தான் என்பதும், அவற்றையே வழிபடு பொருளாக அமைவு செய்து, தன் உணர்விற்கும், உணர்ந்தவற்றிற்குமான தூரத்தை அறிவினால் தைத்தான் என்பதையும் உணர்ந்து, உணர்ந்து மெச்சலாம். அதுமட்டுமில்லாமல் இவையெல்லாம் உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும், இந்திய தேசத்தின் அறிவுசார் கொடையென்பது உள்ளபடியே, நம் பெருமை!

- ஆதிமனிதன் கிரகங்களையும் அதன் சுழற்சிப் போக்கையும் யுகித்து அறிந்திருந்தான். அவன் கண்ட ஒளிரும் கிரகங்கள் ஐந்தும் யாதெனின், செவ்வாய், அறிவன்(புதன்), குரு(வியாழன்) சுக்கிரன்(வெள்ளி), அடுத்தது காரி அல்லது மந்தன்(சனி). இவற்றோடினைந்த பகற்கோள் சூரியன். இராக்கோள் சந்திரன். ஆக ஏழும் சேர்ந்தது ஒரு வாரம். இவ்வாரக்கட்டுக்கள் மாதங்களை ஒட்டாமல் மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக சுழன்று கொண்டிருக்கிறது.

 இச்சுழற்ச்சியின் அடிப்படையில் ஐம்பத்தியிரண்டு வாரங்கள் அல்லது கிழமைகள் கொண்டது, ஒரு ஆண்டு.

ஆக, - சூரியனின் ஒரு முழுச்சுற்று ஓரு ஆண்டு.
-    சந்திரனின் ஒரு முழுச்சுற்று ஒரு மாதம்.
-    கோள்களின் வரிசைக்கிரமம் ஒரு வாரம்.
-    பூமி தன்னைத்தானே சுற்றும் ஒரு சுற்று நாள்.

Thursday, April 23, 2015

மாதா மாதங்கள்!

ஏப்ரல் முதலிலிருந்து முட்டாள்கள் தினம், சித்திரை தமிழ்புத்தாண்டா.. என்பதனைப் பற்றிய விளக்கங்களினால்.. நாம் ஆரம்பத்திலிருந்து விளக்கிவந்தில் சற்று விலகிப் போய்விட்டோம். எந்த ஒரு பெருங்கதைக்கும் கிளைக்கதைகளும் உண்டல்லவா? அது போக நாம் பயணித்துக் கொண்டிருப்பது காலண்டர் கதைகளுடன்.. வாழ்ந்து கொண்டிருப்பது காலண்டரில் குறிக்கப்பட்ட கதைகளுடன். எனவே அப்பப்போ குறிக்கப்பட்ட கதைகளையும் பற்றி கவனித்துக் கொள்ளுதல் இயல்பானதுதானே?

நேற்றுக்கூட அட்சயதிருதியை.. அதைப்பற்றியும் கூட பல்வேறுகருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் நாம் பார்க்கப்போவதில்லை. ஏனெனில், நாம் பார்த்துக்கொண்டிருப்பது வரலாற்றுக்குறிப்புகளே! நம்பிக்கையின்பாற் பட்டவைகளைப் பற்றியல்ல. நாம் தஞ்சைப் பெரியகோவிலை வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கலாம், ஆன்மீக தளமாவும் பார்க்கலாமென்றால்.. இங்கு நாம் காண்பது முதற்கண் கொண்டே! 

- கிரேக்கத்தில் தான், தற்போதைய காலண்டர்களின் ஆரம்பம் என்று பார்த்தோம். கிரேக்க காலண்டர்களின் மாதங்கள் இருந்ததையும் கவனித்தோம். இதில் ஆண்டு என்பது பூமி, சூரியனைச் சுற்றும் ஒரு முழுச்சுற்றிற்கான காலம். மாதம் என்பது பூமியை நிலா ஒரு சுற்றுசுற்ற எடுத்துக்கொள்ளும் காலம். இதில் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட வாரக்கணக்கு, இந்தியாவின் கருத்தியல் கொடை. அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கிரகங்களும் கோள்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்மோர் உணர்ந்திருந்தது ஆச்சர்யமல்லவா? வாரங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் குணநலன்களையும் அரிதியிட்டு வைத்திருப்பதும் சிறப்பேதான். 

வாரங்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக பல்வேறுவகையிலும் நாட்களைக் தொகுத்துக் கட்டிவைத்ததின் துவக்கம் மாதங்களில்தான் துவங்குகிறது. காலண்டரின் துவக்கமான கதை இதுவாகத்தான் இருக்கும் என ‘ஹெராடட்டஸ்’ உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் ஒப்புக்கொள்ளும் கதை இதுவே.
Photo : Tecfa education & technologies.

வரலாற்றின் மகத்தெளிவான பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நாட்களுக்கான பதிவுகள் தொடங்கிவிட்டன. நீண்ட தலையும் சப்பை மூக்கும் கொண்ட ‘நியாண்டர்தால்’ மனித இலம் கலாச்சார மேம்பாடுகளில் காலெடுத்து வைத்த காலம். வேட்டையாடி மனிதனாக இருந்த அவனுக்கு பெண்ணே சகலமுமாக இருந்தான். பெண்ணின் ‘படைக்கும் திறன்’ மீதான பிரமிப்பு அவனை வெகுவாக ஆட்டுவித்திருந்தது. ஆண்கள் பெரும்பாலும் திசையற்ற வேகத்தில் அலைந்து திரிபவர்களாக இருந்த காலத்தில் பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகமாக இருந்தது.

பெண், குழந்தையைப் ஈனுபவளாதலால் அவைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், ஆண்களால் வேட்டை உணவு கொண்டு வர இயலாத காலத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய அத்யாவசியமும் பெண்ணையே சார்ந்திருந்தது. எனவே, பெண்கள் தங்கள் வற்றாத உணவுத்தேவையின் பொருட்டு தாவர உணவை சேகரிப்பவர்களாகவும், மறு பயிரிடுதலின் தேவையை உணர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பெண்ணால் கண்டடையப்பட்ட பயன்படுத்திய தாவர வித்தின் மறுபயிரிடுதலை, ஆண் பயின்று செயல்படுத்தியபிறகு முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான விவசாயமாகவும், ஆத்தோர நாகரீகத்தின் துவக்கமாகவும் மாறியது.

தேவையே கண்டுபிடுப்பின் தாய் ஆதலால், தாயின் தேவைகள் அவளைக் கண்டுபிடிப்பாளியாக் செய்தது. கூரிய கவனிப்பும், நுட்பமான பிரதிப்படுத்தலும், பிறரையும் கற்றுணரச்செய்தலும் வல்லவளான தாய், சமுதாய பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமானதான சுயகுறிப்பெடுத்தலையும் செய்தாள்.

தனது தேவைகளை, உணர்வுகளை, உணர்ந்தவைகளை பெண் குறித்துவைக்கத் தவறினாளில்லை. ‘விவேகமான காயம்’ என அறிஞர்களால் விவாதிக்கப்படுவதும், ‘மனித சமுதாய உற்பத்தி வங்கி’யும், தனது சுய அடையாளங்களில் தலையாயதுமான தனது மாதவிடாய்ச் சுழற்சியை அவள் பதிவு செய்தாள். ஆரம்பகால குகைளில் பல்வேறுபட்ட நில அமைப்புகளிலும் காணப்பட்ட தொகுப்பு தொகுப்பான கீறல்களும், குறியீடுகளும் மாதர்கள் கண்ட மாதங்களை உணர்த்துகின்றன. மேலும் சந்திரனின் தேய்பிறை, வளர்பிறைகளுக்கும் தனது உடல் மாற்றங்களுக்குமான தொடர்பையும் பெண்ணே கண்டறிந்தாள்.

மனிதனின் உயர்வு என்கிற தொடரில் பனிப்பிரதேச மான் கொம்பு ஒன்றில் முப்பது நாட்களைக் கொண்ட மாதச்சுற்று காணப்படுவதாக பதியப்பட்டது. இரு பல்வேறு ஆராய்ச்சியாளர்களிடையே உலகலாவிய தர்க்கங்களுக்கு அடிகோலியது. இதனைப் பற்றிய கருத்தாய்வுகளின் முடிவில், இதில் காணப்படும் குறியீடுகளின் அடிப்படையில் இது சந்திரனின் சுற்றாக இருக்கலாம் என்றும், பெண் உதிரப்போக்கின் குறியீடாக இருக்கலாம் என்றும், இரண்டுமாகவும் இருக்கலாம் என்றும் ஐயமின்றி! அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக, இந்த மாதங்களை ஆரம்பித்தது மாதர்கள் என்பதால், மாதா மாதம் சம்பளம் வாங்கும் எல்லோரும் மாதாவிடம் கொடுத்துவிடுங்கள்!